Jun 21, 2012

சிறுநீர்க்கல்லுக்கு ஹோமியோபதி சிகிச்சை

சிறுநீர்க்கல்


பெயர் விளக்கம் : சிறுநீர்க்கல் பொதுவாக “சிறுநீரகக்கல்” என்றே வழக்கமாக குறிப்பிடப்படுகிறது. சிறுநீரகம் என்ற தமிழ்ச்சொல் பொதுவாக மூத்திரக்காய் (Kidney), வடிகுழாய் (Ureter), சிறுநீர்ப்பை (Bladder) ஆகிய அனைத்து உறுப்புகளையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும். ஆனால் வழக்கில் சிறுநீரகம் என்ற சொல் மூத்திரக்காயை மட்டும் குறிப்பதாகப் பயன்படுவதால் இங்கு சிறுநீர்க்கல் என்ற சொல் Renal Calculi என்ற ஆங்சிலச் சொல்லுக்கு இணையாகப் பயன்படுத்தப்படுகிறது.

சிறுநீர்க்கல் எவ்வாறு உருவாகிறது?


சிறுநீர்க்கற்களை உருவாக்கும் மூலப்பொருட்கள் பல இருப்பினும் அவற்றுள் முதன்மையான கால்சியம், ஆக்ஸலேட், யூரிக் அமிலம் ஆகியவை பொதுவாக சிறுநீரில் கரைந்து கழிவுகளாக வெளியேறுகின்றன. ஆனால் சிலரின் சிறுநீரில் இந்தக் கழிவுப்பொருட்கள் அளவுக்கு அதிகமாக இருப்பதால் முழுவதுமாக சிறுநீரில் கரைவதில்லை. கரையாத கழிவுகள் சிறுநீர் உறுப்புகளில் படிகங்களாகத் தங்கி. பின்பு படிகங்கள் ஒன்று சேர்ந்து கற்களாக உருவாகின்றன. மூத்திரக்காய், வடிகுழாய், சிறுநீர்ப்பை என எந்த இடத்திலும் கற்கள் உருவாகலாம்.


வடிவமும், அளவும் : கற்கள் பல வடிவங்களிலும், அளவுகளிலும் காணப்படுகின்றன. படிகங்கள் ஒன்று சேர்ந்து கற்களாக மாறுவதால் பல கூர்முனைகளைக் கொண்டுள்ளன்.


கல்லின் வரலாறு :


1. மனித உடலில் சிறுநீர்க்கல் எப்பொழுது உருவாகத் தொடங்கியது என்ற ஆராய்ச்சிகளில் மிகவும் தொன்மை( ! ) வாய்ந்த ஆதாரமாகக் கருதப்படுவது கி.மு. 4800 காலத்திய எகிப்து நாட்டின் மம்மியில் இருந்து பெறப்பட்டதுதான்.


2. சுஷ்ருதா என்ற இந்திய மருத்துவர் கி.மு.12ஆம் நூற்றாண்டில் அறுவை சிகிச்சை செய்து கல்லை நீக்கியதாக மருத்துவ இலக்கியங்களில் காணப்படுகிறது.


3. கி.பி.1879-ல் ஹெய்னிகி என்ற மருத்துவர் கல்லுக்கான அறுவை சிகிச்சை செய்தார்.


4. கி.பி.1800 களில் ஹோமியோபதி மருத்துவம் பயன்பாட்டுக்கு வந்தது. இன்று சிறுநீர்க்கல் சிகிச்சையில் பயன்படும் மருந்துகள் யாவும் அன்றே பயன்பாட்டில் இருந்தன.


5. PCNL எனப்படும் Percutaneous Nephrolithotomy எனப்படும் என்டோஸ்கோப்பி முறை 1976-ல் அறிமுகப்படுத்தப்பட்டது.


6. தற்போது பெருமளவு நடைமுறையிலுள்ள ESWL எனப்படும் Extracorporeal Shock Wave Lithotripsy முறை 1980-ல் அறிமுகப்படுத்தப்பட்டது.


சிறுநீர்க்கல் கணக்கெடுப்பு :


மொத்த மக்கள் தொகையில் 12% பேர் தங்களது வாழ்நாளில் ஏதோவொரு கட்டத்தில் சிறுநீர்க்கல்லால் பாதிக்கப்படுகின்றனர்.


12% ஆண்களும், 5% பெண்களும் தங்களது 70-வது வயதில் சிறுநீர்க்கல் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.


சிறுநீர்க்கல் நோயாளிகளில் 50% பேருக்கு 5 முதல் 10 வருடங்களில் திரும்பவும் கல் உருவாகிறது.


பெரும்பான்மையான கல் நோயாளிகள் 30 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் 50 வயதிற்குமேல் கற்களால் பாதிக்கப்படுபவர்கள் குறைவே.


மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் 1000 நோயாளிகளில் 7லிருந்து 10 பேர் சிறுநீர்க்கல்

நோயாளிகளாக உள்ளனர்.

இந்தியாவில் சுமார் 70 லட்சம் சிறுநீர்க்கல் நோயாளிகள் உள்ளனர். மொத்த மக்கள் தொகையில் ஆயிரத்துக்கு ஒருவர் கல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.


மூத்திரக்காயின் (Kidney) பணியும் கற்களும் :


மனிதனின் வயிற்றின் பின் பகுதியில் தண்டுவடத்தின் இரு பக்கங்களிலும் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு மூத்திரக்காய்கள் அமைந்துள்ளன. அவரை வடிவில் உள்ள இந்த மூத்திரக்காய்கள் இரத்தத்தில் உள்ள கழிவுப்பொருட்களைப் பிரித்து சிறுநீராக மாற்றுகின்றன. இந்தப் பணியை மூத்திக்காயின் இயங்கு பகுதியான நெப்ரான்கள் செய்கின்றன. ஒரு நாளைக்கு சுமார் 180 லிட்டர் இரத்தம் நெப்ரான்களைக் கடந்து செல்கின்றன.


கற்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதை ஏற்கனவே கண்டோம். அவ்வாறு உண்டாகும் கற்கள் மூத்திரக்காயிலேயே தங்கிவிடலாம் அல்லது அங்கிருந்து நகர்ந்து சென்று வடிகுழாயிலோ, சிறுநீர்ப்பையிலோ தங்கிவிடுவதும் உண்டு. அவ்வாறு தங்கியிருக்கும் கற்கள் எவ்வித அறிகுறியும் இல்லாமல் ஒரே இடத்தில் பலவருடங்கள் கூட இருப்பதுண்டு. பல நேரங்களில் கற்கள் தங்கியிருக்கும் இடத்திலிருந்து இரத்தப்போக்கும், அந்தப் பகுதியைச் சுற்றி சீழ்பிடிப்பதும் நிகழ்கிறது. இதனை சிறுநீரிலிருந்து நேரடியாகவோ, பகுப்பாய்வு செய்வதோ அறியலாம் 2மி.மீ முதல் 5 மி.மீ வரை பருமனுள்ள கற்கள் தானாகவே சிறுநீருடன் வெளியேறிவிட வாய்ப்புண்டு.


சிறுநீர்க்கல்லின் அறிகறிகள் : மூத்திரக்காயிலோ, வடிகுழாயிலோ இருக்கும் கற்கள் சிறுநீர் வழியை அடைக்காதிருக்கும் வரை கற்களுக்கான அறிகுறிகள் வெளிப்படுவதில்லை. சாதாரணமாக கற்களின் இருப்பு கீழ்காணும் காரணங்களால் வெளிப்படுகினறது.


வழக்கமான முழு உடல் பரிசோதனை.

முதுகில் மந்தமான தொடர்வலி.
சிறுநீர்ப்பாதை அழற்சி.
அடிக்கடி சிறுநீர் கழித்தல்.
சிறுநீர் கழிக்கையில் வலி அல்லது எரிச்சல் அல்லது இரண்டும்.
சிறுநீரில் இரத்தம் கலந்து வருதல்.
சிறுநீர்க்கல்லுக்கே உரித்தான தீவிரவலி, வலியின் தன்மை பிரசவ வலிக்கு ஒப்பாக இருக்கும். வலி முதுகிலிருந்து இடுப்புக்கு பரவும், வலியுடன் குமட்டல், வாந்தி, வயிறு உப்பிசம் ஆகியவை காணப்படும்.

சிறுநீர்க்கல் வலியானது கற்கள் இருக்கும் இடம், நிலை ஆகியவற்றைப் பொறுத்து ஆளுக்கு ஆள் மாறுபடும் கல்லின் பருமனுக்கும் வலியின் கடுமைக்கும் சம்பந்தமில்லை.


ஆய்வக சோதனையில் சிறுநீரில் படிகங்களும், இரத்த அணுக்களும், சீழும் காணப்படும்.


X-Ray, KUB, Scan மூலம் கற்கள் இருக்கும் இடத்தையும், கற்களின் பருமனையும் அறிய முடியும்.


எச்சரிக்கை : சிறுநீர்க்கற்கள் மூத்திரக்காயில் நீண்ட காலம் தங்கியிருந்து அதனை சீழ் பிடிக்கச் செய்து செயலிழக்கச் செய்யும் அபாயமும் உண்டு.


ஹோமியோபதி பார்வையில் கற்களும் சிகிச்சையும்


ஹோமியயோபதி பார்வையில் உருவாகும் கேள்விகள் :


1. ஆயிரம் பேரில் பத்து பேருக்கு மட்டும் ஏன் கற்கள் உருவாகின்றன?


2. ஒரே வகையான சுற்றுச்சூழல், ஒரே மாதிரியான குடிநீர், ஒரே வகையான உணவுப்பழக்கம் உள்ளவர்களில் ஒரு சிலருக்கு மட்டும் கற்கள் உருவாவதேன்?


3. ஒரே குடும்பத்தில் பலர் இருந்தும் ஒருவருக்கு மட்டும் ஏன் கற்களின் பாதிப்பு?

இந்தக் கேள்விகள் ஹோமியோபதியில் அடிப்படையானவை.

மனிதனின் உயிராற்றல் (Vital Power) மாறுபாடு அடையும்போது மனம் உடல் இயக்கங்கள் மாறுபாடு அடைகின்றன. இந்த மாறுபாடுகளே நோய்க்குறிகளாக வெளிப்படுகின்றன. உயிராற்றல் பலமிழந்துள்ள மனிதர்களை மட்டுமே நோய்கள் தாக்குகின்றன. எல்லா நோய்களும்

( சிறுநீர்க்கல் உட்பட) எல்லோரையும் தாக்குவதில்லை. எனவேதான் ஹோமியோபதி நோயுற்ற மனிதனை உற்று நோக்குகிறது. ஏன் இவரை இந்த நோய் தாக்கியிருக்கிறது என்று ஆராய்கிறது.

சிகிச்சை முறை : “உயிராற்றல் சரிசெய்யப்பட்டால் உடல், மன இயக்கங்கள் சீரடைகின்றன. உடல் பழைய நிலைக்கு அதாவது ஆரோக்கிய நிலைக்கு திரும்பி தானாகவே தன்னை அண்டியிருக்கும் நோய்களை விரட்டியடிக்கிறது”


ஹோமியோபதி மருந்துகள் உயிராற்றலை மேம்படுத்துகின்றன. அதன் மூலம் உடல் நலத்தை மீட்டுத்தருகின்றன. இது எல்லா நோயுற்ற மனிதருக்கும் பொருந்தும். சிறுநீர்க்கற்கள் இதற்கு விதிவிலக்கல்ல.


எவ்வித அறிகுறியும் இல்லாமல், எக்ஸ்-ரே, ஸ்கேன் பரிசோதனை மூலம் அறியப்பட்ட கற்களை வெளியேற்றுவதற்கான சிகிச்சையும், கற்களின் வலியுடன் மருத்துவரிடம் வரும் நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சையும் வெவ்வேறு வகையில் அமையும். அதாவது,


1. வேறு காரணங்களுக்காக ஒரு நோயாளி மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளும்போது தற்செயலாக அவருக்கு தற்கள் இருப்பது தெரியவந்து, அத்தகைய நோயாளி ஹோமியோபதி மருத்துவரிடம் வந்தால், அவரிடம் அவருடைய உடல்நிலை பற்றிய அனைத்து விபரங்களும் கேட்டறியப்படுகிறது. சிறுநீர்க்கல் மட்டுமல்லாது அவர் உடலில் உள்ள அனைத்து கோளாறுகளையும் கேட்டறிந்து, ஒட்டு மொத்த குறிகளின் அடிப்படையில் மருந்து தேர்வு செய்து கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் அவருடைய உயிராற்றல் தூண்டப்படுகிறது அல்லது மேம்படுத்தப்படுகிறது. சீர் செய்யப்பட்ட உயிராற்றல் உடலின் இயக்கங்களை சீர் செய்கிறது. உடல் இயக்கங்கள் சீரடையும் போது அனைத்து நோய்க் குறிகளும் உடலிலிருந்து விரட்டியடிக்கப்படுகின்றன. பின்பு கற்களுக்கு மட்டும் அங்கென்ன வேலை? அதுவும் உடலை விட்டு வெளியேறும்.


2. சிறுநீர்க்கற்களின் தீவிர வலியுடன் வரும் நோயாளியைப் பொருத்தவரை, அவருக்குள்ள வலி ஆரோக்கியத்தின் அடையாளமாகவே கருதப்படுகிறது. அதாவது சிறுநீர்ப்பாதையை அடைத்துக் கொண்டிருக்கும் கற்களை வெளியேற்ற உடல் முயற்சிக்கிறது. அந்த முயற்சியின் விளைவாக கற்கள் சிறுநீர்பாதையில் நகரும்பொழுது அதன் கூர்முனைகள் மூத்திரக்காயிலோ, வடிகுழாயிலே உரசும்போது கடுமையான வலி உண்டாகிறது. இந்நிலையில் அவருக்குள்ள வலியின் தன்மை, சிறுநீர்கழிக்கும் முறை அவருடைய அப்போதைய மனநிலை பிறகுறிகள் ஆகியவை கருத்தில் கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையில் மருந்துகள் தேர்ந்தெடுக்கப்பட்டு கொடுக்கப்படுகிறது. உடல் முழு பலத்துடன் கற்களை வெளியேற்ற மருந்துகள் உதவுகின்றன. மேலும் வலியின் அதியுணர்ச்சியையும் மட்டுப்படுத்தி நோயாளியை அமைதிப்படுத்துகின்றன. “கற்கள் சத்தமில்லாமல் வெளியேறுகின்றன”.


ஹோமியோபதி மருந்துகள் : சிறுநீர்க்கற்களின் வலியை நீக்கவும், கற்களை வெளியேற்றவும், ஹோமியோபதியில் கீழ்காணும் மருந்துகள் பயன்படுகின்றன.


அர்ஜென்டம் நைட்ரிகம்,கல்கேரியா கார்பானிகா,லாச்சஸிஸ்,போடோபில்லம்,

டெரிபிந்தினா, பெல்லடோனா,சைனா,லைகோபோடியம்,பல்சட்டில்லா,
அர்டிகா யூரேன்ஸ்,பெர்பெரிஸ் வல்காரிஸ்.கோலோசிந்திஸ்,மெர்குரியஸ்,
சர்சபரில்லா,விராட்ரம் விரைடி, பிரையோனியா,டயஸ்கோரியா,நக்ஸ்வாமிகா,
செபியா,காந்தாரிஸ், ஹைட்ராஞ்ஜியா,நைட்ரிக்ஆசிட்,சாலிடாகோ,சாமோமில்லா,
ஹைடிராஸ்டிஸ், ஒசிமம் கானம்,டபாகம்.

ஒவ்வொருவரின் தனித்தன்மை, உடல்வாகு, நோய்க்குறிகள்,மனநிலை அனைத்தையும் அனுசரித்தே மருந்துகள் தேர்வு செய்து கொடுக்கப்படுகின்றன.


ஹோமியோபதி மருத்துவத்தின் பலன்கள் :


ஹோமியோ மருத்துவம் மென்மையானது, விரைவாகவும், நிரந்தரமாகவும் குணமளிக்கக்கூடியது, பக்கவிளைவுகள் அற்றது. பாதுகாப்பானது.


கல்லுடைக்கும் மருத்துவமனைகளில் ரூ,10,000 முதல் ரூ,50,000 வரை செலவாகிறது. ஹோமியோபதியில் ரூ. 200 முதல் ரூ.2,000 வரை மட்டுமே செலவாகிறது.


சிறுநீர்க்கற்களின் தன்மை, நோயாளியின் உயிராற்றல், உடல்வாகு, நோயின் நாட்பட்ட தன்மை ஆகியவற்றை பொருத்து சிகிச்சையின் கால அளவு மாறுபடும். சிறுநீர்க்கல்லின் தீவிர வலிக்கு சிகிச்சை பெறும் போது கற்கள் வெளியேறிய பின்பும், ஒரிருநாட்கள் மந்தமான வலி நீடிக்கலாம். 3-4 நாட்கள் தொடர்ந்து மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. சிறுநீர்க்கல் சிகிச்சைக்குப்பின் தனித்துவக் கோட்பாட்டின் அடிப்படையில் நோயாளிக்கு ஓரிரு வேளை மருந்து கொடுத்தால் கற்கள் மீண்டும் உருவாவதை தடுக்கமுடியும்.

 ச. அன்பழகன்,
தஞ்சை நலம் மருத்துவமனை, தஞ்சாவூர்

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...