May 16, 2012

கட்டுப்படுத்தலாம் காசநோயை


காச நோய் வராமல் ஆரம்பத்திலேயேத் தடுக்க வேண்டும்’ என்ற நோக்கத்தில்தான், குழந்தை பிறந்ததும் பி.சி.ஜி. தடுப்பு ஊசி போடப்படுகிறது. ஆனால், இந்தத் தடுப்பு ஊசி எல்லாவிதமான காச நோய்களையும் தடுப்பது இல்லை. இந்தியாவில், 19 லட்சத்து 76 ஆயிரத்து 927 பேருக்கு காச நோய் பாதிப்பு இருப்பதாகக் கடந்த ஆண்டு (2011) கணக்கெடுப்பு சொல்கிறது. ''இந்தப் புள்ளிவிவரம் பயமுறுத்தக் கூடியதாக
இருக்கலாம்.
ஆனால், காச நோயைப் பார்த்துப் பயம்கொள்ளத் தேவை இல்லை. தகுந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இந்த நோயில் இருந்து விடுபட முடியும்!'' என்கிறார் நெஞ்சக நோய் (Thoracic Medicine) மருத்துவரான பேராசிரியர் சொ.சந்திரசேகர். தாம்பரம் - சானடோரியத்தில் உள்ள அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில் மருத்துவக் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் இவர், காச நோய் குறித்து விரிவாகப் பேசுகிறார்... 

'காச நோயை சயரோகம், எலும்புருக்கி நோய் எனப் பல பெயர்களில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். காற்றின் வழியாகப் பரவக்கூடிய இந்த நோய், 'மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ்’ (Mycobacterium Tuberculosis) என்கிற பாக்டீரியாவால் உண்டாகிறது. 1882-ம் ஆண்டு ராபர்ட் கோக் என்ற விஞ்ஞானி நுண்ணோக்கி மூலம் இந்த நோய்க் கிருமியைக் கண்டறிந்தார்.

இரண்டு வாரங்களுக்கு மேல் தொடர் இருமல், சளியுடன் சேர்ந்து ரத்தம் வெளியேறுதல், மாலை அல்லது இரவு நேரத்தில் காய்ச்சல், உடல் எடை குறைதல், பசியின்மை போன்றவை காச நோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.

இந்த நோய் பெரும்பாலும் நுரையீரலைத் தாக்கினாலும், நிணநீர்ச் சுரப்பிகள், நுரையீரல் சவ்வு, தண்டுவடம், மூளை, குடல் பகுதி, சிறுநீரகம், தோல் என உடலின் எல்லாப் பகுதிகளையும் பாதிக்கும். அதாவது, பல்மோனரி (Pulmonary), எக்ஸ்ட்ரா பல்மோனரி (ணிஜ்tக்ஷீணீ றிuறீனீஷீஸீணீக்ஷீஹ்) என இந்த நோயை இரண்டாகப் பிரிக்கலாம். பல்மோனரி என்பது நுரையீரலில் உள்ள காசநோயையும் எக்ஸ்ட்ரா பல்மோனரி என்பது மற்ற உறுப்புகளில் உள்ள காச நோயையும் குறிக்கும்.

ஆரம்பக் காலங்களில் இதற்குச் சரியான சிகிச்சை முறைகள் இல்லை. 1993-ம் ஆண்டு முதல், உலகச் சுகாதார நிறுவனத்தின் உதவியுடன் 'திருத்தப்பட்ட தேசிய காச நோய்த் தடுப்புத் திட்ட’த்தின்படி, 'கூட்டு மருந்துச் சிகிச்சை’ (DOTS) அளிக்கப்படுகிறது. இந்தச் சிகிச்சையை மொத்தம் ஆறு மாதங்களுக்குத் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். முதல் இரண்டு மாதங்களுக்கு, ஒரு நாளைக்கு (வாரத்தில் மூன்று நாட்கள்) நான்கு மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்த நான்கு மாதங்களுக்கு, ஒரு நாளைக்கு (வாரத்தில் மூன்று நாட்கள்) இரண்டு மாத்திரைகள் எடுத்துக்கொண்டால் போதும்; காச நோய் முற்றிலும் குணமாகிவிடும். இந்தச் சிகிச்சை, அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இலவசமாகவே கிடைக்கிறது.  

பெண்களைப் பொறுத்த வரை, கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் காச நோயால் பாதிக்கப்பட்டு இருந்தால், அவர்களுக்கும் கூட்டுச் சிகிச்சைதான் ஏற்றது. இதனால், குழந்தைக்குப் பாலூட்டுவதை நிறுத்த வேண்டிய அவசியமும் இல்லை. ஆனால், குழந்தைக்கு நோய் பரவாதவாறு கவனமாக இருக்க வேண்டும். கர்ப்பிணிகள் மருந்து எடுத்துக்கொள்வதால் கருவில் இருக்கும் சிசுவுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. இருப்பினும், தீவிரக் காச நோய் பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள் கர்ப்பம் தரிப்பதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், அதற்கான மருந்துகளில் சில வகை சிசுக்களைப் பாதிக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு காச நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. மற்றவர்களைவிட இவர்களுக்கு நோயின் தீவிரமும் அதிகமாக இருக்கும். இவர்கள், காச நோய்க்கான மருந்துகளுடன், ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதற்கான இன்சுலினையும் சேர்த்து எடுத்துக்கொள்ள வேண்டும்.  

இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ளாதபட்சத்தில், மற்றவர்களுக்கும் நோயைப் பரப்ப வாய்ப்பு இருக்கிறது. காச நோயால், பாதிக்கப்பட்ட ஒருவர் சாதாரணமாகத் தும்மும்போது, சுமார் 40 ஆயிரம் காற்றுத் திவலைகள் வெளிப்படுகின்றன. இவற்றில், ஒருசில திவலைகளே நோய்த்தொற்றை ஏற்படுத்தப் போதுமானவை. எனவே, இருமல் மற்றும் தும்மல் ஏற்படும்போது கைக்குட்டையை உபயோகிக்க வேண்டும். எச்சில், சளியைக் கண்ட இடங்களில் துப்பாமல், மூடி உள்ளக் குவளையில் துப்பி, மண்ணுக்குள் புதைத்துவிட வேண்டும். இதன் மூலம் மற்றவர்களுக்கு இந்த நோய் பரவாமல் தடுக்க முடியும்!'  

பாதியில் நிறுத்தினால் பாதிப்பு அதிகம்!

 காச நோய்க்கு மருந்து எடுத்துக்கொள்ளாதது எவ்வளவு ஆபத்தானதோ, அதற்கு நிகரான ஆபத்து உடையது மருந்தைப் பாதியில் நிறுத்திவிடுவது.  நம் நாட்டில் காச நோய் இன்னமும் கட்டுக்குள் கொண்டுவரப்படாமல் இருப்பதற்கான முக்கியக் காரணமும் இதுவே. காச நோய்க்கு மாத்திரை எடுத்துக்கொள்ள ஆரம்பித்த இரண்டு வாரங்கள் முதல் இரண்டு மாதங்களுக்குள் நோயின் தீவிரம் கணிசமாகக் குறைந்துவிடும்.  இதனால், பலர் மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்வதைத் தவிர்த்துவிடுகின்றனர். அதேபோல, மாத்திரைகளால் ஏற்படும் பக்க விளைவுகளான வாந்தி, வயிற்று உபாதை, மயக்கம், சோர்வு போன்ற பிரச்னைகளுக்குப் பயந்து, மருத்துவரிடம் ஆலோசிக்காமலே மருந்துகளை நிறுத்திவிடுபவர்களும் கணிசம். இது முழுக்க முழுக்கத் தவறு.

ஏனெனில், நோயின் பாதிப்புகள் குறைந்தாலும் நோய்க் கிருமிகள் முழுமையாகச் செயல் இழந்துவிடுவது இல்லை. ஆகையால், மருந்து எடுத்துக்கொள்வதைப் பாதியில் நிறுத்துவதாலும், விட்டுவிட்டு மருந்துகளை எடுத்துக்கொள்வதாலும், நோய்க் கிருமிகள் மருந்துகளை எதிர்கொள்ளும் திறனைப் பெற்றுவிடும். எனவே, அதன் பிறகு இந்தக் கிருமிகளை மருந்துகளால் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாது. இதனால், சாதாரண நிலையில் இருந்து தீவிர நிலைக் காச நோயாக (விuறீtவீ ஞிக்ஷீuரீ ஸிமீsவீstணீஸீநீமீஜிஙி) அது உருமாறும்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...