Apr 23, 2012

மலர்களின் மருத்துவ குணங்கள்


மலர்களின் மருத்துவ குணங்கள்

06 Aug 2011

இப்பூவுலகெங்கும் மரம், செடி, கொடி, சமுத்திரம், மலை, பறவைகள், மனித இனம், விலங்குகள் என்பன இயற்கையில் பரிணமித்துள்ளன. இவைகள் அனைத்தையும் விட மிகவும் அழகான தோற்றத்தை தன்னகத்தே கொண்டுள்ளவைதான் மலர்கள் என்பதும் மறுப்பதற்கில்லை. மரம், செடி, கொடிகளில் பூக்கும் மலர்களின் நிறம், அதன் மருத்துவ குணம், சுகந்தம், கவர்ச்சியான தோற்றம் என்பன இவ்வுலகில் உள்ளோரை பிரமிக்க வைக்கின்றன என்பது நிதர்சனமாகும்.


மிலேனியம் ஆண்டாக மிளிரும் இன்றைய காலகட்டத்தில் கூட வீட்டுத் தோட்டங்கள், பூஞ்சோலைகள், பூங்காவனங்கள் என்பவற்றில் கோடானு கோடி பூக்கள் தினமும் மலர்வதை அவதானிக்கலாம். இதனாலன்றோ ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா’ என்று இயற்கையைப் போற்றினர் நமது முன்னோர்கள்.அதேவேளை ‘எத்தனை கோடி பூமலரும்’ என்றார் கவிஞர் கண்ணதாஸன். மேலும் எமது பண்டைய இலக்கியம்கூட பெண்களை மலருக்கு ஒப்பிடுவதைக் கண்டோம். மங்கையரின் கூந்தலை அலங்காரம் செய்வதில் மலர்கள் பிரதான பங்கினை வகிக்கின்றன என்றும் கூறலாம்.

பூக்கள் நமக்கு இயற்கை நல்கிய கொடை, அவைகளில் தான் எத்தனை எத்தனை வர்ணங்கள், பல்வேறுபட்ட வடிவங்கள், விதம் விதமான நறுமணங்கள், மருத்துவ குணங்கள் என்று அதன் தாற்பரியங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.கண்ணுக்கு கவர்ச்சியாகவும், மனதுக்கு சாந்தியையும், கிளர்ச்சியையும் நல்குவது பூக்கள்தான் என்பது வெள்ளிடைமலை. மலர்கள் புனிதமானவை. இறைவனுக்கு அர்ப்பணிக்கக் கூடியது. மணமக்கள் கழுத்தில் மாலையாகப் பொலிவது மலர்கள் தான் என்பதையும் நாம்அறிவோம். மகரந்தங்களால் இனிக்கும் தேனை வழங்கிவருவதும் பூக்களே.

பல்வேறு சிறப்பு மிக்க அத்தகைய மலர்கள் மனித குலத்திற்கு பிணி நீக்கும் ஒளடதமாகவும் முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர் என்றும் அறிய முடிகின்றது. சித்த மருத்துவ நூலை புரட்டிப் பார்த்தோமாகில் பல்வேறு வகையான மலர்களின் மருத்துவ குணங்களை சிறப்புறக் கூறப்பட்டுள்ளதை அவதானிக்கலாம்.ஒவ்வொரு மலருக்கும் ஒவ்வொரு வகையான மருத்துவ குணம் உண்டு. இன்றுகூட தென் இந்திய கிராமங்கள் சிலவற்றில் நோய்களுக்கு பூக்களை மருந்தாகப் பயன்படுத்தி எளிய முறையில் சிகிச்சை பெறுகின்றனர். இது செலவில்லா சுலப மருத்துவம் என்பது கண்கூடு.
பலகோடி மலர்கள் உலகில் உள்ளன என்பதை ஆரம்பத்தில் பார்த்தோம். இருப்பினும் நமது அனுபவம் மற்றும் பழக்கத்தில் உள்ள மலர்களின் மருத்துவ குணம் பற்றி அறிந்து கொள்வது இங்கு உசிதமாகும்.முதலில் நாம் தெரிவு செய்வது மருதோன்றிப் பூவாகும். மருதாணி என்ற சிறிய செடியில் கிடைப்பது மருதோன்றிப்பூ. இந்த மருதாணி இலையை மங்கையர் தங்கள் அழகிற்காக கால்களிலும், கைகளிலும், அரைத்துப் பூசுவார்கள்.

இது வண்ண வண்ண அழகையும் குளிர்ச்சியையும் தருகின்றது. மருதாணி மரத்தில் மலரும் பூக்கள் மருதோன்றிப் பூக்களாகும். இந்தப் பூக்கள் மருத்துவ தன்மை வாய்ந்தவை. மருதாணி இலைக்கு உள்ளதைப் போன்று பூக்களுக்கும் உடல் உஷ்ணத்தை தணிக்கும் தன்மை உண்டு.மருதோன்றிப் பூவைப் படுக்கைக்கு செல்லுமுன் தலையில் வைத்துக் கொண்டால் அல்லது தலைக்கு அடியில் வைத்துக் கொண்டால் நன்றாகத் தூக்கம் வரும். குடும்பக் கவலை, தீர்க்க முடியாத பிரச்சினை, மன அலைச்சல் உள்ளவர்கள் மற்றும் ஹிஸ் யரியர் நோய் உள்ள மங்கையர் இந்தப் பூவை தலையில் சூடிக் கொணடால் நோய் அகன்றுவிடும்.
சில பெண்களுக்கு மருதோன்றிப் பூவின் மணம் பிடிப்பதில்லை. ஆகவே அவர்கள் இம்மலரைக் காய வைத்தபின் உபயோகிக்கலாம். காய வைத்த மருதோன்றிப் பூவுடன் எலுமிச்சைப் பழச் சாறு சேர்த்து தலையில் தேய்த்து ஸ்நானம் செய்தால் உடல் உஷ்ணம் குறைவதுடன் தலையில் உள்ள பொடுகு போய்விடும்.மற்ற மலர்களைவிட மிகவும் மாறுபட்ட நறுமணத்தைக் கொண்டது மருதோன்றிப் பூ. அடுத்து கமகமவென்று நறுமணத்தை அள்ளி வீசிக் கொண்டிருக்கும் மல்லிகைப் பூவைப் பார்ப்போம். மல்லிகைப் பூவை விரும்பி வைக்காத பெண்களே இல்லையெனலாம். மல்லிகையிலும் பல ரகங்கள் உள்ளன.

அவற்றை அடுக்குமல்லி, ஒற்றை மல்லி, ஊசிமல்லி, குண்டுமல்லி, நித்திய மல்லி, காட்டுமல்லி என வகுக்கலாம். மல்லிகைப் பூவிலும் சில மருத்துவ குணம் இருப்பது பலருக்குத் தெரியாது. மல்லிகைப்பூ தலைவலியைப் போக்கும் தன்மை கொண்டது. சில பெண்களுக்கு மல்லிகையின் மணம் பிடிக்காது.
அதனை ஒவ்வாமையென்று கூறலாம். மல்லிகை மலர்கள் களைப்பைப் போக்கும் அதேவேளை மோக இச்சையையும் அதிகரிக்கும் வல்லமை கொண்டது. இதனாலன்றோ திருமணம் நடந்து முதல் இரவு அன்று கட்டிலில் மல்லிகை மலர்களைப் பரப்புவதோடு கட்டிலைச் சுற்றி மல்லிகைப் பூக்களைக் கொண்டு அலங்காரமும் மேற்கொள்கின்றனர்.

குழந்தைப் பாக்கியம் இல்லாத தம்பதியினர் தொடர்ந்து மல்லிகைத் தோட்டத்தில் உலாவினால் நல்ல பலன் ஏற்பட வாய்ப்பு உண்டு. மல்லிகைப் பூவின் மணத்தை ‘காதல் மணம்’ என்று கூடச் கூறுவர். மன்மதன் – ரதி ஆகியோர் மல்லிகைத் தோட்டத்தில் தான் வசித்தார்களென்று புராணங்கள் கூறுகின்றன. மல்லிகைப் பூ தைலம் எடுக்கப்பட்டு வாசனைத் திரவியங்களில் கலந்து பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது.

இனி எல்லோரும் விரும்பும் ரோஜா மலரின் தாற்பாரியங்கள் சிலவற்றை நோக்குவோம். பொதுவாக இதனை மலர்களின் ராஜா என்றும் அழைப்பதுண்டு. மனதுக்கு இதமான பலவித வர்ணங்களில் காட்சி தருகின்ற ரோஜாப் பூவைப் பறிப்பதற்கு கூடிய கவனம் செலுத்தியே ஆகவேண்டும். ஏனெனில் ரோஜாச் செடியில் அதிக அளவில் முட்கள் காணப்படுவதேயாகும்.

ரோஜாவை பச்சையாகவும், காயவைத்தும் பயன்படுத்தலாம். ரோஜா இதழ்களை அப்படியே சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். அத்துடன் கர்ப்பிணிப் பெண்களுக்கு சிறுநீர் சுலபமாகப் போகும். குடல்புண், தொண்டைப் புண் குணமாக்குவதற்கும் ரோஜா மலர் பயன்படுத்தப்படுகின்றது.ரோஜாப் பூவின் மணம் சளியைக் குணப்படுத்தும் ஆற்றலும், வயிற்றை சுத்தமாக்கும் இயல்பும் கொண்டது. ரோஜாவிலிருந்து தைலம் எடுக்கலாம். காது வலி, காது குத்தல், காதில் ரோகம், காதுப்புண் என்பவற்றுக்கு இத்தைலம் பயன்படுத்தப்படுகின்றது. ரோஜா இதழ்களைக் கொண்டு குல்கந்து தயார் செய்யலாம்.
இதனைச் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெருகும், அத்துடன் அழகான உடல் அமைப்பையும் பெறலாம். அத்துடன் குருதி சுத்தமடைந்து தோலின் நிறம் பளபளப்புடன் விளங்கும். ரோஜா இதழ்களிலிருந்து சர்பத் தயார் செய்யலாம். இதை அருந்தினால் மூலச்சூடுஇ மலச்சிக்கல் குடலில் உண்டாகும் புண் இவைகளைக் குணப்படுத்தும். வாயிலுள்ள துர்நாற்றத்தை ரோஜா இதழ்கள் போக்கும் தன்மையுடையது.

பொதுவாக தாம்பூலம் தரிக்கும் பொழுது அத்துடன் இரண்டு அல்லது மூன்று ரோஜா இதழ்களை சேர்த்துக் கொள்வது நல்லது. அது ஜீரணத்தைப் போக்கும். வீட்டு முற்றத்தில் ரோஜா செடிகளை வளர்ப்பது உத்தமம். அவற்றைப் பதியம் போட்டு பூச்சாடிகளிலும் உண்டு பண்ணலாம். அடுத்ததாக நாம் பவள மல்லிகைப் பூவை எடுத்துக் கொள்வோம். பவள மல்லிகைச்செடி மரம் வகையைச் சேர்ந்தது.

இதனை வளர்ப்பதற்கு அதிக தண்ணீர் தேவையில்லை. கோடையில் பூத்துக் குலுங்கும் இந்தமலரை ‘பாரிஜ மலர்’ என்றும் கூறுவர். ‘பாரிஜம்’ என்ற பதம் சமஸ்கிரதச் சொல்லாகும். இந்தப் பூ சுகந்தத்தைக் கொடுக்கக் கூடியது. இதன் வாசனை அலாதியானது. இந்தப் பூ மிகச் சிறிதாக இருக்கும். இவை இந்திரனின் தோட்டத்தில் காணப்பட்டன என்று ‘அமர கோசம்’ என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.

இனி பவள மல்லிகைப் பூ பற்றிப் பார்ப்போம். இதனை கண் சம்பந்தமான நோய்களுக்கும் பயன்படுத்தலாம்.பெரும்பாலும் பெருமாள் கோயில்களில் இந்தப் பவள மல்லிகை மரங்கள் அதிகமாக இருக்கும். இதன் வாசனை ஞானத்தை அளிக்கக் கூடியது. அத்துடன் இந்த மரத்தின் கீழேதான் வாயுபுத்திரன் தவம் இருந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. இதன் அடிப்படையில் தான் ஆஞ்சநேயர் சன்னதியில் பவள மல்லிகை மரம் வளர்க்கப்படுகிறது.

அடுத்து நாம் இலுப்பைப் பூவைப் பற்றி சிறிது ஆராய்வோம். இலுப்பை மரத்திலிருந்து கிடைக்கும் பூ இலுப்பைப் பூ ஆகும். இந்தப் பூவில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.மெலிந்த உடலுள்ளவர்கள் இலுப்பை பூக்களை பசும்பால் விட்டு அரைத்து காய்ச்சிய பாலுடன் சிறிது சர்க்கரை சேர்ந்து பருகி வந்தால் நாற்பத்தெட்டு நாட்களுள் உடம்பு தேறும். இலுப்பை பூவை ஒத்தடம் கொடுத்தால் உடலில் உள்ள வீக்கம் குறையும்.

ஆண்மைக் குறைவு உள்ளவர்கள் பசும் பாலுடன் இலுப்பைப் பூ கஷாயத்தைச் சேர்த்து பருகினால் ஆண்மைக் குறைபாடு குணம் அடையும். இலுப்பை எண்ணெய்யை உடலின் உறுப்புக்கள் சிலவற்றில் தேய்த்துக் கொள்வது முண்டு. சிலர் அவ்வப்போது உணவிற்காகவும் பயன்படுத்துகின்றனர்.
இனி தூதுவளைப் பூ பற்றிப் பார்ப்போம். தூதுவளைப் பூ
மிகச் சிறந்த மருத்துவ குணம் நிறைந்தது. இந்தப் பூ அதிக அளவில் கிடைப்பது இல்லை. கிடைக்கும் பூவை வதக்கி துவையலாக அரைத்துச் சாப்பிட்டால் சளி, மூக்கடைப்பு குணம் அடையும்.தூதுவளைப் பூவைப் போன்று தூதுவளை இலையையும் துவையல் செய்து சாப்பிட்டால் நல்ல பயன் ஏற்படும். தொண்டை, வயிறு இவைகளில் ஏற்படும் புண்களுக்கு இது மருந்தாகப் பயன்படுகிறது. வீட்டு வேலைகளில் எல்லோரும் தூதுவளைக் கொடியை வளர்க்க வேண்டும். தூதுவளை இலை, பூ இவைகளுக்கு நல்ல விலை கிடைக்கின்றது. குறிப்பாகச் சித்த மருத்துவத்திலும், ஆயுர் வேதம், யூனானி முறைகளில் பெரும் அளவு இது பயன்படுகிறது.

அடுத்ததாக நீர்த்தாவரங்களில் காணப்படும் தாமரைப் பூவைப் பற்றி சிறிது பார்ப்போம். தாமரை மலர் மிகவும் அழகானது. இதன் மத்தியில் சரஸ்வதி வீற்றிருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. நினைவாற்றலுக்கு தாமரைப்பூ சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.தாமரைப் பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நரை, திரை, மூப்பு ஆகிய மூன்றும் ஏற்படாது. அத்துடன் உயிரையும் வளர்க்கும் என்று சித்த நூல்கள் கூறுகின்றன. நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ தாமரைப் பூ மருந்தாகப் பயன்படுகின்றது. வெள்ளைத் தாமரைப் பூவைச் சுத்தம் செய்து குடிநீர் தயாரித்து பருகி வந்தால் இரத்த மூலம், சீதபேதி குணமடையும் என்பர். மூளை வளர்ச்சிக்கு இது முக்கிய மருந்தாகும். இதன் அடிப்படையில் தான் கல்வி வளர்ச்சியும் ஞான வளர்ச்சியும் இருக்கும்.
தாமரை விதைகளை பச்சையாகச் சாப்பிடலாம். இதைச் சாப்பிட்டால் இரத்த விருத்தி ஏற்படும். உடல் உஷ்ணம் குறையும்.
அடுத்து முருங்கைப்பூ பற்றிப் பார்ப்போம். முருங்கைப் பூவைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. முருங்கைப்பூ தாது பலத்திற்கு முக்கிய பங்கு வகிக்கின்றது. பசும் பாலை நன்றாகக் காய்ச்சி அதில் முருங்கைப் பூவைப் போட்டு நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் ஏற்படும். ஆண்மை சக்திக்கு அதிகமாக முருங்கைக் கீரை, முருங்கைப் பூ இவைகளைப் பயன்படுத்த வேண்டும் என்கின்றனர்.


முருங்கை மரத்தை மிகச் சுலபமாக தோட்டத்திலும் வீட்டிலும் வளர்க்கலாம். கிளைகளை வெட்டி வைத்தால் சுலபமாக வளர்ந்து பலன் தரும்.வீட்டிற்கு ஒரு வைத்தியர் என்று முருங்கை மரத்தைக் குறிப்பிடலாம். ஆகவே எமது இல்லத்தில் ஒரு முருங்கை மரம் வளர்ப்பது மிகவும் நல்லது.இனி வேப்பம் பூவைப் பற்றி ஆராய்வோம். வேப்ப மரத்திலிருந்து கிடைக்கும் இந்தப் பூ மிகச் சிறந்த மருத்துவ குணங்கள் நிறைந்தது. வேப்பம் பூ உதிரும் காலத்தில் பூக்களை சுத்தமாக பாய்இ தடுக்குஇ தட்டி இப்படி எதிலாவது சேகரிக்க வேண்டும். வேப்பம் பூவை துவையலாகவோ பொடி செய்தோஇ சர்பத் போல் தயாரித்தோ அல்லது பச்சையாகவோ பயன்படுத்தலாம்.

வயிறு சம்பந்தமான நோய் உள்ளவர்கள் மற்றும் கல், மண் என்பவற்றை தெரியாத்தனமாக உண்ணும் குழந்தைகளுக்கு வேப்பம் பூ கஷாயம் கொடுத்தால் வயிறு சுத்தமாகும். இதை சோற்றில் கலந்து சாப்பிட்டால் வாந்தி, ஏப்பம், பித்தம் நீங்கும். வேப்பம் பூவிற்கு ஜீரணத்தை அதிகரிக்கும் சக்தி உண்டு. அத்துடன் உடலின் உஷ்ணத்தையும் கூட்டும் வல்லமையுள்ளது. வேப்பம் பூ குடலிலுள்ள பூச்சிகளை கொல்லும் மருத்துவ குணம் கொண்டது.வேப்ப மரம் மிகப்பெரிய மருத்துவ குணம் நிறைந்தது. இதன் காற்றே பல வியாதிகளைக் குணப்படுத்தும். அதன் குச்சி, இலை, துளிர் பூ அனைத்தும் மிகப் பயனுள்ளவை.
அடுத்ததாக மகிழம் பூவைப் பார்ப்போம். மகிழம் பூவின் நறுமணம் மற்றப் பூக்களைவிட சற்று வித்தியாசமானது. காதுகளில் எந்த தொல்லை ஏற்பட்டாலும் மகிழம் பூவை எண்ணெய் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து சற்று நேரம் குளிர வைத்து அதன் பின் குளிர்ந்த நீரில் குளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.இனி அகத்திப் பூவைப் பார்ப்போம். அகத்தி மரத்தில் கிடைக்கும் பூவையே அகத்திப் பூ என்கிறோம். அகத்திக்கு சிறந்த மருத்துவ குணங்கள் இருப்பது போல அகத்திப் பூவிற்கும் உண்டு.

அடுத்ததாக தொட்டாச் சிணுங்கிப் பூவைப் பற்றி சிறிது ஆராய்வோம். தொட்டாச் சிணுங்கி என்ற முள் கொடியில் தொட்டால் சிணுங்கிப் பூ கிடைக்கும். தொட்டவுடன் இந்தக் கொடியின் இலைகள் சுருங்கிவிடும்.தொட்டாச்சிணுங்கி வேர் என்பவற்றிற்கு புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல் உண்டு என்பது சித்த மருத்துவர்களது கூற்றாகும். மனிதர்களுக்கு மட்டுமன்றி கால்நடைகளுக்கும் ஏற்படுகின்ற பல நோய்கள் இப்பூவினால் குணமாகின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது. இனி எருக்கம் பூவைப் பற்றி சிறிது நோக்குவோம்.

எருக்கம் செடியிலிருந்து கிடைக்கும் இந்தப் பூ மிகச் சிறந்த மருத்துவ தன்மை வாய்ந்தது. இந்தப் பூ உடலில் உண்டாகும் ஆரம்ப நிலையில் உள்ள குஷ்டத்திற்கு மருந்தாக சித்த மருத்துவர்கள் பயன்படுத்துகின்றனர். அடுத்து அரளிப் பூவைப் பார்ப்போம். இப்பூவும் மருத்துவ இயல்பு கொண்டது.

அரளி விதையும் வேரும் கொடிய விஷத் தன்மை கொண்டது. கிராமங்களில் இதை அரைத்துக் குடித்து தான் தற்கொலை செய்கின்றனர் என்பதையும் காண முடிகின்றது. அதனால்தான் யாரும் வீட்டில் இதனை வளர்ப்பதில்லை. இந்தப் பூவை தலையில் வைத்துக் கொண்டால் தலையில் உள்ள பேன் ஒழியும். இனி தாழம் பூவை எடுத்துக் கொள்வோம். தாழம்பூ மிகவும் நறுமணம் கொண்டது. அம்பாள் பூஜைக்கு உரிய பூ. இதற்கு தனி மரியாதை உண்டு. தாழம்பூ புதர்களுக்குள் சர்ப்பங்கள் வாசம் செய்யும்.

அடுத்து அல்லிப் பூவின் தாற்பரியங்களை நோக்குவோம். அல்லிப்பூ தாமரையைப் போல் இருந்தாலும் மிகச் சிரியதாக காணப்படுகின்றது. வெள்ளை அல்லிப் பூ தான் மருத்துவ குணம் அதிகம் உள்ளது. அதிக உடல் உஷ்ணம் உள்ளவர்கள் அல்லி இதழ்களையும், உள்ளேயுள்ள முடிச்சுக்களையும் பச்சையாகச் சாப்பிடலாம். நீரிழிவு உள்ளவர்கள் அல்லிப்பூவில் சர்பத் செய்து சாப்பிட்டால் நோய் கட்டுப்படும்.

அடுத்து சூரிய காந்திப் பூவைப் பார்ப்போம். சூரிய காந்திப் பூ மற்ற பூக்களைவிட வித்தியாசமானது. சூரியனைப் பார்த்து இந்தப் பூ முகம் திருப்புவதால் இதற்கு சூரிய காந்திப் பூ எனப் பெயர் ஏற்பட்டது. சூரியகாந்தி எண்ணெய் மிகவும் நல்லது. இது சூரியகாந்தி விதையிலிருந்து கிடைக்கும். இருதய நோய் உள்ளவர்கள் இதனைப் பயன்படுத்தலாம்.

இனி வெங்காயப் பூவின் தாற்பரியங்களைப் பார்ப்போம். வெங்காயம் பொதுவாக மருத்துவ குணம் உள்ளது என்பதை நாமறிவோம். வெங்காயத்திலிருந்து வரும் தாள்களில் பூக்கள் தென்படுகின்றன. வெங்காயப் பூக்களுக்கும் மிகச் சிறந்த மருத்துவ குணங்கள் உண்டு. வெங்காயம் ஒரு சிறந்த கிருமி நாசினி.
வெங்காயம் இல்லாமல் சமையல் சிறப்பதில்லை. இனி குங்குமப் பூவை நோக்குவோம். குங்குமப் பூ மிகவும் விலை உயர்ந்தது. காஷ்மீர் போன்ற குளிர்ப் பிரதேசங்களில் விசேஷமாகப் பயிரிடப்படுகின்றது. குங்குமப் பூவை கார்ப்பமுள்ள பெண்கள் தொடர்ந்து சாப்பிட்டால் பிறக்கப் போகும் குழந்தை சிவப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை இன்றும் மக்களிடையே காணப்படுகின்றது.

இறுதியாக மருத்துவ குணம் படைத்த ஏனைய பூக்களின் பெயர்களைப் பார்ப்போம். ஆவாரம்பூ, இரவு ராணிப் பூ, பகல் ராணிப் பூ, தென்னம் பூ, மதனகாமப் பூ, கொன்றைப் பூ, பூவரசம்பூ, மாதுளம் பூ, தொட்டாத்திப் பூ, சிறுநாகப் பூ, நொச்சிப்பூ, புளியம்பூ, ஊமத்தம்பூ, வில்வப்பூ, புங்கம் பூ, மாம் பூ, கடுக்காய்பூ, ஆடாதோடைப் பூ, பூசணிப்பூ, செம்பருத்திப் பூ, எள்பூ, பருத்திப் பூ, வெள்ளாம் பல்பூ என்பனவாகும்.
பொதுவாகப் பார்க்கப் போனால் உலகெங்கும் பரிணமித்துள்ள அனைத்துப் பூக்களிலிருந்தும் மருத்துவப் பயன்பாட்டை பெற்றுக் கொள்ளலாம் என்பது உள்ளங்கை நெல்லிக் கனியாகும்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...