Apr 23, 2012

ஆடாதோடை


மருத்துவக் குணங்கள்:

    மக்கள் ஆரோக்கியமாக வாழ சித்தர்கள் பல வழிமுறைகளை கண்டறிந்து கூறினார்கள்.  அதில் நரை, திரை, மூப்பு, சாக்காடு நீக்கி, என்றும் இளமையுடனும் சுறுசுறுப்புடனும் வாழச் சொல்லப் பட்டவைதான் காய கற்ப மூலிகைகள்.
    ஆடாதோடை சிறு செடியாகவும், ஒரு சில இடங்களில் மரமாகவும் காணப்படும். இதன் இலை மாமர இலை வடிவில் இருக்கும்.  ஆடுகள் தொடாத இலை என்பதால் இது ஆடாதோடா என மருவி பெயர் பெற்றுள்ளது.
    ஆடாதோடை அதிகளவு கரியமில வாயுவை உள்வாங்கி, பிராண வாயுவை வெளியிடுகிறது.  இது அதிகளவு ஆக்ஸிஜனை வெளியிடுவதால் இதனை ஆயுள் மூலிகை என்றும் அழைக்கின்றனர்.  இதன் வேர், பட்டை, பூ, இலை அனைத்தும் மருத்துவத் தன்மை கொண்டது.  மனிதனை அன்றாடம் துரத்தும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இது அருமருந்தாகும்.
    ஆடாதோடை தென்னிந்தியாவில் பல இடங்களில் காணப்படும் மூலிகையாகும்.  எந்த வகையான மண்ணாக இருந்தாலும் இந்த ஆடாதோடை செழித்து வளரும் தன்மை கொண்டது.  கிராமப்புற மக்களும் சரி, அங்கு மருத்துவம் செய்யும் மருத்துவர்களும் சரி
, ஆடாதோடை இலையை அதிகம் பயன்படுத்துவார்கள்.  நெஞ்சில் சளி, அதனுடன் வலி, உடலில் தசைப்பகுதிகளில் வலி போன்றவற்றிற்கு ஆடாதோடை இலையைப் பறித்து காயவைத்து பொடியாக்கி கஷாயம் செய்து கொடுப்பார்கள்.  இது சிறந்த நிவாரணியாக பயன்படுகிறது.  அதுபோல் தடுக்கி விழுந்து மார்பு பகுதியில் அடிபட்டால் உடனே முதலுதவியாக ஆடாதோடை இலை ஒன்றுடன் வெற்றிலை 2 சேர்த்து மென்று தின்னக் கொடுப்பார்கள்.  இது உடனடி நிவாரணமாகும்.
    மனித  உடலில் நுரையீரல் முக்கிய உறுப்பாகும்.  இது சுவாசக் காற்றை உள்வாங்கி  அதிலுள்ள பிராணவாயுவைப் பிரித்து எடுத்துக் கொண்டு கரியமில வாயுவை வெளியேற்றுகிறது.  நுரையீரல் நன்கு செயல்பட்டால் தான் இரத்தம் சுத்தமடையும்.  இதனால் நீண்ட ஆயுளும் கிடைக்கும்.  இத்தகைய சிறப்பு வாய்ந்த நுரையீரலைப் பலப்படுத்த ஆடாதோடை சிறந்த மருந்தாக உள்ளது.  இது நுரையீரல் காற்றுச் சிற்றறைகளில் உள்ள அசடுகளை (சளி) நீக்கி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.  இதனால் இதை மரணமாற்று மூலிகை என்றும் கூறுகின்றனர்.
    ஆடாதோடை இலை, தூதுவளை இலை சம அளவு எடுத்து காயவைத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் காலை, மாலை வேளைகளில் தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் அனைத்தும் நீங்கும்.  சளித் தொல்லை அணுகாது.  நுரையீரல் பலம்பெறும்.  மேலும் இரத்த நாளங்களில் உள்ள சளியை நீக்கி ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.  ரத்தத்தில் உள்ள தேவையற்ற உப்பு, கொழுப்பு போன்றவற்றை மாற்றும் தன்மை ஆடா தோடைக்கு உண்டு.
    ஆடாதோடை இலையை நிழலில் உலர்த்திப் பொடித்து வைத்து தினமும் காலை வேளையில் 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்து, குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு உண்டாகும் சளி, இருமல், இரைப்பு நீங்கும்.  நெஞ்சுச் சளியைப் போக்கி உடலை சீரான நிலையில் வைத்துக்கொள்ளும். இதில் பச்சயம் அதிகமாக இருப்பதால் நெஞ்சுச்சளி, இருமல் போன்றவற்றை உடனே மாற்றும். குத்து இருமல், தொண்டைக்கட்டு போன்றவை நீங்கும்.
    மேற்கண்ட முறைப்படி 1 மண்டலம் அதாவது 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குழந்தைகளுக்கு எப்போதுமே சளித் தொல்லை உண்டாகாது.
    ஆடாதோடை வேரையும், கண்டங்கத்திரி வேரையும் இடித்து நீர்விட்டு கொதிக்க வைத்து குடிநீராக மாற்றி அதனுடன் திப்பிலி பொடி சேர்த்து அருந்தி வந்தால் வறட்டு இருமல் மற்றும்  தொண்டைப் புகைச்சல் குணமாகும்.
    ஆடாதோடை இலை, தூதுவளை,  துளசி இலை இவைகளை வெயிலில் உலர்த்திப் பொடியாக்கி வைத்துக்கொண்டு 1 ஸ்பூன் பொடியில் தேன் கலந்து தினமும் காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு, தும்மல், இருமல், சுவாச காச நோய்கள் நீங்கும்.  ஆடாதோடை இலையைக் குடிநீர் செய்தோ, அல்லது பொடி செய்து தேன் கலந்தோ சாப்பிட்டு வந்தால் நல்ல குரல் வளம் கிடைக்கும்.  ஆடாதோடை இலைகளை உலர்த்திப் பொடியாக்கி சிறிது நீர்விட்டு குழைத்து நெஞ்சில் பற்றுப் போட்டால், நெஞ்சுச்சளி அறவே நீங்கும்.
    ஆடாதோடை இலை – 2,  வெற்றிலை – 2,  மிளகு – 5, சுக்கு – 1 துண்டு சேர்த்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் உடல்வலி, நெஞ்சுச் சளி நீங்கும்.
    தூதுவளை, கண்டங்கத்திரி , ஆடாதோடை, நறுக்குமூலம் இவற்றின் இலைகளைச் சம அளவு எடுத்து காயவைத்து பொடியாக்கி வைத்துக் கொண்டு தினமும் இருவேளை, கஷாயம் செய்து அருந்தி வந்தால், ஈளை, இழுப்பு, இருமல், சுவாசகாசம், போன்றவை குணமாகும்.
    காயவைத்த ஆடாதோடையிலை – 5, அதிமதுரம்-2 கிராம்,  திப்பிலி-1 கிராம், தாளிச பத்திரி – 1 கிராம், சிற்றரத்தை 1/4 கிராம் எடுத்து  இடித்து பொடியாக்கி அதனை 500 மி.லி. நீர்விட்டு கொதிக்க வைத்து அது 200 மி.லி.யாக வரும்போது இறக்கி வடிகட்டி காலை மாலை என இருவேளையும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் சளி நீங்கும்.  கோழை வெளியேறும்.  இரைப்பு நீங்கும்.
    கழுத்து வலி, கை, கால் மூட்டு வலி, தோள்பட்டை வலி இவைகளுக்கு ஆடாதோடை காய்ந்த இலையுடன்  வசம்பு, மஞ்சள், சுக்கு இவைகளை சம அளவு எடுத்து இடித்து அதனுடன் தவிடு சேர்த்து துணியில் பொட்டலமாகக்  கட்டி சட்டியில் வைத்து சூடாக்கி வலி உள்ள இடங்களில் ஒற்றடம் கொடுத்தால் வலிகள் நீங்கும்.
    ஆடாதோடை இலை, வேர்ப்பட்டை, கண்டங் கத்திரி இவற்றை காயவைத்து இடித்து பொடியாக்கி கஷாயம் செய்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வந்தால் மண்டைக்குத்து, தொண்டைவலி, வறட்டு இருமல் போன்றவை நீங்கும்.  இந்த பொடியை தேனில் கலந்துகூட அருந்தலாம்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...