Nov 16, 2013

கேடு விளைவிக்கும் சுய மருத்துவம்!


''டம்பு அனலாக் கொதிக்குது... தொண்டையில எச்சில்கூட விழுங்க முடியலை. அதுக்கு ஏதாவது மாத்திரை கொடுங்க'' - இன்று மருந்துக்கடையில் சர்வசாதாரணமாகக் கேட்கக்கூடிய வார்த்தைகள் இவை. டாக்டரைப் பார்க்க டோக்கன் வாங்கி, மணிக்கணக்கில் காத்திருக்கவேண்டும். கன்சல்டேஷன் ஃபீஸ் என்ற பெயரில் நூறோ, இருநூறோ மருத்துவருக்கு அழ வேண்டும். அவர் நான்கு - ஐந்து நாட்களுக்கு எழுதித் தரும் மருந்தை, மொத்தமாக வாங்கவேண்டும் என்பதால், பலரும் மருத்துவரை அணுகுவதற்குப் பதில் நேராகப் போய் நிற்கும் இடம் மருந்துக் கடை. நன்கு படித்தவர்களோ, இன்டர்நெட்டில் இந்த
அறிகுறிகள் இருந்தால் என்ன பிரச்னை, அதற்கு என்ன மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று 'கூகுள் சர்ச்’ செய்துவிட்டு, மருந்து வாங்கிச் சாப்பிடுகின்றனர். இப்படி, மருந்துக்கடையில் டாக்டர் பரிந்துரை இன்றி, சுயமாக மருந்து வாங்குதல் (over the counter) அதிகரித்துவிட்டது. இந்தச் சுய மருத்துவத்தின் பாதிப்புகள் பற்றி, புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பொது மருத்துவப் பேராசிரியர் பாலமுருகேசன் விரிவாகப் பேசுகிறார்.
'மக்கள் அதிக அளவில் மருந்துக்கடைகளில் வாங்குவது வலி நிவாரணிகள்தான். இபுப்ரூஃபென் (ibuprofen), கீட்டோப்ரூஃபென் (ketoprofen), நேப்ராக்ஸன் (naproxen) போன்ற வலி நிவாரணிகளை மருத்துவரின் அறிவுறுத்தல் இல்லாமல் தொடர்ந்து உபயோகப்படுத்தும்போது அல்சர், இதயப் பிரச்னை, சிறுநீரகச் செயலிழப்பு போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். ஜலதோஷம் பெரும்பாலும் வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது. எந்தவித மருந்தும் இல்லாமல் ஏழே நாட்களில் தானாகவே சரியாகிவிடும். எனினும், ஜலதோஷம் வந்தால் உடனே குணமாக வேண்டும் என்று மருந்துக்கடைக்குச் சென்று, வலி நிவாரணி, ஆன்டிஹிஸ்டமின், ஆன்டிபயாடிக்ஸ் என்று மருந்துகளின் ஒரு சேர்க்கையை வாங்குகிறோம். இதற்கு ஆன்டிபயாடிக்ஸ் மருந்துகளே தேவை இல்லை. இதைப்போல் ஆன்டிபயாடிக்ஸைத் தவறாகப் பயன்படுத்தும்போதுதான், 'ஆன்டிபயாடிக்ஸ் ரெசிஸ்டென்ஸ்’ உருவாகி மருத்துவ உலகுக்குப் பெரும் பிரச்னையாக விளங்குகிறது.
நோய்க்கு அளிக்கப்படும் மருந்தை எதிர்க்கும் தன்மையைக் கிருமி பெறுவதற்கு, 'ஆன்டிபயாடிக்ஸ் ரெசிஸ்டென்ஸ்’ என்கிறோம்.
நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் மருந்துக்கடைக்காரரின் கவனக்குறைவுதான் ஆன்டிபயாடிக்ஸ் ரெசிஸ்டென்ஸ் உருவாக முக்கியக் காரணம்.
மருந்தின் செயல்பாடு என்பது அளவு, வயது, ஒருவரது எடை, கிருமியின் எண்ணிக்கையைப் பொறுத்து மாறுபடும். எனவே, ஒருவருக்கு எவ்வளவு மாத்திரை கொடுக்க வேண்டும் எத்தனை நாட்களுக்கு அதை எடுத்துக்கொள்ள, பரிந்துரைக்க வேண்டும் என்பது டாக்டருக்கு மட்டுமே தெரியும்.
ஒரு நோய்க்கு ஐந்து நாட்களுக்கு மாத்திரை எடுத்துக்கொள்ளும்படி டாக்டர் பரிந்துரைக்கும்போது, நோயாளி, இரண்டு நாட்களில் நோயில் இருந்து பூரண குணம் அடைந்ததும் மாத்திரை போடுவதை நிறுத்திவிடுவார். நோய்க் கிருமி முற்றிலுமாக ஒழிய ஐந்து நாட்கள் மாத்திரை எடுத்திருக்க வேண்டும். இரண்டு நாட்களில் நிறுத்தியதால் கிருமி அழியாமல், அந்த மருந்து எதிராகச் செயல்படும் தன்மையை அடைந்துவிடும். பிறகு, மீண்டும் நோயை ஏற்படுத்தும்போது, அந்த மாத்திரை பலன் அளிக்காது. 'ஸ்டீராய்ட்’ என்பது, இருமுனைக் கத்தி போன்றது. 'ருமட்டாய்ட் ஆர்த்ரைட்டிஸ்’, 'இடியோபதிக் த்ராம்போசைட்டோபீனிக் பர்புரா’ போன்ற பல்வேறு நோய்களுக்கு உயிர்காக்கும் மருந்தாக, 'ஸ்டீராய்ட்’ பயன்படுகிறது. ஆனால், அதைச் சரியாக உபயோகப்படுத்தாவிட்டால், சர்க்கரை நோய், கண்புரை போன்ற பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும். பல மருந்துக் கடைகளில் ப்ரிஸ்க்ரிப்ஷன் இல்லாமலேயே இவை தாராளமாகக் கிடைக்கின்றன' என்றவர், இதைத் தடுக்கும் முறைகளை விளக்கினார்.
எந்த ஓர் உடல்நலப் பிரச்னைக்கும் சுய மருத்துவம் எடுத்துக்கொள்ளக் கூடாது.
மருத்துவர் ஆன்டிபயாடிக்ஸை, குறிப்பிட்ட கால அளவுக்கு எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தினால், அறிகுறிகள் சரியானதும் நிறுத்தாமல் முழுமையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
தலைவலி, காய்ச்சல், ஜலதோஷம் போன்றவற்றுக்கு டாக்டர் பரிந்துரைத்த மாத்திரை மருந்துகளை, மீண்டும் காய்ச்சல் வந்ததும் நாமாக வாங்கிச் சாப்பிடுவது கூடாது.
தலைவலி போன்ற பிரச்னைகள் தொடர்ந்து நீடித்தால், மருத்துவரை அணுக வேண்டும்.
பி.ஃபார்ம் படிக்காமல் மருந்துக்கடையில் பணிபுரிபவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அலோபதி மருந்துகள் பற்றியும் அதன் பின்விளைவுகள் பற்றியும் அலோபதி மருத்துவர் மட்டுமே அறிவார். அலோபதி மருந்துகளை ஹோமியோபதி மற்றும் சித்த மருத்துவர்கள் பரிந்துரைப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...