Apr 7, 2013

விஜய புத்தாண்டுப் பிறப்பு

வாக்கிய பஞ்சாங்கம்
எதிர்வரும் 13 ஆம் திகதி முன்னிரவு 11.58 மணிக்கு பிறக்கின்றது.
அன்று மாலை 7.58 மணி தொடக்கம் அதிகாலை 3.58 மணி வரை விஷ¤ புண்ணிய காலமாகும். இக்காலத்தில் மருத்து நீர் தேய்த்து காலில் ஆலம் இலையும், சிரசில் புங்கமிலையும் வைத்து ஸ்நானம் செய்ய வேண்டும் என்று இப்பஞ்சாங்கம் கூறுகின்றது.
திருக்கணித பஞ்சாங்கம்
சித்திரைப் புத்தாண்டு 13 ஆம் திகதி இரவு 1.29 மணிக்கு பிறக்கின்றது, அன்று இரவு 9.29 மணி தொடக்கம் அதிகலை 5.29 மணி வரை விஷ¤ புண்ணிய காலமாகும்.
கை விசேடம்
14 ஆம் காலை 8.30 முதல் காலை 9.45
காலை 10.00 முதல் காலை 11.35
இரவு 10.20 முதல் நள்ளிரவு 12.00
ஆடை நிறம்
மஞ்சள், நீல நிற பட்டாடை

MyScrapNook Home - Design classic and new generation scrapbooks to post and print

MyScrapNook Home - Design classic and new generation scrapbooks to post and print

சமூக வலைத் தள அக்கவுண்ட் பதிவை நீக்க



ஏதாவது ஒரு சமூக இணைய வலைத் தளத்திலாவது இன்றைய கம்ப்யூட்டர் பயனாளர்கள் தங்களுக்கென பதிவு ஒன்றைக் கொண்டுள்ளனர். இதன் மூலம் தங்களை நண்பர்களுக்குத் தெரியப்படுத்தவும், நண்பர்களுடன் தொடர்பு கொள்ளவுமான பணிகளை மேற்கொள்கின்றனர். 

அந்த வகையில் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் சமூக இணைய தளங்கள் முன்னணியில் உள்ளன. இவற்றை நாடி, தங்களுக்கென அக்கவுண்ட் பதிவு ஒன்றை அமைப்பது மிக மிக எளிது. 

ஆனால், அந்த அக்கவுண்ட்டினை முடித்துக் கொள்வது அவ்வளவு எளிதான வழியாகக் காட்டப்படவில்லை. அவ்வாறு பதிவை ரத்து செய்து முடித்துக் கொள்ளும் எண்ணம் ஏற்பட்டாலும், நாம் ஏற்கனவே அவற்றில் அமைத்த பதிவுகளையும், நம் தொடர்புகளையும் பதிந்து எடுத்து வைத்துக் கொள்ள ஆசைப்படுவோம். 

நாம் மேற்கொண்ட தொடர்புகள் நமக்கு எந்த நாளும் நினைவில் இருப்பது உற்சாகம் தரும் என்பதற்காக, இந்த ஆவல் அனைவருக்கும் ஏற்படுவதுண்டு. எனவே, நீங்கள் முதலில் உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட்டில் உள்ள தொடர்பு தகவல்கள் அனைத்தையும் தேர்ந்தெடுத்து காப்பி செய்து, ஒரு டெக்ஸ்ட் பைலில் பதிவு செய்து கொள்ளலாம். அடுத்து, அக்கவுண்ட் நீக்கும் வழியை நாடலாம். 


1.பேஸ்புக்:

இன்றைய நிலையில், மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக இணைய தளம் இதுவாகத்தான் இருக்கும். இதில் உள்ள பதிவினை முடிவிற்குக் கொண்டு வர எண்ணினால், உங்களுக்கு இரண்டு வழிகள் தரப்படுகின்றன. 

இந்த சமூக வலைத்தளத்திலிருந்து விலகுவதால், நீங்கள் எவற்றை எல்லாம் இழக்கிறீர்கள் என்று தெரியாமல் இருந்தால், தற்போதைக்கு இதனை மூடிவிட்டு, பின் ஒரு நாளில், மீண்டும் இதனைப் புதுப்பிக்க நீங்கள் எண்ணலாம். அதற்கான வழி தரப்பட்டுள்ளது. 

இதனை மேற்கொள்ள முதலில் deactivation பக்கத்திற்குச் செல்லவும். சென்றவுடன், நீங்கள் உங்கள் பேஸ்புக் நண்பர்களை இனித் தொடர்பு கொள்ள முடியாது, இது உங்களுக்கு இசைவா? என ஒரு செய்தி தரப்படும். அதே நேரத்தில், நீங்கள் ஏன் பேஸ்புக் தளத்தினை விட்டு விலகுகிறீர்கள் எனக் கட்டாயமாகக் காரணத்தைப் பதிய வேண்டியதிருக்கும். 

இதனை முடித்த பின்னர், Confirm என்பதில் கிளிக் செய்தால், உங்கள் அக்கவுண்ட் பதிவு மறைந்துவிடும். இனி, மீண்டும் நீங்கள் பதிவினைப் புதுப்பித்தால் மட்டுமே, நண்பர்களுடன் நீங்களும், நீங்கள் உங்கள் நண்பர்களுடனும் பேஸ்புக் வழியாகத் தொடர்பு கொள்ள முடியும். புதுப்பிக்க வழக்கம் போல அக்கவுண்ட் லாக் இன் செய்தாலே போதும். 

இப்படி இல்லாமல், நமக்கு இந்த பேஸ்புக் தொடர்பே வேண்டாம் என்று முடிவு செய்தால், நீங்கள் account removal பக்கத்திற்குச் செல்ல வேண்டும். இங்கு Delete My Account என்ற பட்டனில் கிளிக் செய்திட வேண்டும். கிளிக் செய்தவுடன், மீண்டும் உங்கள் பாஸ்வேர்ட் கேட்டு உறுதி செய்யப்படும். பின்னர், அங்கு கிடைக்கும் கேப்சா சோதனையை மேற்கொள்ள வேண்டும்.

இதற்குப் பின்னரும், உங்கள் அக்கவுண்ட் இரு வாரங்களுக்கு இருக்கும். இந்தக் காலத்தில், அந்த அக்கவுண்ட்டைப் புதுப்பிக்க நீங்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், உங்கள் அக்கவுண்ட் காலாவதியாகி, நீக்கப்படும்.


2. ட்விட்டர்:

அடுத்ததாக, பிரபலமாக இயங்கும் சமூக இணைய தளம் ட்விட்டர். இதிலிருந்து விலகும் முடிவினை எடுத்து விட்டீர்களா? ட்விட்டர் இணைய தளத்திற்கு வழக்கம் போலச் செல்லுங்கள். உங்கள் அக்கவுண்ட் பதிவில் நுழையுங்கள். இணைய தளப் பக்கத்தில், வலது மேல் மூலையில் காணப்படும் சிறிய சக்கர ஐகானில் கிளிக் செய்திடுங்கள். 

இப்போது கிடைக்கும் பக்கத்தில் கீழாகக் காட்டப்படும் ‘Deactivate my account’ என்ற தொடர்பில் கிளிக் செய்திடுங்கள். இதில் உள்ள பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது உங்களுக்கு ஓர் எச்சரிக்கை கிடைக்கும். 

தற்காலிகமாக உங்கள் அக்கவுண்ட் பதிவு நீக்கப்படு வதாகவும், தொடர்ந்து 30 நாட்கள் எந்த செயல்பாடும் மேற்கொள்ளப்படவில்லை என்றால், உங்கள் பதிவு நீக்கப்படும் என்று ஒரு செய்தி காட்டப்படும். இந்த 30 நாட்களில், மீண்டும் ட்விட்டர் இணையதளத் தொடர்பு தேவை என நீங்கள் எண்ணினால், வழக்கம் போல லாக் இன் செய்து தொடரலாம். 


3. கூகுள் ப்ளஸ்:

கூகுள் இணைய தளத்தின் ஒரு பிரிவான, கூகுள் ப்ளஸ் பிரிவில் உள்ள உங்கள் அக்கவுண்ட்டினை, முழுவதுமாகவே நீங்கள் நீக்கிவிடலாம். இதற்கு முதலில் கூகுள் இணையதளம் (www.google.com) செல்லுங்கள். வலது மேல் மூலையில் உள்ள உங்கள் அக்கவுண்ட் லிங்க்கில் கிளிக் செய்திடவும். 

இங்கு மூன்று ஆப்ஷன்கள் கிடைக்கும். மேலாகப் பார்க்கையில் இரண்டு ஆப்ஷன்கள் மட்டுமே இருப்பதாகத் தெரிந்தாலும், மூன்று ஆப்ஷன்கள் கிடைக்கும். நீங்கள் கூகுள் ப்ளஸ் தொடர்பிலிருந்து விலக விரும்பினால், ‘Delete profile and remove related Google+ features’ என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். 

இப்போது இதனைத் தேர்ந்தெடுப்பதால், ஏற்படும் விளைவுகள் பட்டியலிடப்படும். கூகுள் தளத்தில் பல இடங்களில் உங்களால் தொடர்பு கொள்ள முடியாது என எச்சரிக்கை கிடைக்கும். 

இவற்றில் எந்த சேவை எல்லாம் தேவை இல்லையோ, அவற்றை டிக் செய்திடவும். பின்னர் ‘Remove selected services’ என்பதில் கிளிக் செய்திடவும். இதற்குப் பதிலாக ‘Delete your entire Google profile’ என்பதில் கிளிக் செய்தால், யூட்யூப் மற்றும் குகூள் பஸ் முதற்கொண்டு பல சேவைகளை நீங்கள் இழக்க வேண்டியதிருக்கும். 

உங்கள் அக்கவுண்ட்டினை முழுமையாக நீக்க எண்ணினால், உங்கள் அக்கவுண்ட் பிரிவில் Account Management என்பதில் உள்ள ‘Close account and delete all services and information associated with it’ என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். 

பல நிலைகளில் உள்ள தகவல்களை இந்த ஆப்ஷன் தேர்ந்தெடுக்கையில் நீக்க வேண்டியதிருப்பதால், மீண்டும் உங்களிடம் உறுதி செய்திடும் ஆப்ஷன் கேட்கப்படும். எனவே கூகுள் தரும் பல சேவைகளில் (AdSense முதல் YouTube வரை) எவை எல்லாம் வேண்டாமோ, அவற்றில் கிளிக் செய்து, உறுதி செய்திடவும். உறுதி செய்திடுகையில், மீண்டும் உங்கள் பாஸ்வேர்ட் கேட்கப்பட்டு உறுதி செய்யப்படும். மீண்டும் ஒருமுறை ‘Yes, I want to delete my account’ என்ற பட்டனில் கிளிக் செய்திட வேண்டியதிருக்கும்.

மேலே காட்டியுள்ள இணைய தளங்களுடன், Instagram மற்றும் Flickr போன்ற சமூக தளங்களும், இன்னும் சிலவும் பலரால் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் இருந்து நம் பதிவுகளை நீக்குவது எளிதான வழியாகத் தரப்பட்டுள்ளது. எப்போது தேவை இல்லை என்று உணர்கிறோமோ, அப்போதே, நம்மால் ஏற்படுத்தியுள்ள தகவல்களைக் காப்பி எடுத்துப் பின்னர், பதிவை நீக்கிவிடலாம்.

இதன் தொடர்பில் இன்னொரு தகவலையும் இங்கு காணலாம். இது போன்ற அக்கவுண்ட்களை நீக்குவதற்கென accountkiller என்ற ஒரு புரோகிராம் உள்ளது. இதனை http://www.accountkiller.com என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். 

இந்த தளத்தில் இணையதளங்களில் உள்ள அக்கவுண்ட்களை நீக்குவதில் உள்ள சிக்கல்களின் அடிப்படையில், அனைத்து தளங்களும் ஒயிட்லிஸ்ட், கிரே லிஸ்ட் மற்றும் பிளாக் லிஸ்ட் என மூன்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. 

ஒயிட் லிஸ்ட் மிக எளிதான வழிகளைக் கொண்டுள்ள தளங்களையும், பிளாக் லிஸ்ட் சுற்றி வளைத்துச் செயல்பட்டு நீக்கும் தளங்களையும் கொண்டுள்ளன. இடையே உள்ள கிரே லிஸ்ட், சிக்கல்கள் சுமாராக உள்ளனவற்றைக் கொண்டுள்ளன.

அறிமுகமானது சாம்சங் காலக்ஸி S4



தன் காலக்ஸி ஸ்மார்ட் போன் மூலம், மொபைல் உலகில் முதல் இடத்தினை வேகமாகப் பிடித்து வெற்றி கண்ட, சாம்சங் நிறுவனம், தற்போது தகவல் தொடர்பு உலகம் எதிர்பார்த்த காலக்ஸி எஸ் 4 ஸ்மார்ட் போனை வெளியிட்டுள்ளது. 

ஐந்து அங்குல அகலத்தில் இதில் தரப்பட்டுள்ள சூப்பர் AMOLED தொடு திரை, இதன் புதிய சிறப்பாகும். இதன் டிஸ்பிளே 1080x1920 பிக்ஸெல்களில் கிடைக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 அடுத்த புதிய வரவாகும். மைக்ரோ சிம் கொண்டு இதனை இயக்கலாம். 

வழக்கம் போல டச் விஸ் யூசர் இன்டர்பேஸ் மல்ட்டி டச் வசதியுடன் இதில் இயங்குகிறது. வை-பி டைரக்ட், வை-பி ஹாட் ஸ்பாட் என இரண்டு வகை நெட்வொர்க் தொடர்புகள், பயனாளர்களுக்கு தகவல் தொடர்பினை எளிதாக்குகின்றன. 

A2DP இணைந்த புளுடூத், அண்மைக் களத்தகவல் தொடர்பு தரும் என்.எப்.சி., இன்ப்ரா ரெட் போர்ட் ஆகியவை இதன் மற்ற நெட்வொர்க் சிறப்பம்சங்கள். 

இதன் அடுத்த சிறப்பு இதில் தரப்பட்டிருக்கும் 13 எம்.பி. திறன் கொண்ட கேமரா. ஆட்டோ போகஸ், எல்.இ.டி.பிளாஷ், டூயல் ஷாட், ஒரே நேரத்தில் ஹை டெபனிஷன் வீடியோ மற்றும் இமேஜ் ரெகார்ட் செய்திடும் வசதி, ஜியோ டேக்கிங், டச் போகஸ், முகம் மற்றும் சிரிப்பு உணர்ந்து இயங்கும் வசதி ஆகியவை கொண்டதாக இந்த கேமரா வடிவமைக்கப் பட்டுள்ளது. 

டூயல் வீடியோ ரெகார்டிங் வசதி கொண்டுள்ளது. இதன் செயல்பாட்டுக்கு குவார் கோர் 1.6 கிகா ஹெர்ட்ஸ் கோர்டெக்ஸ் சிப் ஈடு கொடுக்கிறது. இதில் பலவகையான சென்சார்கள் தரப்பட்டு இயங்குகின்றன. 

எம்.எம்.எஸ்., இமெயில், புஷ் மெயில், இன்ஸ்டண்ட் மெசஞ்சர், ஆர்.எஸ்.எஸ். ஆகிய தொடர்புகள் கிடைக்கின்றன. அடோப் பிளாஷ் மற்றும் எச்.டி.எம்.எல். 5 திறன் கொண்ட பிரவுசர் இயக்கம் கிடைக்கிறது. 

ஆனால், இதில் ரேடியோ இல்லை. எம்பி3 மற்றும் எம்பி4 பிளேயர், இமேஜ் வீடியோ எடிட்டர், வேர்ட், எக்ஸெல், பி.டி.எப். பைல்களைப் படிக்க டாகுமெண்ட் வியூவர், கூகுள் சர்ச், மேப்ஸ் மற்றும் ஜிமெயில், யு ட்யூப், காலண்டர், கூகுள் டாக், பிகாஸா ஆகிய கூகுள் வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் பேட்டரி 2600mAh திறன் கொண்ட தாக உள்ளது.

இதன் விலை ரூ.44,000 முதல் ரூ.45,000 வரை, பல இணைய தளங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. தவணை முறையிலும் இந்த போனை வழங்கிட பல விற்பனை மையங்கள் முன்வந்துள்ளன.

குறைந்த விலையில் சோனி ஆண்ட்ராய்ட் 3G போன்





சோனி எக்ஸ்பீரியா E என்ற மொபைல் போன் ஒன்றை, ரூ.10,999 என விலையிட்டு சோனி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஆண்ட்ராய்ட் ஐஸ்கிரீம் சாண்ட்விச் பதிப்பு 4.0.4 தரப்பட்டுள்ளது. 

இதனை மேம்படுத்திக் கொள்ளலாம். இதில் இரண்டு ஜி.எஸ்.எம். மினி சிம்களைப் பயன்படுத்தலாம். இதன் பரிமாணம் 113.5 x 61.8 x 11 மிமீ. எடை 115.7 கிராம். பார் டைப் போனாக வடிவமைக்கப்பட்டு, கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் இதில் தரப்பட்டுள்ளது. 

அதிக பட்சம் இரண்டு விரல் தொடு உணர்வுகளுக்கு இயங்குகிறது. கருப்பு மற்றும் தங்க நிறங்களில் கிடைக்கிறது. இதன் திரை 3.5 அங்குல அகலம் உடையது. 320x480 பிக்ஸெல்களில் டிஸ்பிளே காட்டுகிறது. 

லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட் மூலம் 32 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் வசதி, ஸ்டோரேஜ் 4 ஜிபி, 512 எம்.பி. ராம் நினைவகம், நெட்வொர்க் இணைப்பிற்கு ஜி.பி.ஆர். எஸ்., எட்ஜ் மற்றும் வை-பி, யு.எஸ்.பி. தொழில் நுட்பம், ஜியோ டேக்கிங் வசதி ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும். 

3.15 எம்பி திறனுடன் இயங்கும் கேமரா கிடைக்கிறது. இசைப் பிரியர்களுக்கு, மியூசிக் பிளேயர் மற்றும் ஸ்டீரியோ ரேடியோ தரப்பட்டுள்ளன. 

எஸ்.எம். எஸ்., எம்.எம்.எஸ்., இன்ஸ்டண்ட் மெசஞ்சர், புஷ் மெயில் வசதிகள் பயனாளரை எப்போதும் தொடர்பில் இயங்க வழி தருகிறது. 

டாகுமெண்ட் வியூவர் பைல்களைப் பார்க்கவும் உருவாக்கவும் உதவுகிறது. இதே போல போட்டோ வியூவர் வசதியும் கிடைக்கிறது. 

இதில் ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் கோர்டெக்ஸ் ஏ-5 ப்ராசசர் இயங்குகிறது. குவால்காம் ஸ்நாப் ட்ராகன் சிப்செட் போனுக்கான இயக்கத்தினைத் தருகிறது. 

இதில் தரப்பட்டுள்ள லித்தியம் அயன் பேட்டரி 1530 mAh திறனுடன் இயங்குகிறது. இதனால், தொடர்ந்து 6 மணி 12 நிமிட நேரம் பயன்படுத்தலாம். ஒருமுறை சார்ஜ் செய்தால் 530 மணி நேரம் மின் சக்தி தங்குகிறது. 

சென்ற டிசம்பரில் அறிவிக்கப்பட்ட இந்த 3ஜி மொபைல் போன், தற்போது அனைத்து இந்திய விற்பனை மையங்களிலும் கிடைக்கிறது.

ட்விட்டர் ஏழாண்டு சாதனை


ஏழு ஆண்டுகளுக்கு முன், மார்ச் மாதம் மூன்றாவது வாரத்தில், 21 தேதி, ட்விட்டர் இணையதளம் தொடங்கப்பட்டு, முதல் தகவல் பதியப்பட்டது. கடந்த ஏழு ஆண்டுகளில் இதன் வளர்ச்சி பிரம்மிக்கத்தக்கதாய் உள்ளது. 

தொடக்கத்தில், தகவல் அவ்வளவாக இல்லாமல், வெற்றிடம் கொண்டதாய் இருந்த ட்விட்டர் தளம், பின்னாளில் உலகின் முக்கிய குடிமக்கள் பயன்படுத்துவதாய் மாறியது. உலக நிகழ்வுகளை அறிய உண்மையின் உரைகல்லாய் இன்று ட்விட்டர் தளம் உள்ளது. 

மக்களைப் பற்றி அறிய, பல வர்த்தக பொருட்கள் குறித்து தெரிந்து கொள்ள, இதுவே நம்பகத்தன்மை கொண்ட தளமாய் இன்று இயங்குகிறது. ஏன், இடர் நிகழும் காலங்களில், உதவி தேடும் உன்னத சேவைத் தளமாகவும் ட்விட்டர் இன்று செயல்படுகிறது. 

இன்று, 20 கோடிக்கு மேலாக, தொடர்ந்து இத்தளத்தைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் உள்ளனர். நாளொன்றுக்கு 40 கோடி தகவல்கள் அனுப்பப்படுகின்றன, என்று ட்விட்டர் தளத்தின் இயக்குநர் கரன் விக்ரே தெரிவித்துள்ளார். 

முதன் முதலில் தொடங்கிய போது, இதில் பங்கெடுத்த வாடிக்கையாளர்கள், தாங்கள் விரும்பிய பீட்ஸா, சாண்ட்விச் போன்ற தகவல்களை அளித்து வந்தனர். இப்போது முற்றிலும் மாறுபட்ட வகையில், மிகவும் பொறுப்புள்ள தகவல்கள் இதில் கிடைக்கப் பெறுகின்றன. 

சென்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது, ட்விட்டர் தளம் முக்கிய பங்காற்றியது இங்கு குறிப்பிடத்தக்கது. போட்டியிட்ட இரு பிரிவும், தங்களின் பொறுப்பான பிரச்சாரத்தினை இதன் மூலம் அளித்து, வாக்குகளைப் பெறுவதில் ஆர்வம் காட்டின. 

அது மட்டுமின்றி, மக்கள் எப்படி தங்களுக்குப் பிடித்த வேட்பாளர்களைத் தேர்வு செய்திட வேண்டும், எந்த வகையில் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்த நடுநிலையான தகவல்களும் மக்களுக்கு அளிக்கப்பட்டன. 

பூகம்பம், எரிமலைச் சீற்றம், சுனாமி புயல் போன்ற பேரிடர் நிகழ்வுகளின் போதும், ட்விட்டர் அரும் பங்காற்றியது இங்கு நினைவு கூறத்தக்கது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர், பதவியிலிருந்து விலகிய பதினாறாம் போப் பெனடிக்ட், தன் 16 லட்சம் ஆதரவாளர்களுக்குத் தன் பிரியாவிடைச் செய்தியை அளிக்க ட்விட்டர் தளத்தையே பயன்படுத்தினார். அவருக்குப் பின் வந்த போப் பிரான்சிஸ், தன் 20 லட்சம் ஆதரவாளர்களுக்கு செய்தி தர இத்தளத்தினையே கையாண்டார். 

ட்விட்டர் மிகவும் குறைந்த ஆண்டுகளே புழக்கத்தில் இருக்கலாம்; இன்னும் பலருக்கு புதியனவாக இருக்கலாம். ஆனால், வலுவான, முக்கிய தகவல்களைத் தருவதில் இதுவே முதல் இடத்தைக் கொண்டுள்ள சமூக தளமாக உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்த தளம் பயன்படுத்தப்படும் விதத்தில், வியத்தகு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 

அடுத்து இந்த சமுதாய இணையதளம் என்ன செய்யப் போகிறது? எந்த திசையில் வளர்ச்சியை மேற்கொள்ளப் போகிறது? என்பது பலரின் கேள்விகளாக உள்ளது. 

இதன் வாடிக்கையாளர்கள் இதனை விரும்புவதற்கான காரணம், இதில் செயல்படுவது எளிமையாகவும், வேகமாகவும், அனைத்தையும் அரவணைத்துச் செயல்படுத்துவதாகவும் இருப்பதால் தான். இந்த குணத்தை இந்த தளம் இழக்கும் பட்சத்தில், இது இன்னொரு பேஸ்புக் தளமாக மாறிவிடும். 

எனவே, இதன் போக்கில் இது வளர்வதே நல்லது என இதன் வாடிக்கையாளர்களிடையே மேற்கொண்ட ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. அவ்வாறே, ட்விட்டர் வளர்ச்சி அடைந்து மாற்றங்களைத் தரும் என எதிர்பார்ப்போம்.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...