May 25, 2012

மரம் – கருங்காலி


மரங்கள்  மனிதனுக்கு ஆதார மானவையாகத் திகழ்கின்றன.  மரங்கள்தான் மனித இனத்தை வாழ வைக்கும் சக்திகளாக விளங்குகின்றன.  இதனால் தான் நம் முன்னோர்கள் கோவில்களில் தல விருட்சமாக மரங்களை வளர்த்து வணங்கினர்.
ஆனால் இன்று காடுகளில் உள்ள மரங்களை அழித்து கான்கிரீட் காடுகளாக மாற்றிக்கொண்டு வருகிறோம்.   இதனால் எதிர்கால சந்ததியினருக்கு நாம் கொடுப்பது பலமற்ற உடலையும், நோயும்தான்.
மரங்களின் மருத்துவப் பயன்கள் அளவற்றவை.  எதிர்விளைவு களை ஏற்படுத் தாதவை.  இத்தகைய சிறப்பு வாய்ந்த மரங்களில் கருங்காலி மரமும் ஒன்று.
பொதுவாக கருங்காலி மரம் இந்தியா முழுமைக்கும், மியான்மர், மலேசியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் அதிகம் காணப்படுகிறது. இதன் பட்டை, பிசின், வேர் அதிக மருத்துவப் பயன் கொண்டவை.  துவர்ப்புத் தன்மை மிக்கது.
கருங்காலியைப் பற்றி பழந்தமிழ் பாடலில் ஔவையார்
கருங்காலி கட்டைக்குக் கோணாத கோடாலி
என்று பாடியுள்ளார்.   இதிலிருந்து கருங்காலி கட்டையின் தன்மை நமக்கு விளங்கும்.
அகத்தியர் பெருமான் கருங்காலி மரத்தை ஆராய்ந்து  அதன் குணத்தை பாடலாகத் தந்துள்ளார்.

குட்டங் கயலோகங் குன்மம் பெருவயிறு
நெட்டைப் புழுதிமிரு நீரிழிவும்-விட்டே
யடுங்கான கத்தேக முஞ்சுகமே நல்ல
கருங்காலி நீரதனைக் கண்டு
-அகத்தியர் குணவாகடம்.
நீரிழிவு நோய், பெருவயிறு, வயிற்றுப்புழு நோய் குருதிக்குறைவால் உருவாகும் திமிர் வாதம், பெருநோய், அழல் குன்மம் போன்றவை நீங்கும்.
கருங்காலி வேர்
கருங்காலி வேரை எடுத்து சுத்தப்படுத்தி நீரில் ஊறவைக்க வேண்டும்.  பின்பு அந்த நீரைக் கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தினால் வயிற்றுப்புண் ஆறும். வயிற்றில் உள்ள கொழுப்பைக் குறைக்கும்.
நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் இருவேளை இதைக் குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.
இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும்.  பித்தத்தைக் குறைக்கும்.
வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்றும் கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.
கருங்காலி மரப்பட்டை
கருங்காலி மரப்பட்டை அல்லது மரக்கட்டை 1 பங்கு எடுத்து 8 பங்கு நீர் சேர்த்து நன்றாகக் காய்ச்சி அதனுடன் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்த்து மீண்டும் காய்ச்சி வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால், ஈளை, இருமல் நீங்கும்.  சுவாச காச நோய்கள் அகலும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.  உடலில் உள்ள தேவையற்ற விஷ நீரை வெளியேற்றும்.
பெண்களுக்கு கருப்பையை வலுப்படுத்தும்.  மலட்டுத் தன்மையைப் போக்கும்.  பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலைக் குறைக்கும்.  நீரிழிவு, இரத்த அழுத்தம், இதய நோயாளிகள் இதைஅருந்துவது நல்லது.
வாய்ப்புண்ணை அகற்றி வாய் நாற்றத்தைப் போக்கும்.
இதுபோல் கருங்காலிப்பட்டை, வேப்பம் பட்டை, நாவல்பட்டை இம்மூன்றையும் ஓர் எடை எடுத்து இடித்து நாள்பட்ட புண்களின் மீது தடவி வந்தால் புண்கள் ஆறும்.
கருங்காலி மரப்பிசின்
கருங்காலி மரத்தின் பிசினை எடுத்து  காயவைத்து பொடிசெய்து அதை பாலுடன் கலந்து அருந்தி வந்தால்  உடல் பலமடையும்.  நீர்த்துப்போன விந்து கெட்டிப்படும்.  அதிக இரத்தப்போக்குள்ள பெண்களுக்கு சிறந்த மருந்தாகும்.  நரம்புத் தளர்ச்சியைப் போக்கி புத்துணர்வு கொடுக்கும்.
கரப்பான் நோயினை போக்கவல்லது.  பால்வினை நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது.
கருங்காலிக் கட்டையை தண்ணீரில் ஊறவைத்தால் அந்நீரின் நிறம் மாறும். அந்த நீரைக் கொண்டு குளித்து வந்தால், உடலில் உண்டாகும் அனைத்து வலிகளும் நீங்கும்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...