Jul 2, 2012

வேற்று இலை அல்ல வெற்றிலை!--மூலிகைகள்


பிறப்பு முதல் இறப்பு வரை மனிதனின் எல்லாவிதமான சுக, துக்கங்களிலும் பங்கெடுக்கும் ஒரே மூலிகை... வெற்றிலை! நம் ஊரில் விளையும் கும்பகோணம் வெற்றிலை உலகப் புகழ்பெற்றது. வெற்றிலையுடன் சுண்ணாம்பு, பாக்கு அல்லது சீவல் சேர்த்துச் சுவைப்பதைத் தாம்பூலம் தரித்தல் என்கிறோம். 
கறுப்பு நிறத்தில் அதிகக் காரமாக இருப்பது கம்மாறு வெற்றிலை; கற்பூர வாசனையுடன் சிறிது காரமாக இருப்பது கற்பூர வெற்றிலை; மிகுந்த மணத்துடன் காரம் அவ்வளவாக இல்லாமல் ஓரளவு வெளிர் நிறத்தில் இருப்பது சாதாரண வெற்றிலை.
சித்த மருத்துவர்கள் சொர்ணமரியம்மாள், லோகமணியன் ஆகியோரிடம் வெற்றிலையின் மருத்துவக் குணங்கள்பற்றிப் பேசினோம்.
''வெற்றிலையில் உள்ள அத்யாவசிய எண்ணெய்       (Essential oil) பசியைத் தூண்டுவதுடன், செரிமானத்தையும் துரிதப்படுத்தும். டைஃபாய்டு, காலரா போன்ற நோய்களை உண்டாக்கும் நுண்ணுயிரிகளை அழிக்கும் ஆற்றலும் வெற்றிலைக்கு உண்டு. வெற்றிலையில் உள்ள சப்ரல் (Saprol) என்ற வேதிப்பொருளுக்குப் புற்றுநோயைத் தோற்றுவிக்கும் இயல்பு உண்டு என்றாலும், பாக்கு மற்றும் சுண்ணாம்போடு சேரும்போது புற்றுநோயைத் தோற்றுவிக்கும் ஆற்றல் வலுவிழந்துவிடுகிறது. நவீன ஆய்வின்படி, வெற்றிலையில் உள்ள ஹைட்ராக்ஸி சவிகல் (Hydroxychavicol),குளோரோஜெனிக் ஆசிட் (Chlorogenic acid)  போன்ற வேதிப் பொருட்கள் புற்றுநோய் எதிர்ப்புப் பொருட்களாகச் செயல்படுவது கண்டறியப்பட்டு உள்ளது'' என்று விளக்கினர்.
வெற்றிலையின் பலன்கள்

 குழந்தைகள் சரியாகப் பால் குடிக்காத நிலையில், பிரசவித்தப் பெண்களுக்கு மார்பில் பால் கட்டிக்கொண்டு வீக்கமும் வலியும் இருக்கும். வெற்றிலையைத் தணலில் வாட்டி மார்பில் வைத்துக் கட்டிவர வீக்கமும் வலியும் குறையும். அதே சமயம், வெற்றிலையை ஆமணக்கு எண்ணெய் தடவி வாட்டி, மார்பில் வைத்துக் கட்டினால் அதிக பால் சுரக்கும்.
சிறு குழந்தைகளுக்குப் பால் மற்றும் பால் பொருட்களால் செரியாமை ஏற்படும். பத்து வெற்றிலைக் காம்பு, ஒரு வசம்பு, கால் டீஸ்பூன் சீரகம், கால் டீஸ்பூன் ஓமம், இரண்டு பூண்டு பல், இரண்டு கிராம்பு ஆகியவற்றை மண் சட்டியில் கருக வறுத்து, ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு பாலாடை ஆகும் அளவுக்கு சுண்டக் காய்ச்சவும். இதனுடன் தேன் அல்லது நாட்டுச் சர்க்கரை கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க, செரியாமை நீங்கும்.
 பத்து வெற்றிலைகளைச் சிறிதாக நறுக்கி, ஒரு டீஸ்பூன் பொடித்த மிளகு சேர்த்து இரண்டு டம்ளர் தண்ணீர்விட்டு அரை டம்ளர் அளவுக்கு சுண்டக் காய்ச்சி இரண்டு அல்லது மூன்று முறை குடித்துவர உணவினால் ஏற்படும் நச்சுத்தன்மை நீங்கும்.
வெற்றிலையைத் தணலில் வாட்டிச் சாறு பிழிந்து அதனுடன் சம அளவு இஞ்சிச் சாறு கலந்து தினமும் குடித்துவர நாள்பட்ட நுரையீரல் நோய்கள் குணமாகும்.
அரை டம்ளர் தேங்காய் எண்ணெயில் ஐந்து வெற்றிலைகளைப் போட்டுக் கொதிக்கவிட்டு, வெற்றிலை நன்றாகச் சிவந்ததும் எண்ணெயை வடிகட்டி பாட்டிலில் பத்திரப்படுத்தி, சொரி, சிரங்கு, படைகளின் மீது தடவிவர நல்ல பலன் கிடைக்கும்.
 இரவில் படுக்கப்போகும்போது வெற்றிலையில் சிறிதளவு ஆமணக்கு எண்ணெய் தடவி, தணலில் காட்டி கட்டிகளின்மீது வைத்துக் கட்டினால், கட்டி உடைந்து சீழ் வெளிவரும்.
 வெற்றிலைச் சாறுடன் சிறிது தண்ணீர் மற்றும் பாலைச் சேர்த்து அருந்திவர, சிறுநீர் நன்றாகப் பிரியும்.
 கம்மாறு வெற்றிலைச் சாறுடன் வெந்நீர் கலந்து கொடுக்க வயிறு உப்புசம், மந்தம், தலைவலி, வயிற்றுவலி குணமாகும்.
 சிறிது வெற்றிலைச் சாறுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து தினமும் அருந்திவர, நரம்புகள் பலப்படும்.
 தாம்பூலம் தரிக்கும் முறை
வாயில் உள்ள உமிழ்நீருடன் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு ஆகிய மூன்றும் ஒன்று சேரும்போது, வாய் மற்றும் உதடுகளில் சிவப்பு நிறம் படியும். ஒரு நாளைக்கு காலை, மதியம், இரவு எனச் சாப்பிட்ட பிறகு மட்டுமே தாம்பூலம் போட வேண்டும். அப்படிப் போடும்போது முதலில் ஒன்றிரண்டு வெறும் வெற்றிலையை மென்று, பின்  பாக்கை மென்று... அதன் பிறகு சுண்ணாம்பு தடவிய வெற்றிலையைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். மெல்லும்போது முதலில் வரும் சாறை வெளியே உமிழ்ந்துவிட வேண்டும். பின்னர், மெல்லும்போது இரண்டு முதல் ஐந்து முறை வரும் சாறை உட்கொண்டதும், சக்கையைக் கீழே துப்பி வாயைக் கொப்பளிக்க வேண்டும். வெற்றிலையோடு பாக்கு, சுண்ணாம்பு மட்டுமின்றி சுக்கு, கிராம்பு, காய்ச்சுக்கட்டி போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம். வெற்றிலையில் உள்ள காம்பு, நடுநரம்பு, நுனிப்பகுதி போன்றவை செரிக்க நேரமாகும் என்பதால், அவற்றை நீக்கித்தான் பயன்படுத்த வேண்டும். அதேபோல், கொழுந்து வெற்றிலைதான் தாம்பூலத்துக்கு ஏற்றது. ம்ம்ம்... வெற்றிலை போடுவதும் ஒரு கலைதான்!

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...