Apr 28, 2013

சனி பார்வையில் கிரகங்கள்


சனீஸ்வரன் பெயரை கேட்டாலே அண்ட சராசரங்களே ஆடிப்போகும். எளியவர் வலியவர் பார்ப்பதில்லை. உயர்ந்தவர் தாழ்ந்தவர் பேதமில்லை. அனைவருக்கும் ஒரே நீதி, அது சமநீதி என்ற கோட்பாடு கொண்டவர். 

அதனால் பயம் கலந்த பக்தியோடு பார்க்கப்படுகிறார். இவர் பார்க்கும் இடங்கள் விருதிக்காது என்கிறது சாஸ்திரம். 

இவர் பார்வையில் உள்ள கிரகங்கள் பல தொல்லைகளை தரும் என்கிறது சாஸ்திர குறிப்புகள்.

நீலமாய் இருப்பார், கருப்பாய் மருவார். இயந்திரமாய் உழலுவார். உழைப்பை அதிகமாக்குவார். 

அரசியலுக்கு அடித்தளம், மருத்துவத்திற்கு பக்கப்பலம், தொழில் நுட்பத்திற்கு உதவிகரம் என்று வேறுகிரக அமைப்பிற்கு தகுந்த மாதிரி உதவி செய்வார். 

ஆனாலும் கல்வியில் தடை, கல்யாண யோகத்திற்கும் முட்டுக்கட்டை போடுவார். சோம்பலுக்கு சொந்தக்காரர். சுயநலத்திற்கு உடன் பிறந்தவர். 

இவரின் பார்வையில் கிரகங்கள் இருந்தால் என்னாகும் என்பதே இந்த ஆய்வு.

சூரியன் சனி பார்வையில் இருந்தால்!

சமூகத்தில் ஒருவருக்கான அந்தஸ்த்து, கவுரவம், தந்தையார் உறவு நிலை, அரசாங்க வெகுமதி, பதவி, உதவி, உயர்ந்தோர் நட்பை பற்றி பேசுவது சூரியன்.

இவருக்கு சனி பார்வை கிட்டினால்?

தந்தைக்கும் மகனுக்கும்மான  உறவு தன்டாவாளம் மாதிரி ஒட்டாது. நேசமும் பாசமும் நெஞ்சில் இருந்தாலும் உறவு நிலைகளில் உறுத்தல் வந்துவிடும். அன்னியோன்னியம் குறையும்.

பிறப்பு உயர்ந்ததாக இருந்தாலும் பழக்க வழக்கங்கள் சிறப்பதில்லை. தன்னிலும் தாழ்ந்தவரோடு நட்பு,தகுதி குறைவான சகவாசம், சட்டதிட்டங்களுக்கு கட்டுப்படாத மூர்க்கத்தனம், பாதை மாறி போதை வஸ்துக்களுக்கு அடிமையாதல், இல்லற வாழ்வில் இடர்பாடு,கண்டங்கள் என்று ஆலை கரும்பாய் ஆட்டி படைத்துவிடும்.

சந்திரனுக்கு  சனி பார்வையில் இருந்தால்!

புனர்பூ தோஷம் என்ற புதுப் பெயரை சூட்டிக் கொள்ளும். பெயர் இருக்கட்டும் பலன் என்ன?

வரட்சி அவ்வப்போது புரட்சி செய்யும்.எவ்வளவு வந்தாலும் செலவு, கடன் வாங்கும் சூழ்நிலை எனபது கண்கூடு. அது அதற்கு ஒரு கவலை, ஐயாவிற்கு பல கவலை என்பது உண்மையாகும்.

சோம்பல், சோர்வு அதிகம். அசதி மறதி இலவச இணைப்பு. கலையான மேடை ஏற காத்திருக்க    வேண்டிவரும். வாலிபம் கடக்கும் போதுதான் வாழ்க்கைத் துணை ஆணுக்கு அத்தான்,மாமா,என்னங்க என்ற குரல் கேட்கும்.

பெண்ணுக்கு?

என்னடி, செல்லம், என்ற அன்பொழுகும் வார்த்தையை கேட்க எப்படியும் முப்பதை தொடும் வரை முடியாது.

செவ்வாய்,  சனி பார்வையில் இருந்தால்?

முன்கோபி, முரட்டுத்தனம், எடுத்தெறிந்து பேசுவது சகஜம். இவர்கள் வாழ்க்கையில் எதுவும் நிரந்திரம் இல்லை. எல்லாம் வருவதும் போவதுமாக இருக்கும்.

வாழ்க்கையே ஏற்ற இறக்கம் நிறைந்தது. அதாவது திரிசங்கு சொர்க்கம். இவர்கள் எந்த உடல் பாகத்தை குறிக்கும் இடத்தில் இருக்கிறார்களோ அந்த இடத்தில் காயம் தழும்பு, ரணம் வராமல் போகாது.

புதன்,  சனி பார்வையில் இருந்தால்?

நாவில் சரஸ்வதி நர்த்தனமாடும்.  வாதம் செய்தால் வக்கீல், அறிவுரை சொன்னால் ஆசிரியர். கணக்கில்  புலிகள். கண்ணதாசனுக்கு   கூட பிறந்த தம்பி மாதிரி கவிதை எழுத்தும் ஆற்றல் கூட பெறுவதுண்டு. ஆனாலும் இவர்கள் யோசனை, அறிவு அடுத்தவருக்கே   அதிகம் பயன்படும்.

குரு,   சனி பார்வையில் இருந்தால்?


ஒருதரம் முடிவு செய்து விட்டால் இவர்கள் பேச்சை இவர்களே கேட்க மாட்டார்கள். பிடிவாதம் அதிகம். அதைவிட நன்றாக தூங்க பிடிக்கும்.


எதையும் சிரத்தையோடு செய்வதில்லை. செய்ய தெரியாமல் இல்லை.செய்யணுமே. அப்படியே அரசியல்வாதி குணம். சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இருக்காது.

சுக்கிரன் சனி பார்வையில் இருந்தால்?


ஆன்மீக உணர்வு அதிகம். கடைசி காலத்தில் காவி கட்ட கூட ஆசை வரும். அல்லது காவி கட்டிய மாதிரி பற்றற்ற வாழ்க்கை அமையும்.


ஆணுக்கு  இந்த அமைப்பு இருந்தால் பொண்டாட்டியா வந்த வந்த பொண்ணு பொழுதுக்கும் கரிச்சு கொட்டும். குறை சொல்லும், குற்றம் கண்டுபிடிக்கும். தலையெழுத்துடா சண்டாளா.. போட்டஎழுத்துடா பொண்டாட்டி.

பெண்ணுக்கு இந்த அமைப்பு இருந்தால்.. அதே பதில் தான். மாற்றம் இல்லை.

ராகு, சனி பார்வையில் இருந்தால்?

கரடு முரடானவர்கள். முன் கோவம் முன்னாலும், பின் கோவம் தன்னாலும் வரும். குறுக்கு புத்தி. சுயலாப சிந்தனை. ஆதாயம் வரும் என்றால் ஆற்றை மட்டும் அல்ல, கடலை கூட இறைப்பார்கள். மறைமுக வருமானம் வரும்.

கேது, சனி பார்வையில் இருந்தால்?

ஆன்மீக சிந்தனை. பற்றற்ற நிலை. வேதாந்தி. குடும்ப பாசம் குறைவு. வறுமை.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...