Apr 23, 2012

துத்தி

மருத்துவக் குணங்கள்:

    துத்தி கீரை வகையைச் சேர்ந்தது. ஆனால் இதனைப் பெரும்பாலும் எவரும் சமையலுக்குப் பயன்படுத்துவதில்லை. மற்ற கீரைகளைப் போலவே பொரியல் சமையல்செய்து சாப்பிடலாம். இது உடல் நலத்திற்கு பாதுகாப்பானது. இதய வடிவ இலைகளையும் அரச இலை போன்று ஓரங்களில் அரிவாள் போன்று இருக்கும். மஞ்சள் நிற சிறு பூக்களையும் தோடு வடிவக் காய்களையும் உடைய செடி. இலையில்
மென்மையான சுவையுண்டு. உடலில் பட்டால் சற்றே அரிக்கும். தமிழகத்திலுள்ள எல்லா மாவட்டங்களிலும், உஷ்ண பிரதேசங்களில் தானே வளர்கிறது. நான்கையிந்தடி உயரம் வரை வளரும். விதை மூலம் இனப்பெருக்கம்அடைகின்றது.
    துத்தி உடலிலுள்ள புண்களை ஆற்றி, மலத்தை இளக்கி உடலைத் தேற்றுகிறது.
    துத்தி இலையைக் கொண்டு வந்து மண்பாண்டத்தில் போட்டு விளக்கெண்ணெய் ஊற்றி நன்றாக வதக்கி கை பொருக்கும் சூட்டில் வாழை இலை அல்லது பெரிய வெற்றிலையில் வைத்துக் கட்டிக்கொள்ள வேண்டும். இது போன்று தினசரி இரவு படுக்கைக்கு முன்னர் செய்து வந்தால் மூலவீக்கம், வலி, குத்தல், எரிச்சல் ரத்த மூலம், கீழ்மூலம் ஆகியவை நீங்கி நலம் உண்டாகும்.
    துத்தி இலை வேர் முதலியவற்றை முறைப்படி குடிநீரிட்டு பல் ஈறுகளிலிருந்து ரத்தம் வருபவர்கள் வாய் கொப்பளித்து வர ரத்தம் வடிவது நிற்கும்.
    உடலில் ஏற்படும் வலிகளுக்கு துத்தி இலையை கொதிக்கும் நீரில் போட்டு வேக வைத்து அந்நீரில் துணியை முக்கி ஒற்றடமிட்டு வந்தால் வலி குணமாகும்.
    கழிச்சல் இருப்பவர்கள் துத்தி இலையின் சாறு இருபத்தினான்கு கிராம் நெய் பன்னிரண்டு கிராம் கலந்து உட்கொண்டு வந்தால் குணமாகும்.
    ஆசன வாய்க் கடுப்பு, சூடு முதலியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் துத்தி இலைக் குடிநீருடன் பாலும் சர்க்கரையும் கலந்து உட்கொண்டு வர நலம் தரும். மலத்தை இளக்கும்.
    துத்தி இலையை பருப்புடன் சேர்த்து உண்டு வந்தால் மூலச்சூடு நீங்கும்.
    எளிதில் பழுக்காத கட்டிகளின் மீது துத்தி இலையை இடித்துப் பிழிந்த சாற்றை அரிசி மாவுடன் கலந்து களியாகக்கிண்டி கட்டிகளின் மீது பூசி, கட்டி வந்தால் அவை  எளிதில் பழுத்து உடையும்.
    இரத்த வாந்தியால் துன்பப்படுபவர்கள் துத்திப் பூவை நன்கு உலர வைத்து சூரணம் செய்து தேவையான அளவு பாலும் கற்கண்டும் சேர்த்து அருந்தி வந்தால் ரத்த வாந்தி நின்று உடல் குளிர்ச்சியாகும். ஆண்மையையும் இது பெருக்கும்.
    துத்திப் பூவை உலர்த்தி பொடி செய்து சம அளவு சர்க்கரை கலந்து பசும் பாலுடன் அருந்தி வந்தால் நுரையீரல் கபம், இருமல், இரைப்பு, காசநோய் இரத்த வாந்தி, முதலியவை குணமாகும்.
    துத்தி விதைகளைப் பொடித்து சர்கரையுடன் கலந்து இருநூற்று ஐம்பது மி.கி. முதல் ஐநூறுமி.கி. அளவு உண்டு வந்தால் சரும நோய்கள் உடல் சூடு, தொழுநோய், கருமேகம், வெண்மேகம், மேகஅனல் முதலியவை கட்டுப்படும்.
    வெள்ளைபடுதல் நோய், மூலம் உடையவர்கள் இதன் விதையைக் குடிநீர் செய்து முப்பது முதல் அறுபது மி.லி. அருந்தி வரலாம்.
    துத்தி வேர் முப்பத்தயிந்து கிராம் திராட்சைப் பழம் பதினேழு கிராம் நீர் எழுநூறு மி.லி சேர்த்து நன்கு காய்ச்சி நூற்று எழுபது மி.லி ஆக வற்ற வைத்து வடிகட்டி காலை மாலை இரு வேளையும் முப்பது முதல் அறுபது மி.லி. அருந்தி வந்தால் தாகம், நீரடைப்பு, மேகச்சூடு, முதலியவை குணமாகும்.
    துத்தி விதைகளைப் பொடி செய்து சம அளவு கற்கண்டுப் பொடி கலந்து அரை முதல் ஒரு கிராம் இரண்டு வேளை நெய்யுடன் குழைத்து உண்டு வந்தால் வெண்புள்ளி நோய் குணமாகும்.
    துத்தி வேரை உலர்த்தி பொடி செய்து மூன்று கிராம் முதல் ஐந்து கிராம் வீதம் தினமும் பாலில் சேர்த்துக் குடித்து வர மூலச் சூடுதணியும்.
    வாயு சம்பந்தப் பட்ட வியாதிகளுக்கும் இடுப்புவலி, பழைய மலத்தினால் உண்டாகும் பூச்சிகள் ஒழிய இந்தக் கீரையை அடிக்கடி கடைந்தோ பொரியல் செய்தோ உணவுடன் சேர்த்துக் கொண்டு வந்தால் யாவும் குணமடையும்.
    எலும்பு முறிவு ஏற்பட்டால், முதலில் எலும்பை ஒழுங்குபடுத்திக் கட்டிக் கொண்டு இந்த இலையை நன்றாக அரைத்து மேலே கனமாகப் பூச அதன் மேல் துணியைச் சுற்றி அசையாமல் வைத்திருந்தால் வெகு விரைவில் முறிந்த எலும்பு கூடி குணமாகும்.
    துத்தி இலையை நன்றாக அரைத்துக் கசக்கி சாறு எடுத்துக் கொண்டு அந்தச் சாற்றுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நீர் சுண்டும் அளவு நன்றாக காய்ச்சி வடிகட்டிப் பாட்டிலில் வைத்துக் கரப்பான் கண்ட குழந்தைகளுக்கு தடவி வந்தால் இந்நோய் குணமாகும்.
    குடற்புண்ணால் வேதனைபடுகின்றவர்கள் துத்தி கஷாயத்தை தினசரி மூன்று வேளை சர்க்கரை கலந்து குடித்து வந்தால் பூரண குணம் பெறலாம். தவிர நீர்சுளுக்கு, தொண்டை கம்மல் சொரிசிரங்கு உள்ளவர்கள் இந்த கஷாயத்தை குடித்து குணமடையலாம்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...