Aug 7, 2012

மருத்துவ குணம் நிறைந்த கிராம்பு


சமையலில் பயன்படுத்தப்படும்  வாசனைப் பொருட்களில் ஒன்றான கிராம்பு மருத்துவப் பொருளாகவும் பயன்படுகிறது.. இதில் யூனினால், பைனின், வேனிலின், போன்ற ஆவியாகும் எண்ணெய்ப் பொருட்களும், பிசின் மற்றும் டேனின்கள் உள்ளன.
இது பலதரப்பட்ட நோய்களை குணப்படுத்த உதவுகிறது. கிராம்புக்கு பாக்டீரியா எதிர்ப்பு சக்தி உள்ளது என்று ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதிலுள்ள அசிடைல் யூஜினால் தசைப்பிடிப்பு வலியினை போக்கும் திறன் படைத்தது. கிராம்பின் மொட்டு, இலை,தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.

செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்

கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன.

பல்வலி போக்கும்

உடல் மற்றும் உள்ளத்தினை ஊக்குவிக்க கிராம்பு பயன்படுத்தப்படுகிறது. நினைவாற்றலை மேம்படுத்தும், மகப்போறு காலத்தில் கருப்பையின் வலிமைக்கும் சுருங்கி விரிவதற்கும் உதவுகிறது. பல்வலி, மற்றும் சொத்தைப்பற்களின் பூச்சிகளை அழிக்க பயன்படுகிறது. கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும்.. கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.

உடல்வலி நீங்கும்

ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன. அஜீரணம், வாயுத்தொல்லை, வாந்தி, இருமல், அடிவயிற்று வலி, தொண்டைகம்மல், மூக்கு ஒழுகல், தலைவலி ஆகியவற்றில் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.. கிராம்பு எண்ணெய் மேல் பூச்சாக அடி, இடுப்பு வலி, மூட்டுவலி, மற்றும் தொடை,நரம்பு வலி ஆகியவற்றிர்க்கு நல்ல பலன் தருகிறது. தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண்ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.

தொண்டை எரிச்சல் நீங்கும்

உடலைப் பருமடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும், சூட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது.  சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சேர்த்து சாப்பிட தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.

ஆஸ்துமா கட்டுப்படும்

கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும். முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.

சமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிக்கவும் கிராம்பு முக்கியம். வாசனைத் தயாரிப்பு, சோப்புத் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...