Oct 11, 2014

நோய்களை எட்ட விரட்டும் எருக்கு..! மூலிகை வனம்!!


மூலிகை வனம் - நோய்களை எட்ட விரட்டும் எருக்கு..!
வீட்டுக்கொரு வைத்தியர்...
 மனிதனுக்கு ஏற்படும் பிணிகளை நீக்கும் அருமருந்துகளான மூலிகைகள், இயற்கையின் ஏற்பாட்டில், தேவையுள்ள பகுதிகளில், தேவையான மூலிகை என்கிற வகையில் தானாகவே விளைந்து கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் சரியாகக் கண்டுபிடித்து உண்டு, தங்களுக்கு ஏற்படும் நோய்களைத் தீர்த்துக் கொள்ளும் வித்தையை, ஒவ்வொரு உயிரினத்துக்கும் இயற்கையே கடத்தி வைத்திருக்கிறது. ஆனால், வியாபார நோக்கோடு, இதையெல் லாம் திட்டமிட்டு மறக்கடித்து விட்டனர்... கடந்த இருபது, முப்பது ஆண்டுகளில்! அத்தகைய மூலிகைகளை மீண்டும் கையில் எடுக்கவும்... அவை பற்றிய புரிதலை உண்டாக்கவுமே...’ மூலிகை வனம்’ எனும் இப்பகுதி இங்கே விரிகிறது.
12 ஆண்டுகள் நீரில்லாமல் வாழும்!
'தெய்வீக மூலிகை’ எனப் போற்றப்படும் எருக்கு, வளமற்ற நிலங்கள், பராமரிக்கப்படாத வயல்கள், சாலையோரங்கள், சுடுகாடு... என எங்கும் விளையும். பன்னிரண்டு ஆண்டுகள் வரை மழையே இல்லாவிட்டாலும்கூட உயிர்வாழும் ஆற்றல் கொண்டது. அகன்ற எதிரடுக்கில் அமைந்த இலைகளைக் கொண்ட, நேராக வளரும் பாலுள்ள குத்துச்செடி. ஒழுங்கற்ற அரைக்கோள வடிவில் உள்ள இதன் காய்க்குள் உள்ள பஞ்சில் விதைகள் இருக்கும். முற்றிய காய்கள் வெடித்து காற்றில் பறக்கும்போது, பஞ்சுகள் ஆங்காங்கு விழுந்து மட்கி... அதனுள் உள்ள விதைகள் மண்ணில் பதிந்து முளைத்து செடியாகும். மனிதர்கள், பறவைகள், விலங்குகள் என யாருடைய தயவும் இல்லாமல் தன் இனத்தை தானே உற்பத்தி செய்து கொள்கிறது, எருக்கு.
இத்தனை சிறப்பு வாய்ந்த எருக்கை நாம் கொண்டாட தவறிவிட்டோம். விநாயகர் சதுர்த்தி தினத்தைத் தவிர, மற்ற நாட்களில் எருக்கின் அருகேகூட செல்லத் தயங்குகிறோம். உண்மையில் நம்முடைய பலவிதமான நோய்களுக்கான தீர்வை தன்னுள் வைத்துக் கொண்டிருக்கும் இந்த எளிய செடியின் மருத்துவ குணங்களைத் தெரிந்துக் கொண்டால், ஆச்சரியத்தில் விழிகளை விரிப்பீர்கள்.
''எருக்கம்பால் கட்டிகளையே கரைக்கும்
வாயுவைத் திறக்கறவே கொன்றுவிடும் தீர  செருக்கான
சந்நிவலி தீர்க்கும் சார்ந்த பல செந்தூரம்
உண்ணமுடியுமென ஓது'' என்கிறது,
சித்தர்பாடல்.
ஆதிமனிதனின் கயிறு!
எருக்கின் இலை, பூ, பட்டை, வேர் என அனைத்திலும் மருத்துவக் குணங்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆடு, மாடு மேய்ப்பவர்கள் காலில் முள் தைத்தால், எருக்கு இலையை உடைத்து அதன் பாலை முள் தைத்த இடத்தில் பூசிக்கொள்வார்கள். இதனால் வலி குறைவதுடன், அந்த இடம் பழுத்து, முள் வெளியே வந்துவிடும். இதை இன்றைக்கும் கிராமங்களில் பார்க்கலாம். அதனால்தான் 'ஏழைக்கு வைத்தியம் எருக்கு’ என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். தென்னைநார்க் கயிறு, ட்வைய்ன் நூல், நைலான் கயிறு, இரும்பு ரோப் என கயிறுகளின் பல பரிமாணங்களை இன்றைக்குப் பயன்படுத்துகிறோம். ஆனால், ஆதிமனிதனுக்கு கயிறாகப் பயன்பட்டவை, எருக்கு நார்களும், சில கொடி வகைகளும்தான். எருக்கு நார் மிகவும் வலுவானது. வில்லின் நாண், மீன் வலை, முருக்கு நூல் என எருக்கு நாரை பலவிதமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள், பண்டைத் தமிழர்கள். இலவம்பஞ்சு தலையணை கிடைக்காதவர்களுக்கு, எருக்குக் காயிலுள்ள பஞ்சுதான் தலையணையாக இருந்திருக்கிறது.
விஷக்கடிக்கு மருந்து!
இதன் இலை, விஷமுறிவுக்குப் பயன்படுகிறது. பாம்பு கடித்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சையாக எருக்கு இலையை அரைத்து... புன்னைக் காய் அளவு (கோலிகுண்டு அளவு) உள்ளுக்குக் கொடுத்தால், விஷம் இறங்கும். அடுத்து, மருத்துவரிடம் கொண்டு செல்லலாம். 
தேள் கடித்தால், இதே இலையை அரைத்து சுண்டைக்காய் அளவு கொடுத்து, கடிவாயிலும் வைத்து கட்டினால் விஷம் இறங்கும். 
மூன்று துளி எருக்கன் இலைச் சாறு, பத்து துளி தேன் கலந்து கொடுத்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியே வந்துவிடும். 
குதிகால் வலி இருந்தால், சூடான செங்கல் மீது, பழுத்த எருக்கு இலையை வைத்து அதன்மீது குதிகாலை வைத்து வைத்து எடுத்தால், வலி குறையும். 
எருக்கு இலையை நெருப்பில் வாட்டி பொறுக்கும் சூட்டில், உடம்பில் உள்ள கட்டிகள் மீது வைத்து கட்டினால், கட்டிகள் உடையும். இலையை எரித்து, புகையை வாய்வழியாக சுவாசித்தால், மார்பு சளி வெளியேறும்.
ஆஸ்துமாவை விரட்டும் வெள்ளெருக்கு!
எருக்கன் பூவைக் காய வைத்துப் பொடியாக்கிக் கொள்ள வேண்டும். இந்தப் பொடியில் 200 கிராம் எடுத்து, சிறிது சர்க்கரை சேர்த்து இரண்டு வேளை சாப் பிட்டு வந்தால், பால்வினை நோய், தொழு நோய் குணமாகும். வேரை கரியாக்கி, விளக்கெண்ணெய் கலந்து மேற்பூச்சாகப் பயன்படுத்தினால் கரப்பான், பால்வினை நோய்ப் புண்கள், ஆறாத காயங்கள் ஆறும். 
இதன் பால்... பொடுகு, படை, மூட்டுவலி, மூட்டுவீக்கம், மூலநோய்க்கு சிறந்த நிவாரணி என்கிறது சித்த மருத்துவம்.
கத்திரிப்பூ நிறப் பூக்களைக் கொண்ட எருக்குதான் பெரும்பாலான இடங்களில் இருக்கும். ஆனால், வெள்ளை நிறப் பூக்களை உடைய எருக்கு அரிதாக காணப்படும். இதை வெள்ளெருக்கு என்பார்கள். இந்த வெள்ளை எருக்கின் பூக்கள் ஆஸ்துமாவை விரட்டும் அருமருந்து. 
வெள்ளெருக்குப் பூக்களின் நடுநரம்பை நீக்கிவிட்டு, இதழ்களை மட்டும் எடுத்துக் கொள்ளவேண்டும். இதற்கு சம அளவு மிளகு, கிராம்பு சேர்த்து மை போல அரைத்து, மிளகு அளவுக்கான மாத்திரைகளாக உருட்டி, நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். மூச்சிரைப்பு அதிகமாகும்போது, இதில் ஒரு உருண்டையை வாயில் போட்டு நீர் அருந்தினால், உடனே இரைப்பு தணியும். '10கிராம் இஞ்சி,
3 வெள்ளெருக்குப் பூக்கள், 6 மிளகு ஆகியவற்றை நசுக்கி, அரை லிட்டர் தண்ணீரில் போட்டு, கால் லிட்டராகும் வரை சுண்டக் காய்ச்சி தினமும் இரண்டுவேளை குடித்து வந்தால், இரைப்பு குறையும்’ என்கிறார்கள், சித்த மருத்துவர்கள்.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...