May 2, 2013

அமாவாசை கழித்து வரும் மூன்றாம் நாளை திரிதியை திதி என்பர்


| :



                  மாவாசை கழித்து வரும் மூன்றாம் நாளை திரிதியை திதி என்பர். சித்திரை மாதத்தில் வரும் திரிதியை திதி மிகச் சிறப்பானது. இதனைதான் "அட்சய திரிதியை' என்பர். அட்சயம் என்றால் வளர்வது, குறையாதது என்று பொருள். அள்ள அள்ளக் குறையாது அள்ளித் தரும் அற்புதத் திருநாள் இது. இந்நாளில் செய்யப்படும் எந்த நற்காரியமும் தான- தர்மங்களும் அதிகப் பலன்களைத் தரும் என்பர்.

இந்நாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவேதான் இந்நாளில் தங்கம் வாங்க விரும்புகின்றனர். ஆனால் இவ்வளவு விலை உயர்ந்த பொருளை அனைவராலும் வாங்க இயலாது. அதற்காக மனம் தளர வேண்டாம். நமக்கு மிகவும் உபயோகமான பொருட்களை வாங்கிப் பயனடையலாமே. அன்று உப்பு, அரிசி மற்றும் தேவையான ஓரிரு ஆடைகள், ஏதாவது ஒரு சிறு பாத்திரம் என வாங்கலாம். எப்படியும் நாம் மாதாமாதம் மளிகைப் பொருட்கள் வாங்கி ஆக வேண்டும். அதனை இம்மாதத்தில் மட்டும் இந்த அட்சய திரிதியை நாளில் வாங்கி வளம் பெறலாமே.

இந்த அற்புதமான திருநாளில்தான் குசேலன் தன் பால்ய குரு குல நண்பனான கண்ணபிரானைச் சந்தித்து தன் வறுமையைப் போக்கிக் கொண்டான். குபேரன் சங்கநிதி, பதும நிதியை போன்ற நிதிகளைப் பெற்றான். பாண்டவர்கள் தங்களின் வனவாசத்தின்போது சூரியனிடமிருந்து அட்சய பாத்திரம் பெற்றனர். இது மணிமேகலை பெற்ற அட்சய பாத்திரம் போன்றது. எடுக்க எடுக்க குறையாமல் உணவு வழங்கும் பாத்திரம்தான் இது. வனவாசத்திற்கு இதுதான் பெரிதும் பாண்டவர்களுக்குப் பயன்பட்டது.

இந்த அட்சய திரிதியை நாளில்தான் பிட்சாடனரான சிவபெருமான் தன் கபால (பிரம்ம கபாலம்) பிட்சை பாத்திரத்தில் நிரம்பும் அளவு உணவை காசியில் அன்னபூரணியிடமிருந்து பெற்றுக்கொண்டார். கௌரவர்கள் சபையில் துச்சாதனன் பாஞ்சாலியின் உடையை உருவி மானபங்கப்படுத்தினான். அப்போது கண்ணபிரான் "அட்சய' என்று கூறி கைகாட்டி அருள, துச்சாதனன் உருவ உருவ புடவை வளர்ந்து கொண்டே இருந்த நாள் இந்த அட்சய திரிதியை நாளில்தான். இதனால்தான் பாஞ்சாலி மானம் காப்பாற்றப்பட்டது.

வட இந்தியாவில் இந்நாளை "அகஜித்' என்பர். ஸ்ரீமகாலட்சுமி விஷ்ணுவின் மார்பில் இந்நாளில்தான் இடம் பெற்றாள்; நிரந்தரமாகத் தங்கினாள். அஷ்ட லட்சுமிகளில் ஐஸ்வரிய லட்சுமியும், தான்ய லட்சுமியும் தோன்றிய நாளும் இதுதான்.

ஸ்ரீலட்சுமியானவள் வைகுண்டத்தில் மகாலட்சுமியாகவும், பாற்கடலில் ஸ்ரீலட்சுமியாகவும், இந்திரனிடம் சுவர்க்க லட்சுமியாகவும், அரசர்களிடம் ராஜ லட்சமியாகவும், வீரர்களிடம் தைரிய லட்சுமியாகவும், குடும்பத்தில் கிரக லட்சுமியாகவும், பசுக்களில் கோமாதாவாகவும், யாகங்களில் தட்சிணையாகவும், தாமரையில் கமலையாகவும், அவிர்பாகம் அளிக்கும்போது ஸ்வாகா தேவியாகவும் விளங்குகிறாள். இப்படி சகல யோகங்களுக்கும் ஆதாரமாக விளங்குபவள் லட்சுமிதான்.

எனவே, அட்சயதிரிதியை அன்று ஸ்ரீமன் நாராயணனின் இணைபிரியாத தேவி ஸ்ரீலட்சுமியைப் பூஜிக்க வேண்டும். நம் இல்லத்தில் சாஸ்திரப்படி பூஜை செய்பவர்களுக்கு திருவருளும் லட்சுமி கடாட்சமும் கிட்டும். அன்று செய்யும் தான- தர்மத்தால் மரண பயம் நீங்கி உடல்நலம் உண்டாகும். அன்னதானத்தால் விபத்து விலகும். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவினால் நம் குடும்ப குழந்தைகளின் கல்வி மேம்படும்.















No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...