Dec 6, 2012


இந்த மாதம் டிசம்பர் மாதம் 21ம் திகதி மாயன் நாட்காட்டி முடிவிற்கு வருகிறது உலகம் அழியப்போகிறது என ஆரம்பித்து பல பல புனைகதைகளிற்கு கை, கால் வைத்து மக்களிடைய பீதியை ஏற்படுத்தும் முயற்சி அமெரிக்காவை உத்தியோகபூர்வமாக அறிக்கை விட வைக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளது.

பொதுவில் வதந்திகளுக்குப் பதில் கூறுவதில் அர்த்தமே இல்லை.  ஒரு வகையில் அது அந்த வதந்தியை மேலும் பரப்புவதாகவே அமையும்.

அடுத்த மாதம் 23 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை பூமி இருளில் மூழ்கிவிடுமாம். அது தான் அந்த வதந்தி. நாசா இது பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் அந்த வதந்தி கூறுகிறது.


இது உண்மையா? அறிந்த வரையில் நாசா அப்படி எந்த எச்சரிக்கையையும்

விடவில்லை. உலகில் உள்ள அனைத்து மின்சார நிலையங்களும் மின் உற்பத்தி செய்யாமல் பாதிக்கப்படும் என்ற அர்த்தம் என்றால் அது சாத்தியமில்லை. அனைத்து மின் நிலையங்களும் ஒரே சமயத்தில் செயலற்றுப் போக வாய்ப்பில்லை.

அல்லது மூன்று நாள் சூரியனே தலை காட்டாது. மூன்று நாளும் ஒரே இருளாக இருக்கும் என்றால் அதற்கும் சாத்தியமில்லை.சூரியன் தனது இடத்திலிருந்து எங்கோ மூன்று நாள் லீவில் போய்விட்டுத் திரும்ப வாய்ப்பில்லை. பூமி  தனது அச்சில் சுழல்வதால் தான் இரவும் பகலும் ஏற்படுகின்றன. பூமி தனது அச்சில் சுழலாமல் நிலை குத்தி நிற்பதாக ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும் பூமியின் ஒரு பாதியில் மூன்று நாள் தொடர்ந்து இரவாக இருக்கும். மறு பாதியில் மூன்று நாள் தொடர்ந்து பகலாக இருக்கும். ஆகவே பூமி முழுவதிலும் மூன்று நாள் இரவாக இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. இது பகுத்தறிவுக்கு முரணானது.


சூரியன் மற்றும் பூமியின் alignment  பற்றிய சமாச்சாரமும் அபத்தமாகவே உள்ளது. பூமியின் Dimension  மாற்றம் வெறும் உளறல். நாசா இப்படி கூறியது அப்படிக் கூறியது என்று வதந்தி கிளம்புவது இது முதல் தடவை அல்ல.


Pray  செய்பவர்கள் தப்பித்துக் கொள்வார்கள் என்றால் நியூயோர்க் நகரை சான்டி புயல் தாக்கிய போது அவரவர் தங்கள் இடத்திலிருந்து பிரார்த்தனை செய்திருந்தால் தப்பித்திருக்கலாமே. நமது உலகம், சூரிய மண்டலம், அண்டம், பிரபஞ்சம் ஆகியவை ஓர் ஒழுங்கு உட்பட்டவை. விபரீத மாறுதல்களுக்கு இடமே இல்லை. சந்திரனை விடப் பலப் பல மடங்கு பெரியதான ஒன்று (பெரிய கிரகம் என்ற வைத்துக்கொள்ளுங்களேன்)  சூரியனுக்கும் பூமிக்கும் குறுக்கே வந்து நிற்குமானால் பூமிக்கு சூரிய ஒளியே கிடைக்காமல் பூமி முற்றிலும் இருளில் மூழ்கலாம்.


அப்படி பிரமாண்டமான ஒன்று குறுக்கே நிற்பதானால் அது  விண்வெளியில் எங்கிருந்தாவது வந்தாக வேண்டும். பூமியை நோக்கி அப்படி எதுவும் வருவதாக இதுவரை கண்டறியப்படவில்லை. அப்படி ஒன்று வருவதாக ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டால் இத்தனை நேரம் விஞ்ஞானிகள் அதைக் கண்டுபிடித்திருப்பார்கள். அப்படி ஒன்று வருவதாக வைத்துக் கொண்டால்  காரை பிரேக் போட்டு நிறுத்துவது போல அது திடீர் என்று பிரேக் போட்டு நிற்க வாய்ப்பே இல்லை. பூமி அல்லது சந்திரன் பிரேக் போட்டு நிற்காது. ஆகவே எதுவும் சூரியனுக்கும் பூமிக்கும் குறுக்கே வந்து மூன்று நாள் முகாம் போட முடியாது.


சரி, அது பிரேக் போட்டு நிற்பதாகவே வைத்துக் கொள்வோம். மறுபடி அதை எந்த சக்தி அங்கிருந்து விலகும்? மூன்று நாட்கள் கழித்து அது தானாக எப்படி விலகும்?  இது நியூட்டன் வகுத்த விதிகளை மீறுவதாக இருக்கும்.


ஒருவேளை பூமியை விட பிரும்மாண்டமான ஒன்று சூரியனுக்கும் பூமிக்கும் குறுக்கே வந்து நின்று பூமிக்கு சூரிய ஒளி கிடைக்காமல் தடுக்கும் என்றால் அது சில நிமிஷ நேரமே (சூரிய கிரகணத்தின் போது நிகழ்வது போல்)  அவ்விதம் தடுக்க முடியும். ஏனெனில் அதுவும் பூமியைப் போல சூரியனை சுற்றியாக வேண்டும். அப்படியானால் சூரியனைச் சுற்றி வருவதில்  அதன் வேகமும் பூமியின் வேகமும் வித்தியாசப்படும். அந்த பிரமாண்டமான ஒன்றினால் தொடர்ந்து மூன்று நாட்கள் அல்லது பல நாட்கள் பூமிக்கு சூரிய ஒளி கிடைக்காமல் தடுக்க முடியாது. அப்படி நிகழ்வதானால் அது கெப்ளர் வகுத்த விதிகளை மீறிவதாக இருக்கும்.


ஆகவே வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். டிசம்பர் 23, 24 , 25 தேதிகள் வழக்கம் போலத் தான் இருக்கும் அமைதியாய் இருங்கள்… உலகில் எந்த மாற்றமுமே டிசம்பர் மாதம் 21ம் திகதி நடைபெறப்போவதில்லை. மாயன் நாட்காட்டியில் கூட ஒரு ஆண்டுக்கான சுற்று டிசம்பர் 21ம் திகதி முடிந்து புதிய ஆண்டு டிசம்பர் 22ம் திகதி தொடங்குகிறதே தவிர அந்த நாட்காட்டியின் ஊழிக்காலம் முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான வதந்திகளை கடந்த காலங்களிலும் பல வேறு விதமாக வந்திருக்கின்றன. உலகம் அழியப்போகிறது என்ற வதந்தி 2003ம் ஆண்டு, 2004ம் ஆண்டில் கூட வந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


எந்த ஒரு அழிவோ மாற்றமோ டிசம்பர் 21ம் திகதி இடம்பெறப்போவதில்லை. அது மற்றைய நாட்களைப் போல சாதாரண நாட்களே எனத் தெரிவித்துள்ளது. கிரகங்கள் பூமியை நோக்கி வருகின்றன. எரிகற்கள் விழப்போகின்றன என்பதெல்லாம் கட்டுக்கதை.


எங்களிலும் பலர் இந்தக் கதைகளை நம்பி, இனி எதற்குப் பணம் பொருள் என்று கடணட்டையிலும், வங்கிக்கடனிலிமிருந்து பணம்; பெற்று வீணாய் செலவழித்தால் டிசம்பர் 22ம் திகதியிலிருந்து அவற்றைக் திருப்பிச் செலுத்துவதற்குரிய வழியையும் தயார் படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால் டிசம்பர் 21ம் திகதியில் உலகில் ஒன்றுமே மாறப்போவதில்லை.


No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...