Feb 15, 2013

ரஷ்யாவில் எரிகல் தாக்கி 1,000 பேர் காயம்

மாஸ்கோ : ரஷ்யாவில் எரிகற்கள் தாக்கி ஆயிரம் பேர் காயமடைந்தனர். 270க்கும் மேற்பட்ட வீடுகளில் கண்ணாடிகள் நொறுங்கின. வானில் அடிக்கடி பல அதிசயங்கள் நடந்து வருகின்றன. ரஷ்யாவில் நேற்று காலை இதுபோன்ற சம்பவம் ஒன்று நடந்தது. மாஸ்கோவில் இருந்து 1,500 கிமீ தொலைவில் உள்ளது செல்யாபின்ஸ்க் நகரம். தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியான இங்கு, நேற்று மதியம் தொழிலாளர்கள் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். வீடுகளில் மக்கள் அவரவர் வேலையை பார்த்து கொண்டிருந்தனர்.

அப்போது, காலை 9 மணியளவில் வானத்தில் இருந்து பூமியை நோக்கி நெருப்பு பந்துகள் பறந்து வந்தன. 200 கிமீ சுற்றளவுக்கு இது தெளிவாக

தெரிந்தது. பூமிக்கு அருகே வந்ததும் இந்த எரிகற்கள் வெடித்து சிதறி, வெள்ளை புகை மண்டலமாக மாறின. இந்த வெடிச்சத்தம், அந்த பகுதி முழுவதும் பிரதிபலித்தது. பூகம்பம் ஏற்பட்டது போல் கட்டிடங்கள் ஆடின. ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறின.

தொழிற்சாலைகளில் இருந்தவர்கள் மற்றும் சாலைகளில் சென்றவர்களில் ஆயிரம் பேருக்கு இந்த எரிகல் தாக்குதலால் காயம் ஏற்பட்டது. இதில், ஒரு சிலர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. எரிகல் தாக்குதலில் 270 வீடுகளில் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, அப்பகுதி மக்கள் மிகவும் பீதி அடைந்தனர். அப்பகுதி முழுவதும் பெரும் பதற்றம் நிலவியது. பெற்றோர்கள் பள்ளிகளுக்கு விரைந்து சென்று தங்கள் பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

இது பற்றி விக்டர் புரகோபிவி என்பவர் கூறுகையில், ‘’வேலைக்கு காரில் சென்று கொண்டிருந்தேன். அப்போது வானம் திடீரென இருண்டதுபோல் ஆனது. அடுத்த சில நொடியில் பெரிய வெடிச்சத்தம் கேட்டதும், மீண்டும் பகலை போன்ற வெளிச்சம் கண்ணை பறித்தது. எனக்கு கண் குருடு ஆனதுபோல் இருந்தது’’ என்றார்.

‘‘என் கேர்ள் ஃபிரண்டை பார்க்க பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தேன். அப்போது வானத்தில் பெரிய வெடிச்சத்தம் கேட்டதும், மின்னல் போல் வெளிச்சம் ஏற்பட்டது. அப்போது, பெரிய அதிர்வலை ஏற்பட்டு வீட்டு ஜன்னல் கண்ணாடிகள் எல்லாம் உடைந்து சிதறின. வானம் முழுவதும் பெரிய புகை மண்டலம் ஏற்பட்டது’’ என்று மற்றொருவர் கூறினார்.
பெரிய எரிகல் ஏரியில் விழுந்தது:

‘‘பூமியை நோக்கி வந்த பெரிய எரிகல், வளிமண்டலத்துக்குள் நுழைந்தபோது வெடித்து, பல துண்டுகளாக சிதறி இருக்கக் கூடும். இந்த எரிகற்கள் ரஷ்யாவில் 2 பகுதிகளிலும், அண்டை நாடான கஜகஸ்தானில் சில இடங்களிலும் தாக்கியுள்ளன. செல்யாபின்ஸ்க் பகுதியில் உள்ள ஏரியில், வானில் இருந்து வந்த எரிகற்களில் ஒன்று பெரிய துண்டாக விழுந்துள்ளது. அதை விஞ்ஞானிகள் கைப்பற்றி உள்ளனர். வானில் 32,800 கிமீ உயரத்தில் இந்த எரிகல் மிகப்பெரிய சத்தத்துடன் வெடித்துள்ளது’’ என்று மாஸ்கோவில் விஞ்ஞானிகள் கூறினர்.

8 கோடி மரங்கள் சாய்ந்தன:

செர்பியாவில் கடந்த 1908ம் ஆண்டு இதுபோல் பெரிய எரிகல் ஒன்று வளிமண்டலத்தில் நுழைந்தபோது வெடித்த சிதறியது. இதனால் ஏற்பட்ட அதிர்வு, துங்கஸ்கா என்ற பகுதியை தாக்கியது. இதனால்,  820 சதுர மைல் அளவுக்கு, 8 கோடி மரங்கள் சாய்ந்து விழுந்தன. ஆனால், எரிகல் விழுந்ததால் எந்த இடத்திலும் சிறிய பள்ளம் கூற ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...