May 9, 2012

"சிசேரியன்" முறை பிரசவமும் அதன் பலாபலன்களும் அறிந்து கொள்வோம் (வீடியோக்கள் இணைப்பு)

அன்பினால் கணவன் - மனைவி மனம் இணைந்து மகிழ்வுடன் உடல்-உயிர் கலந்து உருவாகிய குழந்தையை பெற்றெடுத்தலையே பிரசவம் என்கிறோம்.

இயற்கையாகவே பிரசவமானது, யோனிவழியாக (Normal vaginal Delivery) நிகழ்கின்றது, இந்த முறையாகவே எல்லாப் பாலூட்டிகளும்
பிறக்கின்றன. இதனை சாதாரண பிரசவம் அல்லது இயற்கைப் பிரசவம் என அழைக்கின்றனர்.
பெண்ணுறுப்பின் வழியாக குழந்தை வெளியே வருவதற்கு  இயலாமலிருக்கும் சந்தற்பங்களில் அல்லது அப்படி வெளி வருவதால் குழந்தைக்கும், தாய்க்கும் ஆபத்தாக இருக்கும் நிலையில் அடிவயிற்றில் அறுவை சிகிச்சை செய்து, குழந்தையை வெளிக்கொண்டு வரப்படுகிறது. இதனைத்தான் சிசேரியன் அறுவைப் சிகிச்சைப் பிரசவம் (Caesarian Section) என்கிறார்கள்.
பிரசவத்தை பொறுத்தவரை சாதாரணமாக யோனிவழிப் பிரசவமே சிறந்தது என ஆராச்சிகள் பல உறுதிசெய்கின்றன. சிசேரியன் அறுவைச் சிகிச்சைப் பிரசவம் பல பக்க விளைவுகளை உருவாக்கக் கூடியது.

ஆனாலும் சாதாரண முறையில் குழந்தையை பெற்றெடுக்க முடியாத சந்தற்பங்களில் தாய்மாரையும், குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் சிசேரியன் அறுவைச் சிகிச்சை தேர்ந்தெடுக்கப் படுகின்றது.          

இந்த சிசேரியன் எனப்படும் அறுவைப் பிரசவம் இரு வேறு சந்தற்பங்களில் நடைபெறுகின்றது. அதாவது கர்ப்பிணியை பரிசோதனை செய்யும் டாக்டர் அப் பெண்ணால் யோனிவழிப் பிரசவம் செய்ய முடியுமா? என அவரின் தேக நிலைகளை வைத்து பிரசவ வலி ஏற்படுவதற்கு முன்பே கணித்துக் கொள்வார்.

இரண்டாவதானது பிரசவலி ஆரம்பமாகி குழந்தை வெளிவரும் கடைசி நிலையில் தாயின் உறுப்புகள் சில பிரசவத்திற்கு ஒத்தியங்காது போவதால் திடீரென சிசேரியன்  செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகுதலாகும். இதனை அவசர சிசேரியன் என அழைப்பார்கள்.

தாய்மார்களை சிசேரியன் அறுவைச் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யும்போது மருத்துவர்கள் பல விடயங்களை அவதானிப்பர். முக்கியமாக சில விசேட நிலையில் கட்டாயமாக சிசேரியன் செய்யவேண்டிக் காணப்படலாம்.

*குழந்தையின் சூல்  வித்தகம் (Placenta) கர்ப்பப்பையின் கீழ்ப் பகுதியில் கர்ப்பப்பைக் கழுத்தை முற்றாக மூடியிருந்தால் (Placentc praevia),

*கர்ப்பத்தில் குழந்தை பிருஸ்டப் பக்கமாகக் காணப்பட்டால்; அல்லது குழந்தையின் வளர்ச்சி குறைந்த நிலையில் காணப்பட்டால் (Severe intra urterine growth retardation),

*தாயின் இடுப்புக்குழி குழந்தையின் தலையை விடச் குறுகியதாக இருந்தால் (Cephalo pelvic dispropation)

*குழ‌ந்தை‌க்கு‌ச் செ‌ல்லு‌ம் தொ‌ப்பு‌‌ள் கொடி பா‌தி‌க்க‌ப்ப‌ட்டிருந்தால்

* குழ‌ந்தை‌யி‌ன் அளவு தாயின் இடுப்புக் குழி அளவிலும் பெரிதாக இரு‌ந்தால்,.

*இர‌ட்டைய‌ர்க‌ள் அ‌ல்லது அத‌ற்கு‌ம் மே‌ற்ப‌ட்ட குழ‌ந்தைக‌ள் இருந்தால்

*இது போன்ற நிலைகளிலும், முன்னரே இரு தடைவைகள் சிசேரியன் அறுவைசெய்யப்பட்டவராக காணப்பட்டாலும் (Past two section) கட்டாயமாக சிசேரியன் முறையிலேயே குழந்தை பெறப்படல் வேண்டும். 

இவ்வாறான நிலைமைகளில் சிசேரியன் செய்யும் திகதியைத்  திட்மிட்டு அதற்கான ஆயத்தங்களைச் செய்து சிசேரியன் அறுவை மூலம் (Elective cesarian section)  குழந்தை பெறுவார்கள்

இவை தவிர தாயார் சாதாரண பிரசவம் செய்யக்கூடிய தகுதியில் இருந்தும், கடைசி நேரத்தில் அதாவது, பிரசவ வலி ஆரம்பிக்கும் போதோ அல்லது பிரசவ வலியின் போதோ சில பிரச்சினைகள் உருவாகினால், உடனடியாக சிசேரியன் செய்யப்படுகிறது. இதனை அவசர சிசேரியன் என அழைக்கிறார்கள்.

சில அவசர நிலைமைகளில் அதாவது குழந்தைக்கு அல்லது தாய்க்கு அல்லது இருவருக்கும் பாதிப்பு எனக் கருதும் பட்சத்தில் அவசர சிசேரியன அறுவைச் சிகிச்சை (Emergency caesarian section) செய்யப் பெற்று தாயையும், குழந்தையையும் காப்பாற்றுகின்றனர்.

அவசர சிசேரியன் எப்போது செய்கின்றார்கள் ? ஏன்?

*  பிரசவத்தின்போது, குழந்தையின் கீழிருக்கும் பாகம் அதாவது முதலில் வெளிவரும் பாகம் தலையாக இல்லாமல் குழந்தையின் பின்புறமாகவோ, முகமாகவோ, நெற்றியோ அல்லது தோளாகவோ இருந்தால் சாதாரண யோனிவழிப் பிரசவம் ஏற்பட வாய்ப்பு இல்லாது போகின்றது, அந்நிலையில் குழந்தையையும், தாயையும் காப்பாற்ற சிசேரியன்  செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது.

* பல பெண்களுக்கு பிரசவ வலியின் போது, செர்விக்ஸ் (கர்ப்பப்பையின் வாய்ப் பகுதி) விரிவடையத் தொடங்கும்.
ஆனால், சிலருக்கு முழுவதும் விரிவடையாது போகின்றது. அப்போது ஆக்ஸிடாசின் என்ற மருந்து கொடுக்கப்படுகிறது. அந்த மருந்து கொடுத்தும் சில பெண்களில் செர்விக்ஸ் முழுமையாக விரிவாவதில்லை. அதனால், அவரால் பெண்ணுறுப்பு வழியே குழந்தையை பிரசவிக்க முடியாத நிலை ஏற்படுகின்றது. அந்நிலையில் குழந்தையையும், தாயையும் காப்பாற்ற சிசேரியன்  செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது.

* வேறு சில பெண்களுக்கு செர்விக்ஸ் முழுமையாக விரிவடையும். ஆனால், முக்கி குழந்தையை பிறப்புக் குழாய் வழியே வெளியில் தள்ள இயலாத நிலை ஏற்படுகின்றது. அதாவது பிறப்புக் குழாயை விட குழந்தை மிகப்பெரிதாக இருந்தால், இந்த நிலை உருவாகும். அந்நிலையில் குழந்தையையும், தாயையும் காப்பாற்ற சிசேரியன்  செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது.

* யோனிவழி பிரசவத்திற்கு முயற்சிக்கும் வேளைகளில் குழந்தையின் இதயத்துடிப்புகள் குறையத் தொடங்கலாம். குழந்தையால், யோனி வழிப் பிரசவத்தை இதற்கு மேலும் தாங்க முடியாது என்பதற்கு இது அறிகுறியாக தோன்றும். அந்நிலையில் குழந்தையைக் காப்பாற்ற சிசேரியன்  செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது.

* யோனிவழி பிரசவத்திற்கு முயற்சிக்கும் வேளைகளில் தாயின் குருதி அமுக்கம் கட்டுக் கடங்காது இருக்கும் சமயத்திலும் (Severe pregnancy induced hypertention) (உய‌ர் ர‌த்த அழு‌த்த‌ம் அ‌ல்லது ‌நீ‌ரி‌ழீவு நோ‌ய் இரு‌ப்பது), சிசேரியன்  செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது.

* யோனிவழி பிரசவத்திற்கு முயற்சிக்கும் வேளைகளில் அம்னியன் பாயத்தினுள் குழந்தை மலம் கழித்தாலும், சிசேரியன்  செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது.

* குழந்தையின் திணறல் (Meconium or foetal distress) அல்லது தாய்க்கு ஏற்படும் அதிக குருதிப் பெருக்கு (Severe antepartumhaemorrhage) போன்ற நிலைமைகளில் அவசரமாக சிசேரியன் அறுவைக்கு தாய் உட்பட வேண்டி வரும்.

சிசேரியன் செய்யும் முறை என்ன?

சாதாரணமாக சிசேரியன் அறுவைச் சிகிச்சைக்கு முள்ளந்தண்டில் ஊசி ஏற்றி விறைக்கச் செய்யும் மயக்கமுறை (Spinal Anaesthesia) பாவிக்கப்படும்.

சிசேரியனில் தாய்க்கு முழுமையான மயக்கத்துக்கு மருந்து கொடுக்கப்படுகிறது அல்லது குறிப்பிட்ட இடம் மட்டும் மரத்துப்போகவும் மருந்து கொடுக்கிறார்கள். குறிப்பிட்ட இடத்துக்கு மட்டும் மயக்க மருந்து தரப்படும்போது, அந்த இடம் மட்டும் மரத்துப்போய் வலி தெரியாது. ஆனால் தாய்க்கு நினைவிருக்கும்.

பொதுவான மயக்கத்தில் தசைகள் இலகுவாகி தூக்கம் வந்துவிடும். வலி தெரியாது. நினைவும் இருக்காது. கர்ப்பப்பையிலிருந்து குழந்தையை வெளியே எடுப்பதற்காக, தொப்புளுக்குக் கீழே அடிவயிற்றை வெட்டுவார் மருத்துவர். பிறகு குழந்தை, நஞ்சுக்கொடி, பிரசவப்பை எல்லாவற்றையும் வெளியில் எடுத்து வெட்டப்பட்ட கர்ப்பப்பையையும் அடிவயிற்றையும் தைத்து விடுவார்.

சிசேரியன் முறையில் குழந்தை பெறுவதற்கு முன் ஏறத்தாழ ஆறு மணித்தியாலங்களும் அறுவை முடிந்து ஆறு மணித்தியாலங்களும் தாயானவர் உணவு ஆகாரமின்றி (Fasting)  வைத்திருக்கப்படுவார். அதனால்தான் அறுவைச் சிகிச்சை முடிந்ததும் குளுக்கோஸ், சேலைன் ஏற்றிக் கொண்டிருப்பார்கள்.

சிசேரியன் செய்யும் போது கொடுத்த விறைப்பு மருந்து குறையும் போது மெதுவாக வலி அதிகமாக உணரப்படலாம். இதன் போது மீண்டும் வலி நிவாரணிகள் (Pain killers) ஊசி மூலமும் (Injections), குதவழி மூலமும் வழங்கப்படும். அறுவைச்சிகிச்சை முடிந்த அடுத்த நாளே தாயாவர் நடக்கத் தொடங்க வேண்டும். இவ்வாறு நடப்பது கால்த்தசை நாளக்குருதி தேங்கிக் கட்டியாவதை தடுக்கும்.

குழந்தை பிறந்த பின்னர் பொதுவாக ஏற்படக்கூடிய மலச்சிக்கல் (Constipation) சிறுநீர்த் தொற்று (Urine infection) ஆகியவற்றைத் தடுக்க அதிக நீராகங்களையும் பழவகைகளையும் இலைக்கறிகளையும் எடுக்க வேண்டும். இவ்வாறு செய்யாமல் சிரமத்துடன் முக்கி மலங்கழிக்கும் போது தையலூடாக வயிற்றினுள் உள்ள பாகங்கள் வெளிவர சிறிது சாத்தியம் உண்டு.

எனவே இவ்வாறான சந்தற்பத்தில் இயலுமான அளவு முக்குதல், இருமுதல் போன்றவற்றைத் தவிர்த்தல் வேண்டும்.

ஒரு முறை சீசர் பண்ணிவிட்டால் அடுத்த முறையும் சீசர் பண்ண வேண்டி ஏற்படலாம். முதல் இரண்டு முறை சீசர் என்றால் மூன்றாவது குழந்தை கட்டாயமாக சீசர் முறையில் தான் பெறவேண்டியிருக்கும்.
சிசேரியனுக்குப் பிறகு எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
o தாயின் உடல் நிலையைப் பொறுத்து நான்கிலிருந்து ஆறு நாட்கள் வரை மருத்து வமனையில் இருக்க வேண்டும். மருத்து வமனையிலிருந்து வீடு திரும்பியதும் மெல்ல உங்கள் வழக்கமான எளிய பணிகளைத் தொடக்கலாம்.
o சிசேரியன் அறுவை சிகிச்சை முடிந்து ஒரு மாதத்திற்குள்ளேயே உங்களுடைய எல்லா வேலைகளையுமே செய்ய இயலும்.
o ஆபரேஷன் முடிந்து ஓரிரு நாட்களில், நீங்கள் சாதாரண உணவை உட்கொள்ளலாம். சிசேரியனுக்கு உணவுக் கட்டுப்பாடுகள் கிடையாது. சமச்சீரான உணவு வகைகளைச் சாப்பிடுவது நல்லது. உணவில் புரதச்சத்து கொஞ்சம் அதிகம் இருக்கட்டும்.
o நெய் போன்ற கொழுப்புச்சத்து நிறைந்த பொருட்களைத் தவிர்க்கவும். காரணம், கர்ப்ப காலத்தின்போது உடல் எடை கூடியிருக்கும். அதைக் குறைப்பதற்கு இந்தக் கொழுப்பு உணவுகள் எந்தவகையிலும் உதவாது.
o ஆறு வாரங்களுக்கு அதிக எடையுள்ள பொருட்களைத் தூக்குவதைத் தவிர்க்கவும். அதே போல் தாம்பத்திய உறவையும் ஆறு வாரங்களுக்குத் தவிர்த்து விடுங்கள்.
o நான்கிலிருந்து ஆறுவாரங்களுக்குப் பிறகு, அடிவயிற்றுத் தசைகளுக்கான உடற் பயிற்சிகளைத் தொடக்கலாம். தவிர சிசேரியனுக்குப் பிறகு வேறென்ன செய்ய வேண்டும்…
எப்போதெல்லாம் பரிசோதனைக்கு வரவேண்டும் என்பதையெல்லாம் உங்கள் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள். சிசேரியனால் ஆபத்து உண்டா?
சிசேரியன் அறுவை சிகிச்சை ஆபத்தானவையா? அதனால் ஏற்படும் பாதிப்புகள் எவை?
*பொதுவாக, சிசேரியன் அறுவை சிகிச்சை ஆபத்தில்லாதவை. மிகச் சில சமயங்களில் பிரச்சினைகள் வருவதுண்டு. ஆனால் எல்லா அறுவை சிகிச்சைகளிலும் அந்த ஆபத்து உண்டு. ஏதாவது தொற்று நோயோ அல்லது இரத்தக்கசிவோ ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

*மிக அரிதாக கர்ப்பப்பையை வெட்டிய இடம் மிகப் பலவீனமாக மாற வாய்ப்பிருக்கிறது. இது குடலிறக்கத்துக்கு வழி வகுத்து விடுகிறது. முதல் பிரசவம் சிசேரியன் என்பதால், அடுத்த பிரசவமும் சிசேரியனாக இருக்கும் என்ற கவலை வேண்டாம். உங்களது அடுத்த பிரசவம் இயல்பாக பெண்ணுறுப்பின் வழியே நிகழ வாய்ப்பிருக்கிறது.

*ஆனால், உங்களுக்கு சிசேரியன் எந்தக் காரணங்களுக்காகச் செய்யப்பட்டது என்பதைப் பொறுத்து, அடுத்த பிரசவமும் சிசேரியனாக அமையும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன

பிரசவ தினத்தை கணித்தல்:
சாதாரணமாக ஒரு குழந்தை 40 வாரங்கள் (280 நாட்கள்) தாயின் வயிற்றில் இருக்கும். இந்த 40 வாரக் கணக்கானது தாயின் கடைசி மாதவிடாய்க் காலத்திலிருந்து ஆரம்பிக்கும். (Calculated from last menstrual period). இவ்வாறு 40 வாரங்கள் என்று கூறினாலும் 38-42 வாரங்கள் வரை கர்ப்பகாலம் நீடிப்பது சாதாரணமானது. எனினும்

தற்போதைய மருத்துவர்கள் 41 வாரங்களுக்கு மேல் கர்ப்பத்தை நீடிக்க விடுவதில்லை. 

ஒழுங்காக 28 நாட்களிக்கு ஒருமுறை மாதவிடாய் வரும் பெண்கள் தங்கள் கடைசி மாதவிடாய் திகதியுடன் 9 மாதங்கள் 7 நாட்களைக் கூட்டுவதன் மூலம் குழந்தை பிரசவிக்கக் கூடிய நாளைக கணித்துக் கொள்ளலாம். உதாரணமாக ஒரு பெண்ணின் கடைசி மாதவிலக்கு திகதி 18.12.2010 எனக் கொண்டால் 9 மாதங்கள் 7 நாட்களைக் கூட்டும்போது அவருக்கு 25.9.2011இல் குழந்தை கிடைக்கும் சாத்தியம் உண்டு. இந்தத் திகதியிலிருந்து 14 நாட்கள் வேறுபாடு முன்னராக அல்லது பின்னராக காணப்படுவது சாதாரணமானது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...