Jul 2, 2013

இதயம் காக்க... எளிய வழிகள்! இதயம் காப்போம்... இன்பம் காண்போம்!

கையளவு இதயத்தின் தாள லயமான சங்கீத ஒலிதான் 'லப்டப்... லப்டப்!’ நாளன்றுக்கு லட்சம் முறைக்கு மேல் துடிக்கிறது நம் இதயம். உடலில் இருக்கும் சுமார் ஒரு லட்சம் கிலோ மீட்டர் நீள ரத்த நாளங்களுக்கு, 15,000 லிட்டர் ரத்தத்தைச் செலுத்துகிறது. நாம் உறங்கினாலும், விழித்திருந்தாலும், சும்மா இருந்தாலும், சுறுசுறுப்பாக வேலை செய்தாலும் இடைவிடாது துடிப்பது இதயம் ஒன்றுதான். இதயம் நன்கு செயல்பட்டால்தான், உடலின் அனைத்து உறுப்புகளும் நல்ல நிலையில் இருக்கும்.
 ஓய்வில்லாமல் துடிக்கும் இதயம் தொடர்பான பல தகவல்களை நம்மிடையே பகிர்ந்துகொள்கிறார்கள் இதய நோய் நிபுணர் ஜே.கே.பெரியசாமி, இதய மருத்துவர் காஞ்சனா காசிநாதன் மற்றும் டாக்டர் டி.சதீஷ் காந்தி. இதய நோய்களுக்கான அறிகுறிகள், தடுப்பு முறைகள், சிகிச்சைகள் எனப் பல தகவல்களும் இந்த இணைப்பில் இடம்பெறுகின்றன. படியுங்கள்; பயன்பெறுங்கள்.
தாயின் கருவில் இருக்கும்போதே குழந்தையின் இதயத்தில் குறைபாடுகள் தோன்ற வாய்ப்பு அதிகம் இருக்கிறது. பிறவிக் குறைபாடுகள் மற்றும் வளர்ந்த பிறகு வருகின்ற நோய்கள் என இதய நோய்களை இரண்டு வகைப்படுத்தலாம்.
பிறவிக் குறைபாடுகள்
  நெருங்கிய சொந்தங்களுக்கிடையே திருமணம், கர்ப்ப காலத்தில் ஏற்படும் நோய்கள், மருத்துவர் பரிந்துரைக்காமல் சாப்பிடும் மருந்துகள் போன்றவை பிறவியிலேயே இதயக் கோளாறுகள் ஏற்பட முக்கிய காரணங்கள்.
  அழும்போது குழந்தையின் நிறம் நீலமாக மாறுதல், அடிக்கடி சளி பிடிப்பது, அடிக்கடி நோய்வாய்படுவதால் உடல் எடை அதிகரிக்காமல் இருத்தல் போன்றவை, பிறவி இதய நோய்களின் அறிகுறிகள்.
 இதயத்தின் மேல் அறைகளுக்கு இடையே சுவரில் துளை, ஏட்ரியம் எனப்படும் இதய மேல் அறைகளுக்கு இடையில் உள்ள சுவரில் துளை ஏ.எஸ்.டி என்று அழைக்கப்படும். பிறந்தவுடன் குழந்தைக்கு இந்த துளை கண்டறியப்பட்டால் பெரும்பாலும் இது 40 வயதுக்கு மேல்தான் தொந்தரவு தரும். இதைக் குணப்படுத்த எளிய அறுவை சிகிச்சை போதும்.
  இந்தத் துளையானது வலது, இடது வென்டரிக்கிள் எனப்படும் கீழ் அறைகளுக்கு இடையே காணப்பட்டால் வி.எஸ்.டி என்று அழைக்கப்படும். பெரும்பாலானவர்களுக்கு 12 வயதில் தானாகவே மூடிக்கொள்ளும்.
எப்படிப்பட்ட குறையாக இருப்பினும் கவலைப்படத்தேவை இல்லை. நவீன மருத்துவத்தின் மூலம் குறைகள் நீக்க முடியும்.
வளர்ந்த பிறகு ஏற்படும் இதய நோய்கள்
பள்ளி செல்லும் வயதில் உள்ள குழந்தைகளைப் பாதிக்கும் நோய் 'சரவாங்கி’ (Rheumatic Heart Disease).வளர்ந்துவரும் நாடுகளிலும் மக்கள்தொகை அதிகம் உள்ள நாடுகளிலும் இந்த நோய் பரவலாக இருக்கிறது.
  தொண்டைக் கரகரப்பு, மூட்டுவலி, மூட்டு வீக்கம், லேசான காய்ச்சல், நெஞ்சு படபடப்பு, மூச்சுத்திணறல், அடிக்கடி சளி பிடித்தல் போன்ற அறிகுறிகள் தென்படும்.
  இந்த நோய் ஏற்பட்டால், இதய வால்வுகள் சுருங்கும். வால்வுகள் சரியாக மூட முடியாமல் கசிவு ஏற்படும். இதயத்தின் இடதுபுறம் உள்ள மேல் அறைக்கும் கீழ் அறைக்கும் இடையே இருக்கும் ஈரிதழ் வால்வு மற்றும் சுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் பிறைச்சந்திர வால்வு ஆகிய இரண்டும் பாதிப்படையும்.
சிகிச்சை முறை:
 வால்வு சுருக்கத்தை அறுவைசிகிச்சை இல்லாமல் வால்வை விரிவுபடுத்தும் பலூன் மூலமே சரிப்படுத்திவிடலாம். மயக்கமருந்து கொடுக்கத் தேவை இல்லை.
  வலது பக்கக் காலில் உள்ள சிரை மூலமாக ஒரு மெல்லிய (0.25 மிமீ) கம்பி போன்ற கருவியைச் செலுத்தி, அதன் வழியாக இதயத்தின் மேல் அறைகளுக்கு நடுவில் இருக்கும் குறுக்குச் சுவரின் வழியாக, பலூன் ஒன்று அனுப்பப்படும். சுருங்கிய வால்வில் இந்த பலூன் பொருத்தப்படும். பிறகு உடலின் வெளியில் இருந்தபடியே இரண்டு அல்லது மூன்று முறை பலூன் விரிவடையச் செய்யப்படும். சுருங்கிய வால்வும் விரிவாகி, இயல்பு நிலைக்குத் திரும்பும்.
  இந்த சிகிச்சையில் நெஞ்சில் தழும்புகள் ஏற்படாது.
  நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இல்லை. ஓரிரு நாட்களில் வீட்டுக்குத் திரும்பலாம்.
சிகிச்சைக்குப் பிறகு:
  40 வயது வரை தொடர்ந்து, மூன்று வாரத்துக்கு ஒருமுறை பென்சிலின் ஊசி மருந்தை போட்டுக்கொள்ள வேண்டும்.
 சுத்தமான தண்ணீர், உணவு, சுகாதாரமான காற்று அவசியம் தேவை.
  தொண்டை வலி வராமல், பார்த்துக்கொள்ள வேண்டும்.
 இது தொற்றுநோய் இல்லை என்றாலும், ஒரு முறை சரவாங்கி நோய் வந்தவர்களுக்கு மீண்டும் வர வாய்ப்பு உண்டு.
மாரடைப்பு நோய்
உயிர் இழப்புக்கு முக்கியக் காரணமாக இருப்பது மாரடைப்பு நோய். எல்லா வயதினரையும் எல்லாத் தரப்பினரையும் தாக்கும் நோய் இது. கிட்டத்தட்ட 40 சதவிகிதம் மனித உயிர் இழப்புக்குக் காரணமாவது மாரடைப்புதான். ஆண்டுதோறும் 50 லட்சம் பேர் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். ஆனாலும் உரிய விழிப்பு உணர்வும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டால், மாரடைப்பின் பாதிப்பில் இருந்து நிச்சயம் நம்மைக் காத்துக்கொள்ளலாம்.
காரணங்கள்:
மாரடைப்பு நோய் திடீரென்று தோன்றுவது அல்ல. 20 ஆண்டுகளானாலும் எந்த விதமான அறிகுறிகளும் இல்லாமலேயே இருக்கும் நோய்.
உயர் ரத்த அழுத்தம், அதிகக் கொழுப்புச் சத்து, சர்க்கரை நோய், புகைபிடித்தல், மன அழுத்தம் போன்றவற்றால்கூட ரத்த நாளத்தின் உட்சுவர் பாதிக்கப்படுகிறது. உட்சுவர் கரடுமுரடாகி, அதன் மீது ரத்தத்தில் மிதக்கும் கொழுப்புத் திவலைகள் படிந்துகொண்டே வரும். ரத்த ஓட்டத்துக்கான பாதை குறுகலாகி, ரத்த ஓட்டம் தடைபடும். பிறகு இதய நாளத்தில் விறைப்பு அல்லது உறைகட்டி ஏற்பட்டால், ரத்த ஓட்டம் முழுவதுமாகத் தடைபடும். இதயத் தசைக்கு ரத்த ஓட்டம் தடைபடுவதால், அவை செயலிழக்கின்றன. புகைபிடித்தல், அதிகமாக உணர்ச்சிவசப்படுதல், அளவுக்கு அதிகமானக் கடின உழைப்பு போன்றவற்றால், இது ஏற்படலாம். அடைப்பு அதிகமாகும்போது, இறுக்கம் அல்லது தீவிர மாரடைப்பு ஏற்படுகிறது.
மாரடைப்பு நோய்க்கான அறிகுறிகள்:
ஒருவர் ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கும்போது, அவருடைய ரத்த நாளங்களில் 50 சதவிகிதம் அடைப்பு இருந்தால்கூட இதயத்துக்குத் தேவையான சுத்த ரத்தம் கிடைத்துவிடுகிறது. அதனால் அவருக்கு எந்த விதமான அறிகுறியும் தெரியாது.
  கடினமான உழைப்பில் ஈடுபடும்போது குறுகிப்போன நாளங்கள் வழியாகப் போதுமான ரத்தம் இதயத்துக்குக் கிடைப்பது இல்லை. அப்போது மார்பு இறுக்கம் என்ற அறிகுறி தோன்றும். ஓய்வு எடுத்துக்கொண்டால், இதயத்துக்குத் தேவையான ரத்தமும் பிராண வாயுவும் கிடைக்கும். நெஞ்சு வலியும் மறைந்துவிடும்.
  மாரடைப்பு நோய்க்கு ஆரம்ப அறிகுறியே மார்பு இறுக்கம்தான். மார்பு இறுக்கம் மார்பின் நடுப்பகுதியில் நெஞ்சு எலும்புக்குப் பின்புறம் தோன்றும். இரு தோள்களில் - முக்கியமாக இடது தோளில் - ஆரம்பித்து கைகள், கழுத்து, தாடை, முதுகு போன்ற பகுதிகளுக்கும் வலி பரவலாம். சில சமயங்களில் குறிப்பிட்டப் பகுதியில் மட்டுமே வலி தோன்றலாம். பொதுவாக நோயாளிகள்  இதை வாயுக் கோளாறு என்று அசட்டையாக இருந்துவிடுவார்கள். இந்த மார்பு இறுக்கத்தால் இதயத் தசைகள் சேதம் அடைவதில்லை. ஆனால் எந்த நேரத்திலும் ரத்த நாளங்கள் தடைபட்டு மாரடைப்பு ஏற்படலாம். சாதாரண மார்பு இறுக்கமா அல்லது மாரடைப்பா என்று மருத்துவரால்தான் கண்டறிய இயலும்.
  கடுமையான மார்பு இறுக்கம் போன்ற வலி 15 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும்.
  மார்பு வலியுடன் உடல் எங்கும் திடீர் வியர்வை, மூச்சுத்திணறல், வாந்தி, பலவீனம், தலைச்சுற்றல், மயக்கம், வேகமான நாடித்துடிப்பு ஆகியனவும் ஏற்படலாம்.
  அறிகுறிகளே இல்லாமல் மாரடைப்பு போன்றவையும் ஏற்படுவதும் உண்டு. இதை 'ஊமைதாக்குதல்’ என்பார்கள்.
பரிசோதனை முறைகள்
முதலில் இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்படும்.அதன்பிறகே, தேவையான ஆய்வுக்கூடப் பரிசோதனைகள் பரிந்துரைக்கப்படும்.
ஈ.சி.ஜி (இதய மின் வரைபடம்)  
இதயம் சுருங்கும்போது ஒவ்வொரு துடிப்பிலும் மின் அலைகள் உடல் முழுவதும் பரவுகின்றன. இந்த மின் அலைகளைக் கருவி மூலம் பதிவு செய்வதே ஈ.சி.ஜி. இதயத் துடிப்பு சீராக இருக்கிறதா என்பதை இதன் மூலம் அறிந்துகொள்ளலாம். இதய நோய் உள்ள ஒரு சிலருக்கு ஈ.சி.ஜி - இல் மாறுபாடுகள் இல்லாமல்கூட இருக்கும்.
மார்பு எக்ஸ்ரே
இதயம் விரிந்துள்ளதா என்பதையும், நுரையீரலின் ரத்த ஓட்டம் மற்றும் செயலாற்றும் தன்மையையும் கண்டறியலாம்.
அடிப்படை ரத்தப் பரிசோதனைகள்
அடிப்படையான ரத்தப் பரிசோதனைகள் செய்வதன் மூலம், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு, கொழுப்பின் அளவு, ரத்த அணுக்களின் அளவு, ஹீமோகுளோபின் அளவு, யூரியா, கிரியாட்டின் ஆகியவற்றின் அளவுகள் பரிசோதிக்கப்படும். இவை மூலம் இதய நோய்களை உருவாக்கும் இதரக் குறைபாடுகள் உள்ளனவா என்பதையும், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் ஆகியன பாதிக்கப்பட்டு இருக்கின்றனவா என்பதையும் தெரிந்துகொள்ளலாம்.
சிறப்பு ரத்தப் பரிசோதனைகள்
மாரடைப்பு நோயால் ரத்தத்தில் ஏற்படும் மாறுதல்களைக் கண்டறிய 'சி.பி.கே - எம்.பி’ ((cpk-mb - creatine phosphokinase myocardial band)என்ற பரிசோதனை செய்யப்படும். கிரியாட்டின் ஃபாஸ்போகைனேஸ் என்ற என்ஸைம் அளவு பரிசோதிக்கப்படும். மாரடைப்பு இருந்தால் இதன் அளவு ரத்தத்தில் அதிகரித்திருக்கும்.
இதேபோல ட்ரோபோனின் 'டி’ பரிசோதனையும், மாரடைப்பு நோய்க்கான குறிப்பிட்ட மாறுதல்கள் ஏற்பட்டு உள்ளனவா என்பதைக் கண்டறிய உதவும்.
எக்கோ கார்டியோகிராம் பரிசோதனை
இதயத்தின் அமைப்பு மற்றும் அதன் செயல்திறன் கண்டுபிடிக்கப்படும். பிறவியிலேயே இதயத்தில் கோளாறுகள் இருந்தாலும் அவற்றைக் கண்டுபிடித்துவிடலாம்.
டிரட்மில் பரிசோதனை
சில நோயாளிகளின் இதயத்தில் உள்ள அடைப்புகள் அவர் வேகமாக நடப்பது போன்ற செயல்களில் ஈடுபடும்போதுதான் கண்டறிய முடியும். டிரட்மில் என்ற எந்திரத்தில் நோயாளியைச் செயற்கையாக நடக்கவைத்து இதயத் துடிப்பு மாறுதல்களை நுணுக்கமாக ஈ.சி.ஜி. மூலம் கண்டறியும் பரிசோதனை இது.
ஆஞ்சியோகிராம் பரிசோதனை
ரத்தக் குழாயில் ஏற்பட்டு உள்ள அடைப்புகள், சுருக்கங்கள் மற்றும் அவற்றின் நீளம் ஆகியவற்றைக் கண்டறியும் பரிசோதனை இது.
கை அல்லது தொடைப்பகுதியில் இருக்கும் ரத்தக் குழாய் வழியாக, சோதனைக் குழாயைச் செலுத்தி, இதயத்துக்குச் செல்லும் ரத்த நாளங்கள் எக்ஸ்-ரே உதவியுடன் படம் பிடிக்கப்படுகின்றன. தற்போது குறைந்த செலவில் பின்விளைவுகள் இல்லாத வகையில் அனைத்துத் தரப்பினருக்கும் செய்யப்படுகிறது. இந்தப் பரிசோதனையை மேற்கொண்டவர்கள் நான்கு மணி நேர ஓய்வுக்குப் பிறகு வீடு திரும்பலாம்.
கதிர் இயக்கப் பரிசோதனை
(நியூக்ளியர் ஸ்கேன்)
இதய நோயாளிகளுக்குக் கதிரியக்கம் உள்ள ரசாயனப் பொருட்களைக் கொடுத்து பரிசோதனை செய்யப்படும்.  இதன் மூலம் இதயத் தசைகள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டு இருக்கின்றன என்பதை அறியலாம். பழுதடைந்த தசைகளையும் நல்ல நிலையில் இயங்கும் தசைகளையும் பிரித்து அறியவும் முடியும். ரத்தக் குழாய் அடைப்பால் எந்த அளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பதையும் கண்டுபிடித்துவிடலாம்.
முதலுதவி
சி.பி.ஆர். முதலுதவி
 தீவிரமான மாரடைப்பு வருவதன் முதல் அறிகுறி, திடீர் மயக்கம்தான்.
 மயக்கம் அடைந்தவரைச் சுற்றிக் கூட்டம்போடக் கூடாது. முகத்தில் தண்ணீர் தெளிப்பது கூடாது.
 மார்பு அல்லது இடப்புறத்தோள்பட்டையில் மிக அதிக வலி, மூச்சிறைப்பு ஆகியவை மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கலாம்.
 இந்த அறிகுறி தெரிந்தவுடன், நோயாளியின் இறுக்கமான உடைகளைத் தளர்த்தி அவரை சமமான தரையில் படுக்கவைக்கவேன்டும்.
  நோயாளியை உடனடியாக ஆம்புலன்ஸ் அல்லது வேறு பாதுகாப்பான வாகனம் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது மிகவும் அவசியம்.
 இதயத் துடிப்பையும் நாடித் துடிப்பையும் பரிசோதித்துப்பார்க்கவேண்டும். துடிப்பு இல்லை என்றால், மயக்கம் அடைந்தவரின் மார்பில் கையால் அழுத்தி 'கார்டியோபல்மோனரி ரிசஸிடேஷன்’ (Cardiopulmonary resuscitation - CPR) என்னும் முதலுதவி செய்ய வேண்டும். வாய் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கவும் முயல வேண்டும். குடும்பத்தில் ஒருவராவது சி.பி.ஆர். முதலுதவி தெரிந்து வைத்திருப்பது நல்லது.
தீவிர இதய சிகிச்சை
  நாடித் துடிப்பு, ரத்த அழுத்தம், ஈ.சி.ஜி. போன்ற பரிசோதனைகள் செய்யப்படும்.
  மாரடைப்பு உறுதியானால் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை தொடங்கப்படும்.  
  மன அமைதிக்கும், ஓய்வுக்கும் தூக்க மருந்து மற்றும் ரத்தக் குழாயில் உள்ள அடைப்பு கரைய சக்திவாய்ந்த 'ஸ்ட்ரெப்டோகைனேஸ்’ (Streptokinase ) உடனடியாகச் செலுத்துவார்கள்.
  மாரடைப்பு வந்த முதல் ஒரு மணி நேரத்துக்குள் சிகிச்சை அளித்தால் இதயத் தசைகள் பழுதடையாமல் தடுக்க முடியும்.
 பலூன் சிகிச்சை முறை (ஆஞ்சியோபிளாஸ்டி)
ஒன்று அல்லது இரண்டு ரத்தக் குழாய்களில் ஒரு குறுகிய இடத்தில் அடைப்பு இருந்து, மாரடைப்பு ஏற்பட்டிருந்தால், அதை ஆஞ்சியோகிராம் மூலம் உறுதி செய்துகொண்டு, ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்வார்கள்.
  இந்த சிகிச்சையில் நோயாளிக்கு மயக்க மருந்து கொடுக்கப்படுவது இல்லை.
  இதயத்தில் உள்ள ரத்தக் குழாய் அடைப்பை 0.014 அங்குல தடிமன் உள்ள கம்பியினால் கடந்து, அதன் மேல் ஒரு பலூனைச் செலுத்தி, அடைக்கப்பட்ட ரத்தக் குழாய் விரிவுபடுத்தப்படும். இந்தக் குழாய் மீண்டும் சுருங்காமல் இருக்கவும், ரத்தக் குழாய் துவாரத்தை அதிகப்படுத்தவும் பாதிக்கப்பட்ட இடத்தில் ஒரு கம்பிவலை பொருத்தப்படும். இதற்கு 'ஸ்டென்ட்’ (stent )என்று பெயர்.
  இதனால் ரத்த ஓட்டம் சீராகி மீண்டும் மாரடைப்பு வராமல் தடுக்கப்படுகிறது.
  தழும்புகள் இருக்காது.
  இரண்டு அல்லது மூன்று நாட்களில் வீட்டுக்குத் திரும்பலாம். ஒரு வார காலத்துக்குப் பிறகு வழக்கமான பணிகளில் ஈடுபடலாம்.
அறுவைசிகிச்சை முறைகள்
மூன்று ரத்தக் குழாய்களில் அடைப்பு அதிகமாக இருந்தாலோ, இதயத்தின் பெரிய ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு பலூன் சிகிச்சைக்கு உகந்ததாக இல்லாவிட்டாலோ, அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்படும். மருந்துகள் மூலமாக, ஆஞ்சியோபிளாஸ்டி மூலமாக குணப்படுத்த முடியாத வேறு சிக்கல்கள் இருக்கும் நோயாளிகளுக்கும் அறுவை சிகிச்சையே ஏற்றது.
பைபாஸ் அறுவைசிகிச்சை எவ்வாறு செய்யப்படுகிறது?
அடைபட்ட ரத்தக் குழாயின் அடைப்பைத் தாண்டி நல்ல பாகத்துடன், இதயத்தில் இருந்து ரத்தத்தை வெளியே எடுத்துப்போகும் மகா தமனிக்கு ஓர் ரத்தக் குழாய் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது. இந்த இணைப்பு நாளம் காலில் இருந்தோ அல்லது இடது கையில் உள்ள ரத்தக் குழாயில் எடுக்கப்படும்.
சிகிச்சைக்குப் பிறகு கடைப்பிடிக்க வேண்டியவை
தீவிர சிகிச்சைப் பிரிவில் குறைந்தது 48 மணி நேரம் நோயாளி வைக்கப்படுவார். பிறகு வார்டில் பத்துப் பன்னிரன்டு நாட்கள்வைத்துக் கண்காணிக்கப்பட்டு, வீட்டுக்கு அனுப்பப்படுவார்.
 
பழைய நிலைக்குத் திரும்ப நான்கு முதல் ஆறு வாரங்கள் வரை ஆகலாம்.
  குறைந்த கொழுப்புச் சத்துள்ள உணவுகளையே உண்ண வேண்டும்.
  நிறைய ஓய்வெடுக்க வேண்டும்.
  மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்துவர வேண்டும்.
செயற்கை இதயம்
இந்தியாவிலேயே, சென்னையில் மட்டும்தான் செயற்கை இதய வசதி உண்டு.  
'எக்ஸ்ட்ரா கார்போரியல் மெம்பரேன் ஆக்சிஜனேஷன்’ என்பதன் சுருக்கம்தான் எக்மோ. உடலுக்கு வெளியே இருந்து இதயம் மற்றும் நுரையீரல் பணியைச் செய்வது என்று அர்த்தம்.  ரத்த அழுத்தக் குறைவு, மாரடைப்பு போன்ற சமயங்களில் இதயத்தின் செயல்பாடு பாதிக்கப்படும். சில மணி நேரங்களில் உயிரிழப்பு ஏற்படக்கூடும் என்ற அச்சம் உருவாகும்போது, 'எக்மோ’ கருவியைப் பயன்படுத்தி உயிரைக் காப்பாற்ற முடியும்.  இந்த கருவியைப் பயன்படுத்தும்போது மூளை செயல்படும்.  மற்றவர்களுடன் பேசலாம்.  கருவி பொருத்தியிருக்கும் நேரத்தில் இதயம் மற்றும் நுரையீரலின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கான சிகிச்சையும் அளிக்கப்படும்.  சிகிச்சை பலன் அளிக்காதபோது இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படும்.  ஹார்ட்-லங் கருவி மூலம் மூன்று மணி நேரத்துக்கு மேல் ஒருவருக்கு ரத்த ஓட்டம் அளிக்க முடியாது. 'எக்மோ’ கருவியை மாற்று இதயம் கிடைக்கும் வரை பயன்படுத்தலாம்.
பேஸ்மேக்கர்
நம்முடைய உடல் முழுவதும் ரத்தத்தைக் கொண்டுசெல்ல இதயம் துடிக்க வேண்டும். இதயம் துடிக்க அதன் உள்ளேயே ஒரு மினி ஜெனரேட்டர் உள்ளது. இது இதயத்தின் ஒவ்வோர் அறைக்கும் மின்சாரத்தைக் கொண்டுசென்று இதயத்தைத் துடிக்கச் செய்யும். இதயத்தில் போதுமான அளவில் மின்சாரம் உற்பத்தியாகாவிட்டால், இதயத்துடிப்பு குறைந்துவிடும்.  இதனால் உடல் முழுவதும் ரத்தம் செல்வது பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். இந்த நிலையில் நோயாளிக்குச் செயற்கை இதயத் துடிப்பு அளிக்கும் பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்படும். தற்போது நவீன வசதிகளுடன்கூடிய பேஸ்மேக்கர் கருவிகள் வந்துவிட்டன.
இதய நோயாளிகளுக்கான உணவு முறைகள்
சரியான உணவுக்கட்டுப்பாடு இல்லாததே மாரடைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கான முக்கியமான காரணங்கள். அதிகமான கொழுப்புச் சத்து உள்ள உணவுகளைச் சிறு வயதில் இருந்தே கட்டுப்பாடு இல்லாமல் சாப்பிட்டு வந்தவர்களுக்கு ரத்தத்தில் அதிகக் கொழுப்பு சேர்வதற்கு வாய்ப்பு உண்டு.
  கட்டுப்பாடு இல்லாமல் உண்ணும் உணவில் கிட்டத்தட்ட 50 சதவிகிதம் கொழுப்புச் சத்தாகவும் 25 சதவிகிதம் புரதமாகவும், 25 சதவிகிதம் மாவுச் சத்தாகவும் இருக்கும். கொழுப்புச் சத்தை 50 சதவிகிதத்தில் இருந்து 10 சதவிகிதமாகக் குறைக்க வேண்டும். மாவுச் சத்தை 50 சதவிகிதமாக அதிகரித்துக்கொள்ளலாம்.
  கொழுப்பை எவ்வளவு தவிர்க்க முடியுமோ, அவ்வளவு தவிர்க்கலாம்.
  சைவ உணவுப் பழக்கம்தான் இதயத்துக்கு மிகவும் நல்லது.
 பச்சைக் காய்கறிகள், அதிக இனிப்பு இல்லாத பழ வகைகள், நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதயம் காக்கும் உணவுகள்
கடைப்பிடிக்கவேண்டியவை:
  சரியான நேரத்துக்குச் சாப்பிடுங்கள்.
  நோ ஃபாஸ்டிங்... நோ ஃபீஸ்டிங்! (பட்டினியும் கூடாது. விருந்தும் வேண்டாம்!)
  காய்கறி சாலட் அவசியம் சாப்பிட வேண்டும்.
  வயிறு முட்டச் சாப்பிட வேண்டாம்.
  ஆரோக்கியமான சுத்தமான புதிதாகச் சமைக்கப்பட்ட உணவுகளையே உட்கொள்ளுங்கள்.
  அதிகக் காரம், புளிப்பு, இனிப்பு, கொழுப்பைக் குறையுங்கள்.
  அதிகம் இனிப்பு இல்லாத கொய்யா, ஆப்பிள், ஆரஞ்சு போன்றவற்றைச் சாப்பிடலாம்.
  நார்ச்சத்து நிரம்பிய பயறு வகைகள், முளைகட்டிய தானியங்கள், கீரைகள், பழங்கள், வாழைப் பூ, வாழைத் தண்டு, புடலங்காய், முருங்கை, பீன்ஸ், பலாப்பழக் கொட்டை, ஓட்ஸ் போன்றவற்றை அதிகமாகச் சாப்பிடுங்கள்.
தவிர்க்க வேண்டியவை:
 பேக்கிங் சோடா, அஜினோமோட்டொ, சில சாஸ் வகைகளில் நைட்ரோசைமன் என்ற வேதிப்பொருள் அதிகம் இருக்கும். இவற்றைத் தவிர்க்கவும்.
 வறுத்த, பொரித்த உணவுகளை வெறுத்து ஒதுக்கிவிடுங்கள்.  
 சமையலில் ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயைத் திரும்ப திரும்பப் பயன்படுத்தக் கூடாது
 செயற்கை இனிப்புகள் மற்றும் செயற்கைச் சாயம் ஏற்றப்பட்ட உணவுகளைத் தவிர்த்திடுங்கள்.
சீரான எடை சிறப்பான ஆரோக்கியம்!
  பாடி மாஸ் இண்டெக்ஸ் மூலம் உடல் எடை ஆரோக்கியமானதா என்று கணக்கிடலாம்.  பி.எம்.ஐ.புள்ளிகள் 25 அல்லது அதற்கு மேல் இருந்தால் ப்ளீஸ்... உஷார்!
  எடை மிகவும் அதிகமாக இருந்தாலோ அல்லது குடும்பத்தில் யாருக்கேனும் சர்க்கரை நோய் இருந்தாலோ, உடனடியாக சர்க்கரை நோய் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.  ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.  
  இடுப்பு அளவைக் கணக்கிடுங்கள்.  இதனால் கொழுப்பு எவ்வளவு இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.  ஆண்களுக்கு எனில் சராசரியாக இடுப்பின் அளவு 40 இன்ச் அளவுக்கும் குறைவாக இருக்க வேண்டும்.  பெண்களுக்கு எனில் 35 இன்ச் அளவுக்கும் குறைவாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
  குறைந்த அளவிலான எடைக் குறைப்புகூட கூடுதலான பலனை அளிக்கும்.  உங்கள் எடையை பத்து சதவிகிதம் குறைத்தாலே, அது ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், ரத்தத்தில் கொழுப்பின் அளவைக் குறைக்கவும், சர்க்கரை நோய்க்கான வாய்ப்பையும் குறைக்கவும் செய்யும்.  
  பெரியவர்களுக்கு அதிக அளவு உடல் எடை கூடினால், அது தசை எடையாக இருக்காது கொழுப்பினால்தான் எடை கூடும்.  இதனால் உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு அளவை அதிகரிப்பது, சர்க்கரை நோய் போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு வழி வகுப்பதுடன் மாரடைப்புக்கான வாய்ப்பையும் அதிகரிக்கும்.
இதமான உடற்பயிற்சிகள்
இதய நோயாளிகள் என்று உறுதி செய்யப்பட்டவர்களும், 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகே உடற்பயிற்சிகளில் ஈடுபடவேண்டும்.
 
நடைப்பயிற்சி
வாரத்துக்கு 120 நிமிடங்கள் வேகமாக நடப்பது என்ற உடற்பயிற்சியே பொதுவாக மருத்துவரீதியாகப் பரிந்துரைக்கப்படுகிறது.
நடக்கும் ஒவ்வொரு நிமிடமும் வாழ்நாளில் ஒன்றரை நிமிடத்தை அதிகரிக்கிறது. தினமும் 20 முதல் 30 நிமிடம் நடந்தால், ஆண்டொன்றுக்கு சுமார் 4.5 கிலோ வரை கூடுதல் எடையைக் குறைக்க முடியும்.
'நடப்பதெல்லாம்’ நன்மைக்கே...
 இதயம் மற்றும் நுரையீரல் வலுவடையும்.
 ரத்த அழுத்தம் சீராகும்.
 மூளையின் செயல்திறன் அதிகரிக்கும்.
 மன அழுத்தம் குறையும்.
 நல்ல உறக்கம் கிடைக்கும்.
 சர்க்கரை நோய் குறைகிறது.
 கெட்ட கொழுப்புச் சத்து குறையும்.
 புற்றுநோய்க்கான சாத்தியங்கள் குறையும்.
 மூளை நாள வியாதிகள் வராமல் தடுக்கப்படும்.
ஏரோபிக் பயிற்சி
இதய நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனையின்பேரில் ஏரோபிக் எக்சர்சைஸ் எனப்படும் விரைவாக நடத்தல், சைக்கிள் சவாரி, நீச்சல், கைப்பந்து, டென்னிஸ் போன்றவற்றைச் செய்யலாம்.
  லேசான பயிற்சிகளில் ஆரம்பித்து படிப்படியாகப் பயிற்சி நேரத்தை அதிகரிக்கலாம்.
  உடற்பயிற்சி செய்யும்போது சிரமம் இல்லாமல் பேச வேண்டும். அப்படி முடியாவிட்டால், உடனடியாகப் பயிற்சியின் அளவு மற்றும் வேகத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
  இந்தப் பயிற்சிகளால் ரத்தக் குழாய்களின் உட்புறச் சுவர்களில் அடைப்பு அதிகம் ஆகாமல் தடுக்கப்படும்.
  அடைப்பு இருந்தால் அதன் அளவும் குறையும்.
  உடலில் கொழுப்பின் அளவும் குறையும். நல்ல கொழுப்பின் அளவு அதிகரிக்கும். இன்சுலின் ஏற்புத்தன்மை அதிகரிக்கும்.
  உடற்பயிற்சியின்போது நெஞ்சுவலி அல்லது தலைச்சுற்றல் ஏற்பட்டால், உடனடியாகப் பயிற்சியை நிறுத்திவிட்டு மருத்துவரைத் தொடர்புகொள்ளவும்.
சில சந்தேகங்களும், பதில்களும்
மாரடைப்புக்குப் பிறகு உடனே உடற்பயிற்சி செய்யலாமா?
மாரடைப்புக்குப் பிறகு உடற்பயிற்சியை மெதுவாகவும் சீராகவும் கூடுதலாக்கிக் கொள்ளலாம். முதல் ஒரு வார கால ஓய்வுக்குப் பிறகு தினமும் ஐந்து நிமிடங்கள் நடக்க முயற்சிக்கலாம்.
மாரடைப்பு நோயாளிகள் வாகனம் ஓட்டலாமா?
மாரடைப்பு ஏற்பட்ட ஒரு மாத காலத்துக்கு மோட்டார் சைக்கிள், கார் போன்ற வாகனங்கள் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.
விமானத்தில் செல்லலாமா?
மருத்துவர் மற்றும் விமான முகவர்களிடம் கலந்து ஆலோசிக்கவேண்டும். சில விமான நிறுவனங்கள் மாரடைப்பு ஏற்பட்ட பிறகு, மூன்று மாதங்கள் வரை நோயாளிகளை வரவேற்பதில்லை.
மாரடைப்புக்குப் பிறகு தாம்பத்திய வாழ்வில் எப்போது ஈடுபடலாம்?
குறிப்பிட்ட கால அளவு ஏதும் இல்லை. சிரமம் இன்றி உடற்பயிற்சி செய்யும் நிலை ஏற்படும் வரை (உதாரணமாக இரண்டு மாடிகளில் ஏறி இறங்குவது) தாம்பத்ய வாழ்வைத் தள்ளிப்போடுவது நல்லது.
மாரடைப்புக்குப் பிறகு எப்போது வேலைக்குத் திரும்பலாம்?
பொதுவாக நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை ஓய்வில் இருப்பது நல்லது. கடினமான வேலை செய்பவர்கள் அலுவலகப் பணி செய்பவர்களைவிட அதிக நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும்.
யோகா
ஆரோக்கியமான உடலையும் மகிழ்ச்சியான மனதையும் தருவது யோகாதான். ஆசனங்கள், மூச்சுப்பயிற்சி மற்றும் தியானம் போன்றவற்றை உள்ளடக்கிய யோகாவை முறையாகப் பயின்று பயிற்சி செய்துவந்தால் அற்புதமான நன்மைகளைப் பெறலாம்.
பலன்கள்:
  உடற்பயிற்சி இல்லாதபோது, உடலில் இதயம், நுரையீரல், கல்லீரல், கணையம் போன்ற பல பகுதிகளுக்கும் போதுமான அளவு ரத்தம் பாயாது. ஆனால் யோகா செய்யும்போது அனைத்து உறுப்புகளுக்கும் சீராக ரத்த ஓட்டம் கிடைக்கும்.
  சாதாரணமாக நாம் சுவாசிக்கும்போது, நுரையீரலின் கொள்ளளவில் ஆறில் ஒரு பங்கைத்தான் பயன்படுத்துகிறோம். யோகா பயிற்சி செய்யும்போது நுரையீரலின் பெரும்பகுதி பயன்படுத்தப்படுகிறது. இதனால், ஆக்சிஜன் அதிக அளவில் உடல் உறுப்புகளுக்குக் கிடைக்கிறது.
  இன்றைய சூழலில் டென்ஷன் எனப்படும் மன அழுத்தம் தவிர்க்க இயலாததாகிவிட்டது. ஒரு முறை கோபப்பட்டால் ஏற்படும் ரசாயன மாற்றங்களால், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி பல மணி நேரத்துக்குப் பாதிக்கப்படுகிறது. தியானத்தால் மனதை அமைதிப்படுத்த முடியும்.  மனம் மகிழ்ச்சியில் துள்ளும். மனமும் உடலும் கட்டுப்பாட்டில் இருக்கும்.
  சிரிக்கும்போது கூடுதலாகப் பிராண வாயு உள்ளே இழுக்கப்படுகிறது. கூடுதலாக கார்பன் - டை - ஆக்ஸைடு வாயு வெளியேற்றப்படுகிறது. ரத்தம் நன்கு சுத்திகரிக்கப்படுகிறது. ரத்தம் சீராக உடல் எங்கும் பாய்கிறது. சிவப்பணுக்கள் அதிகரிக்கின்றன. முக்கியமாக இதயம் வலுவடைகிறது.
இதயம் காப்போம்... இன்பம் காண்போம்!

Jun 30, 2013

கம்போடியாவில் 1,200 ஆண்டு பழமையான "மகேந்திர பர்வதம்' நகரம் கண்டுபிடிப்பு

கம்போடியாவில் 1,200 ஆண்டு பழமையான "மகேந்திர பர்வதம்' நகரம் கண்டுபிடிப்பு!

கம்போடியாவில் 1200 ஆண்டுகளுக்கு முன் இருந்த "மகேந்திர பர்வதம்' என்ற நகரத்தை சர்வதேச தொல்லியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

லண்டனைச் சேர்ந்த தொல்லியல் வளர்ச்சி அறக்கட்டளையின் இயக்குநர் ஜீன் பாப்டிஸ்ட் செவான்ஸ் தலைமையில் சர்வதேச நிபுணர்கள் குழு கம்போடியாவில் ஆய்வில் ஈடுபட்டது.

இந்தக் குழுவினர் உலகிலேயே மிகப்பெரிய ஹிந்து கோவில் வளாகம் அமைந்துள்ள கம்போடியாவின் அங்கோர்வாட்டுக்கு 40 கி.மீ. தொலைவில் உள்ள நாம் குலேன் மலைப்பகுதியில் தீவிர ஆராய்ச்சி நடத்தினர்.

எனினும், அங்குள்ள கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட அடர்ந்த காடு, வேகமாகப் பாய்ந்தோடும் காட்டாறு, சதுப்பு நிலம் போன்றவை காரணமாக முழு அளவில் கள ஆய்வுப் பணியில் ஈடுபட அவர்களால் இயலவில்லை.

இதைத் தொடர்ந்து, அந்த மலைப்பகுதி மீது ஹெலிகாப்டரில் பறந்தபடி லிடார் எனப்படும் தொழில்நுட்பம் மூலம் லேசர் கதிர்களை அப்பகுதி மீது பாய்ச்சி, தகவல் சேகரிக்கும் நூதன ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, நாம் குலேன் மலை மீது மகேந்திர பர்வதம் என்ற வரலாற்று இடைக்கால நகரம் இருந்ததைக் கண்டுபிடித்தனர்.

1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அந்த நகரத்தைச் சேர்ந்தவர்கள்தான் கி.பி. 802இல் அங்கோர் பேரரசை நிறுவியுள்ளனர். அதன் தலைநகராக மகேந்திர பர்வதம் விளங்கியதாகத் தெரிகிறது. இப்போது, ஆண்டுதோறும் உலகெங்கிலும் இருந்து 20 லட்சம் மக்கள் அங்கோர்வாட் கோவிலைப் பார்வையிடுகின்றனர்.

இந்த நகரம் குறித்த தொல்லியல் ஆய்வில் ஈடுபட்ட நிபுணர் குழுவின் தலைவர் ஜீன் பாப்டிஸ்ட் கூறுகையில், ""தொன்மையான நூல்களின்படி புகழ்பெற்ற வீரனும், மன்னனுமான இரண்டாம் ஜெயவர்மனுக்கு மலை மீது அமைந்த தலைநகர் இருந்தது தெரிய வருகிறது. அதுதான் இந்த மகேந்திர பர்வதமாகும்.

இப்போது நூதன ஆய்வின் மூலம் அந்த நகரில் சாலைகளும், கால்வாய்களும் இருந்ததைக் கண்டறிந்துள்ளோம்'' என்றார்.

இந்த நிபுணர் குழுவின் இணைத் தலைவரான சிட்னி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டேமியன் இவான்ஸ் கூறுகையில், ""இந்த நகர் குறித்த தகவல்கள் மூலம் இன்றைய சமூகத்துக்கு முக்கியமான விஷயங்கள் கிடைக்கலாம். மலை மீது அமைந்த நகரில் காடுகள் அழிப்பு மற்றும் நீர் நிர்வாகத்தை அதிகம் சார்ந்திருந்தது போன்றவற்றால் இந்த நாகரிகம் அழிந்திருக்கலாம் '' என்றார்.

இந்த நகரில், இதற்கு முன் அடையாளம் காணப்படாத 30 கோவில்களும் இருந்துள்ளது லேசர் ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வு தொடர்பான விவரங்கள் அமெரிக்க தேசிய அறிவியல் நிறுவனத்தின் பத்திரிகையில் வெளியிடப்பட உள்ளன.

அதன் பின், நாம் குலேன் காடுகளுக்குள் தொல்லியில் நிபுணர்கள் நுழைந்து கள அகழாய்வில் ஈடுபட்டு, மகேந்திர பர்வதம் நகரில் மக்களின் வாழ்க்கை, நாகரிகம் ஆகியவை குறித்து தகவல் சேகரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தெற்காசியா மீது சுமார் 600 ஆண்டுகளுக்கு ஆதிக்கம் செலுத்திய அங்கோர் பேரரசு உருவான விதம் மற்றும் அது குறித்த மேலும் பல தகவல்களும் இந்த அகழாய்வில் கிடைக்க வாய்ப்புள்ளது.

நன்றி : Dinamani.


Jun 25, 2013

இந்தியா கேதார்நாத் பகுதியில் மட்டும் 5ஆயிரம் பேர் பலி?

கேதார்நாத் பகுதியில் மட்டும் 5ஆயிரம் பேர் பலி?டேராடூன்: உத்தர்காண்ட் பெரும் வெள்ளத்தில் கேதர்நாத் பகுதியில் மட்டும் 5 ஆயிரம் பேர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கேதர்நாத் கோயில் வளாகத்தில் இருந்த ஆதி சங்கரரின் சமாதியும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. கேதார்நாத் கோயிலை ஒட்டி ஓடும் மந்தாகினி ஆற்றில் கேதார் பனிச்சிகரத்தின் பெரும் பகுதி உடைந்து விழுந்ததால் வெள்ளம் வெடித்துக் கிளம்பி எதிர்பட்டதையெல்லாம் அள்ளிச்சென்றது. இக் காட்டாற்று வெள்ளம் பல இடங்களில் திசை திரும்பியதால் சுமார் 200 கிராமங்கள் அழிந்தேபோயுள்ளன. அங்கிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கதி என்ன என்பது தெரிய வில்லை. கேதார்நாத் பகுதியில் மட்டும் 5ஆயிரம் பேர் பலி? கேதார்நாத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நூற்றுக் கணக்கான வீடுகள், வாகனங்கள் எங்கே சென்றன என்றே தெரியவில்லை. கேதர்நாத் சிவாலயத்துக்கு வருபவர்களை சுற்றிக்காட்ட 4700 சுற்றுலா வழி காட்டிகள் இருந்தனர். வாகன ஓட்டுனர்கள் 500 பேரும், பூசாரிகள் 100 பேரும் ஓட்டல் தொழிலாளர்கள் சுமார் 700 பேரும் இருந்தனர். இவர்களில் ஆயிரம் பேர்தான் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை. மேலும் கேதார்நாத் கோயில் வளாகத்தில் இருந்த ஆதி சங்கராச்சாரியாரின் சமாதியும் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இது 8-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அங்கு இருந்த சிலைகள், லிங்கம் என எதையும் வெள்ளம் விட்டு வைக்கவில்லை.

மணப்பெண் போல் மாற்றி வைக்கும் மகிழம்பூ!....இயற்கை தரும் இளமை வரம்!





கிழம்பூ... பேரைக் கேட்டாலே மனம் மலரும். மகிழ்ச்சியை மடை திறந்த வெள்ளமாகத் தருவதில் மகிழம்பூவுக்கு ஈடு இணையே இல்லை. வாடிப் போனாலும், வற்றாத வாசனையை வாரி வழங்கும் வள்ளலான மகிழம்பூவை தலையில் சூடும் போது கிடைக்கும் அழகைவிட, மூலிகையாக பயன்படுத்தினால் கிடைக்கும் அழகு... அளவில்லாதது. இளம்பெண்களின் சருமப் பிரச்னைகளை சடுதியில் போக்கிடும் அற்புத வித்தையும் இந்த மலரிடம் ஒளிந்து கிடக்கிறது. அதிலிருந்து சிலவற்றை நாம் அள்ளிக் கொள்வோமா...?
ஒரு கப் ஃப்ரெஷ் மகிழம்பூவுடன், அரை கப் குளிர்ந்த ரோஸ் வாட்டரை (ரோஜா பூக்களைத் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி ஆற வைத்தும் சேர்க்கலாம்) சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை முகத்தில் 'பேக்' போடுங்கள். பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள். வாரம் இருமுறை இப்படிச் செய்து வந்தால் முகம் மிருதுவாகி, பளபளக்கும்.

மகிழம்பூ பவுடர் (பூக்களை காய வைத்து அரைத்தது) - ஒரு டீஸ்பூன், பால் பவுடர் ஒரு டீஸ்பூன் இரண்டையும் சுடு தண்ணீரில் கலந்து பேஸ்ட் ஆக்குங்கள். அதை முகத்தில் போட்டு அரை மணி நேரம் கழித்து கழுவுங்கள். வாரம் ஒரு முறை இதுபோல் செய்து வர, அன்று பூத்த மலராக முகம் பளீரென்று இருக்கும்.
மணப்பெண்ணுக்கு ஏற்ற அழகு சிகிச்சைகள்...
உடல்: 100 மி.லி. தேங்காய் எண்ணெயில் 50 கிராம் ஃப்ரெஷ் மகிழம்பூவை ஒரு நாள் ஊற வைக்க வேண்டும். பிறகு, நான்கு நாட்கள் வெயிலில் வைத்து எடுத்து வடிகட்டுங்கள். இந்தத் தைலத்தை உடல் முழுவதும் தேய்த்து ஊற வைத்து குளியுங்கள். அரோமா தெரபி செய்து கொண்டதுபோல் உடல் குளிர்ச்சியுடன் இருக்கும். வாசனையோடு கூடிய பளபளப்பு கிடைக்கும். ஃப்ரெஷ்ஷாக உணர வைக்கும்.
தலை: கால் கிலோ நல்லெண்ணெயுடன் 50 கிராம் ஃப்ரெஷ் மகிழம்பூவை சேர்த்துக் காய்ச்சி இறக்குங்கள். இதனுடன், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகியவற்றை தலா 25 கிராம் கலந்து கொள்ளுங்கள். இந்தத் தைலத்தை வாரம் ஒரு தடவை தலைக்குத் தேய்த்து ஊற வைத்துக் குளியுங்கள். கண்டிஷனர் போட்டதுபோல் கூந்தல் மென்மையாகவும் வாசனையாகவும் இருக்கும்.
ஒரு கப் ஃப்ரெஷ் மகிழம்பூவை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆற வைத்துக் கொள்ளுங்கள். மேலே உடல் மற்றும் தலைக்கு குறிப்பிட்டுள்ள தைலங்களை தேய்த்துக் குளித்தபிறகு, மகிழம்பூ போட்டு கொதிக்க வைத்த தண்ணீரில் உடல் மற்றும் தலையை அலசுங்கள். புத்துணர்ச்சியும் மகிழ்ச்சியும் குடிகொள்வதோடு அற்புதமான அழகும் சேர்ந்துகொள்ளும்.
தோல்: ஃப்ரெஷ் மகிழம்பூவை ஊற வைத்து அரைத்த விழுதுடன், அதே அளவு பயத்தம்பருப்பு மாவைக் கலந்து தினமும் உடம்பில் தேய்த்துக் குளியுங்கள். திட்டுக்கள், கருமை, வியர்வை நாற்றம் அத்தனையும் காணாமல் போய் தோல் பளபளவென மின்னும்.
உலர்ந்த மகிழம்பூ, மரிக்கொழுந்து, பூலான்கிழங்கு, கடலைப்பருப்பு ஆகியவற்றை தலா 100 கிராம் கலந்து மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போதெல்லாம் இந்தப் பவுடரை உச்சி முதல் உள்ளங்கால் வரை தேய்த்துக் குளியுங்கள். மாசு, மரு இல்லாத வாசனையுடன் கூடிய அழகு ஜொலிக்கும்.
தோலில் வறட்சி தலையில் செதில் போன்ற தொல்லைகள் வராமல் தடுக்கவும் மகிழம்பூ உதவுகிறது.
100 கிராம் வெந்தயத்தூளுடன், மகிழம்பூ பவுடர்(பூக்களை காய வைத்து அரைத்தது), புங்கங்காய்தூள், கடலை மாவு இவை தலா 50 கிராம் சேர்த்து கலப்பு பவுடர் தயாரித்துக் கொள்ளுங்கள். தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது இந்தப் பவுடரில் சிறிது எடுத்து உச்சி முதல் பாதம் வரை தேய்த்து அலசுங்கள். செதில் பொடுகு, தொல்லை நீங்கி கூந்தல் நல்ல கண்டிஷனில் இருக்கும். தோலும் பளபளக்கும். வறண்ட சருமம் உள்ளவர்கள் கடலை மாவுக்குப் பதிலாக பயத்தம்பருப்பு மாவைக் கலந்து கொள்ளலாம்.
மேலே சொல்லப்பட்டுள்ள கலப்பு பவுடருடன், வெள்ளரி விதை பவுடர், கஸ்தூரி மஞ்சள்தூள் இரண்டும் தலா 50 கிராம் கலந்து குளித்தால் சருமம் நல்ல நிறத்தோடு மின்னும்.
மனக்கலக்கத்தை போக்கும் மகிழம்பூ!
டாக்டர் ஜீவா சேகர், நேச்சுரோபதி மருத்துவர், சென்னை:
மகிழம்பூவைத் தலையில் சூடிக் கொள்வதால் உடல் சூடு தணிந்து மனம் மகிழ்ச்சியில் துள்ளும்.
இந்தப் பூவை தினமும் முகர்வதால் ஒற்றைத் தலைவலி சரியாகும்.
வேலைப் பளு, குடும்பப் பிரச்னைகளால் மன நிம்மதியில்லாமல் தவிப்பவர்களின் மூளை எப்போதும் எதையாவது சிந்தித்துக் கொண்டேயிருக்கும். அப்படிப்பட்டவர்கள்,

தோல் நோயை விரட்ட குப்பைமேனி குளியல்!....நாட்டு வைத்தியம்




ந்த... அரிப்பு, படை, அலர்ஜினு வியாதிங்க வந்துட்டா... உடம்புல அங்கங்க தடிச்சிப் போய், பாக்கறதுக்கு கொடுமையா இருக்கும். அதனால வர்ற அவஸ்தை அதை விட கொடுமையா இருக்கும். இதையெல்லாம் விரட்டியடிக் கறதுக்கு நாட்டுப்புறத்துல ஏகப்பட்ட சங்கதி இருக்கு. அதுல ஒண்ண எடுத்துவிடறேன்... எழுதிக்கோங்க!
தவசுமுருங்கை இலையை (பல பேரு இது என்ன செடினு தெரியாமலே வீட்டுல வளர்த்துக்கிட்டிருக்காங்க) ஒரு கைப்பிடி எடுத்து இடிங்க. அதுல கிடைக்கற சாறை குடிச்சா... அரிப்பு, படை எல்லாம் குணமாயிரும்.
மேலே சொன்ன மருந்தை சாப்பிடுற காலத்துல புளி இல்லாத பத்தியம் இருக்கணும்கிறது முக்கியம். அதை மறந்துட்டு, புளிக்குழம்பு, புளிசாதம்னு மூக்குப்பிடிக்க வெட்டிப்புட்டு, நோய் குணமாகலையேனு இந்த பாட்டியைத் திட்டித் தீர்க்கக் கூடாது.
பொதுவா, தோல் வியாதிங்க வந்துட்டாலே மனுஷன ஆட்டிப் படைச்சிடும். நாலு இடத்துக்கு பந்தாவா போய் வரக்கூட முடியாத அளவுக்கு கை, கால், முகம்னு வெளியில தெரியற இடத்துலயெல்லாம்கூட பட்டை பட்டையா... சொறி சொறியா... முளைச்சு உயிரை எடுக்கும். இதையெல் லாம் குணப்படுத்தவும் கைவசம் வைத்தியம் இருக்கு.
அருகம்புல் ஒரு கைப்பிடி, மஞ்சள் கிழங்கு ஒரு இணுக்கு எடுத்து மையா அரைக்கணும். அதை தோல் வியாதி இருக்குற இடத்துல பூசி, அரை மணி நேரம் கழிச்சு குளிக்கணும். வாரத்துல மூணு நாள், நாலு நாள்னு நம்ம வசதிக்கு ஏத்தாப்புல இப்படி குளிச்சுட்டு வந்தா... நல்ல குணம் தெரியும்.

இதயம் காக்க 25 வழிகள்

!





''நேத்துதான் நல்லாப் பேசிட்டு இருந்தார்... அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சே...'' - நெருக்கமான நண்பர்கள் இப்படி வருத்தப்படுவதும், ''ஏற்கெனவே ரெண்டு அட்டாக் வந்திருக்கு. அதைக் கவனிக்காம விட்டிருக்கார். அதான், இப்படியாகிடிச்சு!'' என உறவுக்காரர்கள் விளக்கம் சொல்வதையும் பல இடங்களில் காதுபடக் கேட்டு இருக்கிறோம். திடீர் மரணங்களுக்கு மிக முக்கியக் காரணமாக இருப்பது மாரடைப்புதான். நமது நாட்டில் 25 முதல் 69 வயதினருக்கு இடையே ஏற்படும் மரணங்களில் 25 சதவிகிதம் மாரடைப்பால்தான் நிகழ்கின்றன. இதய நோய் வராமல் தடுக்கவும், வந்துவிட்ட நோயில் இருந்து நம்மை நாமே மீட்டெடுக்கவும் பிரான்டியர் லைஃப்லைன் மருத்துவமனையின் தலைவரும் கார்டியோ தொராசிக் நிபுணருமான டாக்டர் கே.எம்.செரியன் சொல்லும் வழிகள் இதோ...
 மாரடைப்புக்கான காரணம்
உடல் முழுவதும் ரத்தம் பாய்ச்சும் அதிமுக்கிய வேலையைச் செய்வது நம் இதயம். 'லப் டப்’ தாள லயத்தோடு இதயம் துடித்து இயங்குவதால்தான், ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் திசுக்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இப்படி உடல் முழுக்க ரத்தத்தை பம்ப் செய்யும் இதயம் இயங்கவும் ரத்தம் தேவை. இதயத்துக்குத் தேவையான இந்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்களில் அடைப்பு ஏற்படும்போதுதான், மாரடைப்பு ஏற்படுகிறது. ரத்தக் குழாயில் கொழுப்புப் படிவதாலோ அல்லது ரத்தம் உறைந்துபோவதாலோ அடைப்பு ஏற்படலாம். இதனால், இதயத்துக்கு செல்லும் ஆக்சிஜன் நிரம்பிய ரத்த ஓட்டம் தடைப்பட்டு, இதயத் தசைகள் செயல் இழக்கும். இதைத்தான் மாரடைப்பு என்கிறோம்.
மாரடைப்பைத் தவிர்க்க முடியும்!
1உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ரத்தத்தில் கொழுப்பு, புகை பிடித்தல், உணவில் அதிகக் கொழுப்பு, உடல் உழைப்புக் குறைவு, மன அழுத்தம், மரபுரீதியாகக் குடும்பத்தில் யாருக்காவது மாரடைப்பு ஏற்பட்டிருத்தல்.... என கொரனரி (இதய ரத்தக் குழாய் அடைப்பால் ஏற்படும்) மாரடைப்பு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. உங்கள் மருத்துவரை அணுகி உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் சர்க்கரை - கொழுப்பு அளவினைத் தொடர்ந்து பரிசோதனை செய்து, தேவைக்கு ஏற்ப மருத்துவச் சிகிச்சை பெற்றாலே, மாரடைப்பைத் தவிர்க்கலாம்.
2குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒரு முறையாவது ரத்த அழுத்தத்தைப் பரிசோதனை

Jun 22, 2013

அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலை தயாரித்து அமெரிக்க இளைஞர் சாதனை: வீடியோ இணைப்பு


அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலை தயாரித்து அமெரிக்க இளைஞர் சாதனை: வீடியோ இணைப்பு

அமெரிக்காவில் நியூஜெர்சி நகரில் வசிக்கும் 18 வயதே நிரம்பிய ஜஸ்டின் பிக்மேன் என்ற இளைஞர் தனது ஆற்றலை பயன்படுத்தி சிறிய நீர்மூழ்கி கப்பல் ஒன்றை உருவாக்கி இருக்கிறார்.
இந்த கப்பலில் ஒருவர் மாத்திரமே பயணம் செய்யலாம்.

9 அடி நீளம் கொண்ட இந்த நீர்மூழ்கி கப்பல் தண்ணீருக்குள் 30 ஆழத்தில் பயணிக்கும் விதமாக வடிவமைத்துள்ளார்.

அதில் வயர்லெஸ், ரேடியோ தொடர்பு சாதனங்கள், சுவாசிக்க வசதி போன்றவை உண்டு. இந்த கப்பலை அங்குள்ள ஏரியில் விரைவில் வெள்ளோட்டம் விட திட்டமிட்டுள்ளார்.

ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் செலவில் 6 மாத இடைவிடாத முயற்சியில் இதை உருவாக்கியதாக ஜஸ்டின் தெரிவிக்கிறார்.

சிங்கப்பூர் மாசு மண்டலம் 3-வது நாளாக 'அளவு கடந்து' செல்கிறது

சிங்கப்பூர் மாசு மண்டலம் 3-வது நாளாக 'அளவு கடந்து' செல்கிறது


மக்களை வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது
முடியுமானவரை மக்களை வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது

சிங்கப்பூரைச் சூழ்ந்துள்ள மாசு மண்டலம் வயோதிபர்களுக்கும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் தீங்கு ஏற்படுத்தும் அளவுக்கு காற்றினை மாசுபடுத்தியுள்ளது.
மாசு மண்டலத்தின் அளவு இன்று வெள்ளிக்கிழமை நண்பகலின்போது 401-PSI ஐ தாண்டியிருந்தது.

300 PSI-ஐ தாண்டிவிட்டால் அது ஆபத்தான அளவைத் தாண்டிவிட்டதாக கருதப்படும்.
தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக இந்த அளவு அதிகரித்துக்கொண்டே போகிறது.
இந்தோனேசியாவில் சட்டவிரோதமாக காடுகள் எரிக்கப்படுவதால் இந்த மாசு மண்டலம் உருவாகியுள்ளதாக சிங்கப்பூர் குற்றஞ்சாட்டிவருகிறது.
முடியுமானவரை மக்களை வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருக்குமாறும் சிங்கப்பூர் அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்தப் பிரச்சனை சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியா இடையே கடுமையான அரசியல் முறுகல்நிலையை தீவிரப்படுத்தியுள்ளது.
தமது காற்று மண்டலம் மாசடைவதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று சிங்கப்பூர் இந்தோனேசியாவிடம் கேட்டுள்ளது.
இதேவேளை, மலேசியாவிலும் நிலைமை மோசமடைந்துவருகிறது.
அங்கும் ஆபத்தான அளவுக்கு காற்று மாசடைந்துவிட்டதால் சுமார் 300 பள்ளிக்கூடங்களுக்கு அதிகாரிகள் விடுமுறை அளித்துள்ளனர்.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...