Jun 19, 2014

திருமண பொருத்தம் நீங்களே பார்க்கலாம்

திருமண பொருத்தம் நீங்களே பார்க்கலாம்


திருமணம் என்பது ஆயிரம் காலத்துப்பயிர் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதனால் தான் பார்த்துப்பார்த்து செய்வார்கள். குறிப்பாக ஜாதகப்பொருத்தத்தை  கவனமாக பார்ப்பார்கள். அந்த வகையில் திருமண பொருத்தத்தை நீங்களே (வாசகர்கள்) அறிந்து கொள்ள இதோ டிப்ஸ்...

1. தினப் பொருத்தம்: 


மணப்பெண்ணின் நட்சத்திரத்திலிருந்து துவங்கி, மணமகன் நட்சத்திரம் வரை எண்ணி, அந்தக் கூட்டுத் தொகையை ஒன்பதால் வகுத்தால், ஈவு 2,4,6,8,9 என்று  வருமானால் இருவருக்கும் தினப்பொருத்தம் உண்டு. இதுதவிர பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணிக்கொண்டு வரும்போது அந்த எண்  தொகை 2,4,6,8,9,11,13,15,17,18,20,22,26,27 என்று வருமானால் இதுவும் தினப்பொருத்தம்தான். இருவருக்கும் ஒரே நட்சத்திரம் இருந்தாலே தினப்பொருத்தம்தான்.  ஆனால், பரணி, ஆயில்யம், சுவாதி, கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், பூரட்டாதி நட்சத்திரங்கள் இருவருக்கும் ஒன்றாக இருந்தால் இது பொருந்தாது.  மணமகனுக்கும், மணமகளுக்கும் ஒரே ராசியாக இருந்து, அதில் மணமகனுடைய நட்சத்திரம் முதலில் இருக்குமானால், இதுவும் சரியான பொருத்தம்தான்.

2. கணப் பொருத்தம்: 

தேவகணம், மனித கணம், ராட்சஸ கணம் என்று மூன்று கணங்கள் உள்ளது. தேவகணத்தில் அசுவினி, மிருக சீரிஷம், புனர்பூசம், பூசம், ஹஸ்தம், ஸ்வாதி,  அனுஷம், திருவோணம், ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் அடங்கும். மனித கணத்தில் பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம்,  பூரட்டாதி, உத்திரட்டாதி ஆகியவை அடங்கும். ராட்சஸ கணத்தில் கார்த்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம்  இவை அடங்கும். மணமகன், மணப்பெண் இருவரும் ஒரே கணத்தைச் சேர்ந்தவர்களானால், இருவருக்கும் திருமணம் செய்யலாம். இருவரும் ராட்சஸ  கணத்தவராக இருந்தால், மணமகளின் நட்சத்திரத்திலிருந்து மணமகனுடைய நட்சத்திரம் பதினான்காவதாக இருக்குமானால், கணப்பொருத்தமாகும்.

3. மகேந்திரப் பொருத்தம்: 

பெண் நட்சத்திரம் துவங்கி, ஆண் நட்சத்திரம் முடிய வரும் எண்ணிக்கை 4,7,10,13,16,19,22,25 என்று அமையுமானால் இது மகேந்திரப் பொருத்தம் எனப்படும்.  இதன் மூலம் புத்திர பாக்கியம் நிறைவானதாக இருக்கும்.

4. பெண் தீர்க்கப் பொருத்தம்: 

மணப்பெண் நட்சத்திரம் துவங்கி, மணமகன் நட்சத்திரம் வரையிலான எண்ணிக்கை ஏழுக்கு மேல் இருக்குமானால் பெண் தீர்க்கப் பொருத்தம் உண்டு என்று  கொள்ளலாம். 13க்கு மேல் இருப்பின், மிக மிகப் பொருத்தம்.

5. யோனிப் பொருத்தம்: 

ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் ஒரு மிருக அம்சம் உண்டு. அதாவது, அசுவினி, சதயம் -குதிரை; பரணி, ரேவதி - யானை; கார்த்திகை, பூசம் - ஆடு; ரோகிணி,  மிருக சீரிஷம் - பாம்பு; திருவாதிரை, மூலம் - நாய்; புனர்பூசம், ஆயில்யம் - பூனை; மகம், பூரம் - எலி; உத்திரம், உத்திரட்டாதி-  பசு; ஹஸ்தம், சுவாதி -  எருமை; சித்திரை, விசாகம் - புலி; அனுஷம், கேட்டை  -மான்; பூராடம், திருவோணம் - குரங்கு; உத்திராடம் -கீரி; அவிட்டம், பூரட்டாதி  -சிங்கம். இந்த  மிருக அம்சங்களில், குதிரை- எருமை, யானை- சிங்கம், ஆடு- குரங்கு, பாம்பு -எலி, பசு - குதிரை, எலி- பூனை, கீரி- பாம்பு, மான்-நாய் ஆகிய இவை  ஒன்றுக்கொன்று பகையாகும். இந்த எதிர் அம்சங்கள் இல்லாத வகையில் பிற மிருக அம்சங்கள் ஒன்றுக்கொன்று இணையுமானால், அது யோனிப் பொருத்தம்  என்று சொல்லப்படுகிறது. இல்லற இன்பம் நிலைத்திருக்க இந்தப் பொருத்தம் அவசியம்.

6. ராசிப் பொருத்தம்: 

மணப்பெண் ராசியிலிருந்து மணமகனின் ராசி வரையிலான எண்ணிக்கை ஆறுக்கு மேற்பட்டால் அது ராசிப் பொருத்தம். எண்ணிக்கை எட்டாக இருத்தல்  கூடாது. மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் இவை பெண் ராசி யாக அமையுமானால் ஆறா மிட தோஷம் இல்லை என்று கொள்ளலாம்.  அதேபோல ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் இவை பெண்ணுக்குரிய ராசியானால் இதற்குப் பன்னிரண்டாவது ராசியாக ஆண் ராசி  அமைந்தால், பன்னிரண்டாமிட தோஷம் இல்லை என்று கொள்ளலாம். இந்தப் பொருத்தம் ஆண் வாரிசுக்கு வழி வகுக்கும்.

7. ராசி அதிபதிப் பொருத்தம்: 

மணமகன், மணப்பெண் இருவருக்கும் ஒரே அதிபதியாக அமைந்துவிட்டால் அது சரியான பொருத்தம். அல்லது இரு அதிபதிகளும் நட்பானவர்களாக இருந்தால்  விசேஷம். பகை அதிபதிகளாக இருத்தல்கூடாது.

8. வசியப் பொருத்தம்: 

ராசிகளில் உடன்பாடானவை, அல்லாதவை என்பதை அறிந்து பொருத்தம் அறியலாம். மேஷத்துக்கு  சிம்மம், விருச்சிகம்; ரிஷபத்துக்கு  கடகம், துலாம்;  மிதுனத்துக்கு  கன்னி; கடகத்துக்கு  விருச்சிகம், தனுசு; சிம்மத்திற்கு  துலாம்; கன்னிக்கு  மிதுனம், மீனம்; துலாமுக்கு  கன்னி, மகரம்; விருச்சிகத்திற்கு   கடகம், கன்னி; தனுசுக்கு  மீனம்; மகரத்துக்கு  மேஷம், கும்பம்; கும்பத்துக்கு  மேஷம், மீனம்; மீனத்துக்கு மகரம் என்று வசியப் பொருத்தம்  சொல்லப்பட்டிருக்கிறது.

9. ரஜ்ஜுப் பொருத்தம்: 

அசுவினி, மகம், மூலம் ஆரோகபாத ரஜ்ஜு, ஆயில்யம், கேட்டை, ரேவதி  அவரோகபாத ரஜ்ஜு; பரணி, பூரம், பூராடம் ஆரோக தொடை ரஜ்ஜு; பூசம், அனுஷம்,  உத்திரட்டாதி  அவரோக தொடை ரஜ்ஜு; கார்த்திகை, உத்திரம், உத்திராடம் ஆரோக உதர ரஜ்ஜு, புனர் பூசம், விசாகம், பூரட்டாதி  அவரோக உதர ரஜ்ஜு;  ரோகிணி, அஸ்தம், திருவோணம்  ஆரோக கண்ட ரஜ்ஜு; திருவாதிரை, சுவாதி, சதயம்  அவரோக கண்ட ரஜ்ஜு; மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம்  சிரோ  ரஜ்ஜு. இந்த ரஜ்ஜு அமைப்பில் மணமகன், மணப்பெண் இருவரது நட்சத்திரமும் ஆரோகத்திலாவது அவரோகத்திலாவது ஒரே வரிசையில் இருக்குமானால்,  ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்று கொள்ளலாம். ஒன்று ஆரோகத்திலும், ஒன்று அவரோகத்திலும் வெவ்வெறு வரிசையில் இருந்தாலும் ; இரண்டு  நட்சத்திரங்களுக்கும் ஒரே ரஜ்ஜுவாக இருந்தாலும் , ரஜ்ஜுப் பொருத்தம் உண்டு.

10. நாடிப் பொருத்தம்: 

அசுவினி, திரு வாதிரை, புனர்பூசம், உத்திரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி ஆகிய இந்த நட்சத்திரங்கள் தட்சிண பார்சுவ நாடியைச் சேர்ந்தவை.  பரணி, மிருக சீரிஷம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி இவை மத்திய நாடி. கார்த்திகை, ரோகிணி, ஆயில்யம், மகம்,  ஸ்வாதி, விசாகம், உத்திராடம், திருவோணம், ரேவதி இவை வர்ம பார்சுவ நாடி. மணப்பெண், மணமகன் இருவரும் ஒரே நாடியைச் சேர்ந்தவர்களானால்  நாடிப்பொருத்தம் இருக்கிறது என்று அர்த்தம்.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...