May 22, 2012

நிதானம் என்பது அமைதியான நிலை.  அதுதான் மனிதனுடைய ஆற்றலையும் அறிவையும் தூண்டும் நிலை.  இதைத்தான் உலகிற்கு வாழ்ந்து காட்டிய பெரியோர்கள் முதல் ஞானிகள் வரை தனித்திரு, பசித்திரு, விழித்திரு என்றார்கள்.  இம்மூன்றும் மனிதனை மேல் நிலைக்கு அழைத்துச் செல்ல வழிவகுக்கும். இந்த நிலையைத்தான் நிதானம் என்கின்றனர். இதுவே ஆன்ம நிலைக்கு எடுத்துச் செல்லும் நிலை.
நிதானம் சீராக அமையுமானால் 18 அடங்கலும்
சீராக செயல்படும்.  இவ்விரண்டும் ஒருங்கிணையும் போது தான் மனிதன் பிரபஞ்ச நிலையை அடைய முடியும்.
உச்சி முதல் உள்ளங்கால் வரை அமைந்துள்ள இந்த 18 அடங்கலும் தான் மனிதனை சீராக செயல்பட வைக்கிறது.
அகத்தியர் உலகிற்குச் சொன்ன மகத்துவமான வர்ம மருத்துவ முறைகளில் 18 அடங்கல் முறை சிறப்பான முறையாகும்.  இதுவே மனிதனை நிதானமாக வாழச் செய்கிறது.  இதிலிருந்து, மனிதன் நிதானமாக வாழ்வதற்கு அடங்கல் சிறந்த முறை என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.
18 அடங்கலில்தான் உயிரின் சூட்சமம் அடங்கியுள்ளது.  இந்த 18 அடங்கலும் பிராண சக்தியை உட்கிரகித்து உடலுக்கு சக்தி வழங்குகிறது.  உடல் பாகங்களின் செயல்பாடுகளைத் தூண்டுகிறது.
இந்த 18 அடங்கலில் ஏதாவது ஒன்று, ஏதாவது ஒரு காரணத்தினால் பாதிக்கப்படுமானால் அந்த அடங்கலோடு தொடர்புடைய நரம்புகள் பாதிப்படைந்து நோய்கள் வருவதற்கு சாத்தியமாகிறது.
இவ்வாறு அடங்கல் பாதிப்பினால் ஏற்படும் நோய்களை மருத்துவக் கருவிகளால் கண்டறிய முடியாத நிலை தற்போதும் இருந்து வருகிறது.
இப்படிப்பட்ட நோய்களை சாதாரண மருத்துவர்கள் கண்டறிய முடியாது.  ஆனால், தலைசிறந்த வர்ம வல்லுநர்கள் எளிதாக கண்டறியும் வாய்ப்புகள் அதிகம்.  ஆகையால்தான் வர்ம மருத்துவம் தலைசிறந்த மருத்துவமாக இன்றும் போற்றப்பட்டு வருகிறது.
வர்ம பரிகார முறையில், முறையாக மருத்துவம் செய்து வந்தால் அடங்கலின் பாதிப்பு சீராகும்.  பாதிக்கப்பட்ட அடங்கல் சீராகும்போது அதனுடன் தொடர்புடைய உறுப்புகளும் சீராகச் செயல்படும்.
இதனால்தான் சித்தர்களும் முனிவர்களும், ஞானிகளும், ரிஷிகளும், தேவர்களும், அவதார புருஷர்களும், மனதைச் செம்மைப்படுத்து.. மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்… என்றனர்.  ஆன்மாவே தெய்வம் என்று உரைத்தனர்.  அண்டம் என்ற உலகில் உள்ள அனைத்தும்  பிண்டம் என்ற உடலுடன் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டுள்ளது.  கோள்களின் ஆதிக்கம்  மிகும் போது அதனோடு தொடர்புடைய உறுப்புகளும் பாதிப்பிற்குள்ளாகும் போது அடங்கலும் பாதிக்க நேரிடும்.
18 அடங்கல்களும் சீராக செயல்பட மனமே முக்கியப் பங்கு ஆற்றுகிறது.
பொதுவாக அதிர்ச்சியினால் வரும் நோய்களுக்கு அடங்கல் பாதிப்புதான் முக்கிய காரணமாகும்.  இதற்கு வர்ம பரிகார முறைகளால் செய்யும் மருத்துவ சிகிச்சை முறையே சிறப்பான பலனைத் தரும்.
18 அடங்கலின் பாதிப்புகள் அதன் குறிகுணங்கள் பற்றி வரும் இதழில் விரிவாக காண்போம்.
மரங்கள் – பலாமரம்

மரங்கள், செடிகள், கொடிகள் அனைத்தும் இயற்கையின் கொடையே எனலாம்.  இவைதான் உயிர்காற்றான பிராணனை (ஆக்ஸிஜன்) உற்பத்தி செய்கின்ற வாயு பகவானாகவும், மழை வருவிக்கும் வருண பகவானாகவும், உணவை வழங்கும் அன்னபூரணியாகவும் திகழ்கின்றன.
அதோடு, மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களையும் ஆரோக்கியத்தோடு வாழவைக்கும் தன்வந்திரியாகவும் திகழ்கிறது.
இந்த வகைகளில் அதிக மருத்துவப் பயன் கொண்ட பலா மரம் பற்றி விரிவாக அறிவோம்.
பலாப்பழத்தை அறியாதவர் எவரும் இருக்க முடியாது.  அதன் சுவையை நினைத்தாலே நாவில் நீர் சுரக்கும். பலா இந்தியாவில் அனைத்துப் பகுதிகளிலும் வளரும் மரமாகும்.    இதில் ஆசினிப்பலா, கூழைப்பலா, வருக்கைப் பலா என பல வகைகள் உண்டு.
பலாவின் இலை, காய், பழம், விதை, பால், வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.
இதனை சக்கை, பலவு, பலாசம், வருக்கை, ஏகாரவல்லி என பல பெயர்களில் அழைக்கின்றனர்.
பலா இலை
பலாவிலையி லுண்ணப் பதுங்கிநின்ற பித்தங்
குலாவ யெழும்பிக் குதிக்கும்-உலாவிவரு
கன்ம மகோதரநோய் காணா தகலாத
குன்ம மகலுங் குறி
-தேரையர் குணவாகடம்

பொருள் – பலா இலையில் உண்டால், அடங்கிய தீக்குற்றம் மிகுந்த பாதிப்பால் வந்த பெருவயிறு, குன்மநோய் நீங்கும்.
பலா இலையை காயவைத்து இடித்து பொடியாக்கி அதனை தேனில் கலந்து காலை வேளையில் அருந்தி வந்தால் வயிற்றுப்புண் ஆறும்.  வாயுத் தொல்லைகள் நீங்கும்.
பலா இலைகளை சுத்தம் செய்து சிறிதாக நறுக்கி நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் ஆறும்.  பல்வலி நீங்கும்.
பலா இலையின்  கொழுந்தை  அரைத்து சிரங்கின் மீது பூசினால் சிரங்கு விரைவில் ஆறும்.
பலா பிஞ்சு
பலா பிஞ்சுகளை எடுத்து சுத்தப்படுத்தி அதனுடன் தேவையான அளவு வெள்ளைப்பூண்டு, மிளகு, இலவங்கப்பட்டை, தேங்காய் துருவல், சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால், அதீத தாகம் தணியும், நீர்ச்சுருக்கு, நெஞ்செரிச்சல் குணமாகும்.  உடலுக்கு வலு கொடுக்கும். வாத, பித்த, கபத்தை சீராக வைத்திருக்கும்.  நரம்புத் தளர்வைப் போக்கும். உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றும். அதிகமாக சாப்பிட்டால் அஜீரணக் கோளாறு உண்டாகும்.  எனவே அளவோடு சாப்பிடுவது நல்லது.
பலாப்பழம்
முக்கனிகளில் இரண்டாவது கனியாக பலாப்பழம் உள்ளது. மிகுந்த இனிப்புச் சுவையுடையது.  இரத்தத்தை விருத்தி செய்யும்.  உடலுக்கு ஊக்கமளிக்கும்.  நரம்புகளுக்கு புத்துணர்வூட்டும்.
தித்திக்கும் வாதசி லேத்பித்தம் உண்டாக்கும்
மெத்தக் கரப்பான் விளைவிக்குஞ்-சத்தியமாய்ச் சேராப் பிணியையெலாஞ் சேர்க்கும் ஒருநொடியிற்
பாதாய் பலாவின் பழம்
-அகத்தியர் குணவாகடம்

பொருள் – தித்திக்கும் சுவையுடையது.  ஆனால் அதிகம் சாப்பிட்டால் வாத, பித்தம் அதிகரிக்கும்.  எளிதில் செரிமானம் ஆகாது..
பலாச்சுளைகளை தேனில் நனைத்து சாப்பிட்டால் நன்கு சீரணமாகும்.
பலாக் கொட்டை
பலாப்பழம் இனிப்புச் சுவை அதிகம் இருப்பதால் சிலர் பழத்தை அதிகம் சாப்பிட்டு, வயிற்றுப் பொருமலால் அவதிப்படுவர்.  அதற்கு ஒரு பலாக்கொட்டையை மென்று சாறை மட்டும் விழுங்கினால் உடனே வயிற்றுப் பொருமல் நீங்கும்.
பலாக் கொட்டைகளை சுட்டும், அவித்தும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுக்கும்.  வாயுத் தொல்லைகளை நீக்கும்.
பலாமரத்தின் பயன்களை முழுமையாகப் பெற்று நீண்ட ஆரோக்கியம் பெறுவோம்.

ஆரோக்கியம் தரும் பீன்ஸ்
மனிதர்களுக்குத் தேவையான அனைத்து உயிர்ச் சத்துக்களும் கீரை, காய், கனி, விதை இவற்றில் உள்ளன. இதில் மனிதன் தினமும் உணவுக்காக அதிகம் உபயோகிப்பது காய்களையே..
வேகவைத்த காய்களைத்தான் மனிதக் குடலானது எளிதில் சீரணிக்கும்.  மற்றும் அதன் சத்துகளை எளிதாக உட்கிரகிக்கும்.  இதனாலே நம் முன்னோர்களும், அவதாரப் புருஷர்களும் சைவ உணவை வலியுறுத்தி வந்தனர்.
அத்தகைய காய்களில் பீன்ஸ் வகையும் ஒன்று.  இது அவரை இனத்தைச் சேர்ந்தது.  பீன்ஸை இங்கிலீஷ் காய் என்பர்.  காரணம் ஆங்கிலேயர்கள் தங்கள் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளும் காய்களில் இதுவும் ஒன்று.
பீன்ஸ் குச்சி போல் நீண்டு சற்று பருத்து காணப்படும்.  பயறு வகை காய்களைப் போல் விதைகள் உள்ளிருக்கும்.
பச்சையாக பறித்த பீன்ஸில்  கலோரி அளவு குறைவாக உள்ளது. இது எளிதில் சீரணமாகக்கூடியது.  வைட்டமின், தாதுக்கள் அதிகம் நிறைந்துள்ளது
100 கிராம் பீன்ஸில் நார்ச்சத்து  9 சதவீதம் உள்ளது. இந்த நார்ச்சத்தானது குடலின் உட்புறச் சுவர்களைப் பாதுகாத்து நச்சுத் தன்மைகளை வெளியேற்றும் தன்மை கொண்டது.  புற்று நோயைக் குணப்படுத்தும் தன்மை பீன்ஸ்க்கு உண்டு என்று அண்மையில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த நார்ச்சத்தானது (ஈடிஞுtச்ணூதூ ஞூடிஞஞுணூ) இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்டிராலைக் குறைத்து அதை சத்தாக மாற்றுகிறது.
இதில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளதால் கண்பார்வை தெளிவடையச் செய்கிறது.  அதுபோல் ப்ளேவனாய்டு பாலிபினோலிக்
ஆண்டி ஆக்ஸிடென்ட்,   லூட்டின், ஸியாசாந்தின், கரோட்டின் இருப்பதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.
பீன்ஸில் த்டிச்-துச்ணtடடிண என்ற வேதிப் பொருள் நிறைந்திருப்பதால் இது சருமத்தையும், கண்களையும், புறஊதாக் கதிர்களின் பாதிப்பிலிருந்து தடுக்கிறது.
இதிலுள்ள ஞூணிடூச்tஞுண், வைட்டமின் பி 12 உடன் இணைந்து கருவுற்ற பெண்களுக்கு  கருவில் குழந்தை நன்கு வளரவும், நரம்பு பாதிப்புகள் ஏதும் பாதிக்காதவண்ணமும்  தடுக்கிறது.
பீன்ஸில் வைட்டமின் பி6, தையமின், வைட்டமின் சி, இருப்பதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது.
பீன்ஸில் இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனிசு மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது.  மக்னீசியம் உடலின் வளர்சிதை மாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.  பொட்டாசியம் இதயத் துடிப்பை சீராக்குகிறது.  இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
பீன்ஸில் உள்ள இசோபிளவோன்ஸ் எனப்படும் உயிர்த்தாது உடலுக்கு வலுவைக் கொடுக்கும் தன்மை கொண்டது.
பீன்ஸை சிறிதாக நறுக்கி நீரில் கொதிக்கவைத்து, அந்த நீரை அருந்தி வந்தால் வாய்ப்புண் வயிற்றுப்புண் குடல்புண் ஆறும்.
பீன்ஸை பொரியலாகச் செய்து சாப்பிட்டு வந்தால், செரிமான சக்தியை அதிகரிக்கும். வாயுத் தொல்லையை நீக்கும்.   இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்கும்.
· மூலநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உணவாகும்.
· பீன்ஸ் இரத்தத்தில் உள்ள கொழுப்பைக் கரைத்து இரத்தத்தை சுத்தமாக்குகிறது.  இரத்தக் குழாய் அடைப்புகளைப் போக்குகிறது.  உயர் இரத்த அழுத்தத்தை சீர்செய்கிறது.  இதய அடைப்பு, இதய நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
மேலும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைத்து, அதிக உடல் எடையைப் போக்குகிறது.
· பீன்ஸை கொதிக்கவைத்து ஆறிய நீரில் முகம் கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும்.
· பீன்ஸ் சருமத்தைப் பாதுகாக்கும்.  வியர்வையைத் தூண்டும்.
· தொண்டைப்புண், வறட்டு இருமல், நாவறட்சி இவற்றைப் போக்கும்.
· கை, கால் நடுக்கத்தைப் போக்கும்.
· நீரிழிவு நோயாளிகள் பீன்ஸை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் நோயினால் உண்டான பாதிப்புகள் குறையும்.
· பல் வலியைப் போக்கும்.  உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து, வாத, பித்த, கபம் என்னும் முக்குற்றத்தை சீராக வைத்திருக்கும்.
· நீண்ட நாள் ஆறாத புண்களின் மீது, பீன்ஸ் வேகவைத்த நீரை ஆறவைத்து புண்களைக் கழுவி வந்தால் புண்கள் விரைவில் ஆறும்.
பீன்ஸை பொரியல், அவியல், சாம்பார்  என பலவாறு சமைத்து உண்ணலாம்.
பீன்ஸைப் பயன்படுத்தி நீண்ட ஆரோக்கியம் பெறுவோம்.
இதயம் காக்கும் பூண்டு…
மனித இனம், நாகரீகம் வளர வளர தன் சுவை தேவைக்காக உணவை பல வகையில் தயாரித்து உண்ண ஆரம்பித்தது.  பச்சையாக தின்ற மனிதர்கள், பின் வேகவைத்து உண்டு வந்தனர்.  இப்படி ஆரம்பித்த உணவு வளர்ச்சி ஒரு கட்டத்தில் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உணவுகளையே உண்ண ஆரம்பித்தனர்.  பின் வரும் காலங்களில் உணவே மருந்து, மருந்தே உணவு என்ற நிலை வந்தது.  இது சித்தர்கள், ஞானிகளின் காலமாகும்.  இக்காலத்தில் மனிதர்கள் நோயில்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.  நம் முன்னோர்களும் மேற்கண்ட நிலையையே கடைப்பிடித்து வந்தனர்.  ஆனால் நாம் ஆண்டாண்டு காலமாக நம் முன்னோர்கள் கடைபிடித்த முறைகளை கைவிட்டு நாவின் சுவையைத் தேட ஆரம்பித்தோம்.  அதன் பயன் இன்று நோய்கள் பலவற்றின் தாக்குதலுக்கு ஆளாகி மருந்து, மாத்திரை என தினமும் பொழுதைக் கழிக்கிறோம்.
இப்படி நாம் மறந்த உணவு முறையில் உள்ள  பொருட்களுள் ஒன்றான வெள்ளைப் பூண்டின் மருத்துவக் குணம் பற்றி அறிந்துகொள்வோம்.
இது இந்தியாவில் எல்லா பாகங்களிலும் பயிராகும் ஒருவகை பூண்டாகும்.  நெடிய மணமுடைய, குமிழ் வடிவ கிழங்காகக் காணப்படும்.  ஒரு பூண்டில் 10 முதல் 12 பற்கள் வரை இருக்கும்.
தற்போது சீனாவிலிருந்து பூண்டு இறக்குமதி செய்யப்படுகிறது.  மேலும், இந்திய பூண்டு வகைகள் அதிகம் மருத்துவக் குணம் கொண்டதாக மேற்கத்திய நாட்டு விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
வெள்ளைப் பூண்டில் பசைத்தன்மை அதிகமாக இருப்பதால், நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும். வெள்ளைப் பூண்டானது சைவச் சமையலிலும் சரி, அசைவ சமையலிலும் சரி முக்கியப் பொருளாக சேர்க்கப்படுகிறது.
வெள்ளைப் பூண்டின் பயன்பாடு கி.மு.2600 ஆண்டுகளுக்கு முன்பே இருந்து வந்துள்ளது.
வெள்ளைப் பூண்டை வெள்ளுள்ளி, வெள்வங்காயம், இலசுனம் என்ற பெயர்களில் அழைக்கின்றனர்.
பூண்டின் மருத்துவக் குணங்கள்
சன்னியோடு வாதன் தலைநோவு தாள்வலி
மண்ணிவரு நீர்க்கோவை வன்சீதம்-அன்னமே!
உள்ளுள்ளி காண்பாய் உளைமூல ரோகமும்போம்
வெள்ளுள்ளி தன்னால் வெருண்டு

-அகத்தியர் குணவாகடம்
பொருள் – சுரக்காய்ச்சல், வளிநோய்கள், ஐயத் தலைவலி, மண்டைக்குத்து, நீரேற்றம், இருமல், இரைப்பு, வயிற்றுவலி போன்றவற்றை நீக்கச் செய்யும்.  முப்பிணி சீதக்கழிச்சல், மூலம், இவைகளுக்கு சிறந்த மருந்தாக வெள்ளைப்பூண்டு பயன்படும்.
பூண்டு பற்றிய ஆராய்ச்சி முடிவுகள்
பூண்டு பிட்யூட்டரி என்ற சுரப்பியைத் தூண்டிவிட்டு இதன் மூலமாக கொழுப்புச் சத்தையும், கார்போஹைட்ரேட் சத்தையும் ஜீரணிக்க உதவுகிறது.  வைட்டமின் பி சத்தை அதிகரிக்கச் செய்கிறது.  நரம்பு மண்டலங்க ளுக்கும் இருதய இரத்த ஓட்டத்திற்கும் நல்ல சக்தியைக் கொடுக்கிறது.  மனித இரத்த ஓட்டத்தை தடைகள் இல்லாமல் சீராக செயல்படச் செய்கிறது. இரண்டு ஆண்டி பயாடிக்ø-ஸ உற்பத்தி செய்கிறது.  இதன் மூலம் உடலைத் தாக்கும் 15 பாக்டீரியாக்களை அழிக்கிறது.
இரத்த அழுத்தம் குறைய
இரத்தத்தில் கலந்துள்ள கொலஸ்ட்டிராலை கரைத்து வெளியேற்றும் தன்மை பூண்டுக்கு உண்டு.  மேலும் இரத்தத்தின் கடினத் தன்மையைக் குறைத்து ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற ரசத்தாதுக்கள், வேதிப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது.
ரத்தக் குழாய்களில் படிந்துள்ள கொழுப்புகளைக் கரைத்து ரத்தத்தில் அதிகளவு இரும்புச் சத்தை உட்கிரகிக்கச் செய்கிறது.  இதனால் இரத்த அழுத்தம் நீங்கி, ரத்தம் சீராக ஓட ஏதுவாகிறது.
இதயத் தசைகளை வலுவடையச் செய்வதால் மாரடைப்பு போன்ற நோயின் தாக்குதலில் இருந்து விடுபட வைக்கிறது.
பூண்டை தினமும்  ஏதோ ஒரு வகையில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.  பாலில் வேகவைத்து பூண்டை சாப்பிட்டு வந்தால் மேற்கண்ட பாதிப்புகளுக்கு உற்ற மருந்தாகும்.
வாய்வுத்தொல்லை நீங்க
பூண்டுக்கு வாயுத் தொல்லையைப் போக்கும் குணமுண்டு.  உணவு முறையில் வாயு பதார்த்தங்களே அதிகம் இடம்பிடிக்கின்றன.  இவை வயிற்றில் வாயுவை உண்டுபண்ணுவதால் அவை உடலில் எங்காவது நின்று பிடிப்பை ஏற்படுத்திவிடும்.  வாயுத் தொந்தரவு அதிக மன உளைச்சலைக் கொடுக்கும்.  இதன் பாதிப்பை உணராதவர்கள்  இருக்க முடியாது.  இவர்கள் இரண்டு பூண்டுப்பல் எடுத்து அதனுடன் சிறிது மிளகு சேர்த்து நன்கு அரைத்து லேசாக கொதிக்க வைத்து அதனை அருந்தினால் வாயுத் தொந்தரவு நீங்கும்.  அல்லது, 10 பூண்டுப்பல்லை பாலில் வேகவைத்து சாப்பிட்டு வரலாம். இவ்வாறு சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறு நீங்கும். உண்ட உணவு எளிதில் சீரணமாகும்.  நன்கு பசியைத் தூண்டும்.
· வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது.
· மூலநோயின் பாதிப்பைக் குறைக்கும்.
· மலச்சிக்கலைப் போக்கும்.
· வயிற்றுப் பூச்சிகளை வெளியேற்றும்.
· சிறுநீர் பெருக்கியாகவும் செயல்படும்.
· சர்க்கரை நோயாளிகளுக்கு உண்டாகும் பாதிப்பைக் குறைத்து கணையத்தைத் தூண்டி கணைய நீரை அதிகம் சுரக்கச் செய்யும்.  இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படும்.
நரம்புப் பாதிப்புகளைப் போக்கும்.  நரம்பு வறட்சி, நரம்புகளில் நீர் கோர்த்தல், நரம்புத் தளர்வு நீங்க பூண்டுப்பல்லை மேற்கண்ட முறையில் சாப்பிட்டு வருவது நல்லது.
வியர்வையை நன்கு வெளியேற்றி சருமத்தைப் பாதுகாக்கிறது.நாவறட்சியைப் போக்குகிறது.
இருமல், ஈளை, இழுப்பு, மூக்கில் நீர் வடிதல், மண்டைக்குத்து, நீரேற்றம் போன்றவற்றிற்கு பூண்டு சிறந்த மருந்தாகும்.
பூண்டானது உணவில் உள்ள தேவையற்ற பாக்டீரியாக்களை அழிப்பதால் காய்ச்சல், ஜலதோஷம், போன்ற சிறு சிறு பாதிப்புகள் ஏற்படாவண்ணம் தடுக்கிறது.
உடல் சூட்டை அகற்றுகிறது. காயங்களை வெகு விரைவில் ஆற்றும் தன்மை பூண்டுக்கு உண்டு. சிறு கட்டிகளின் மேல் பூண்டை அரைத்து பூசினால் கட்டி விரைவில் குணமாகும்.
தாதுவை விருத்தி செய்யும். விந்துவைக் கெட்டிப்படுத்தும்.  பெண்களுக்கு கருப்பையை வலுப்படுத்தும்.  தலைமுடி உதிர்வதைத் தடுக்கும்.
தற்போதைய ஆராய்ச்சியில் பூண்டானது புற்றுநோயைக் குணப் படுத்தும் தண்மை கொண்டதாக கண்டறிந்துள்ளனர்.
இவ்வளவு சத்துக்களையும் இத்தகைய மருத்துவப் பயன்களையும் கொண்ட வெள்ளைப் பூண்டை பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம்.

நீர்க்கடுப்பு நீங்க…

இன்றைய  காலகட்டத்தில் தூய்மையான நீர், சுகாதாரமான உணவு என்பது அரிதாகிவிட்டது.  இத்தகைய காரணங்களால் உடலில் பல பாதிப்புகள் உண்டாகின்றன.  அவற்றில் நீர் எரிச்சல், நீர்க்கடுப்பு சிறுநீர் வெளியேறாமை போன்றவை முக்கியமானது. அன்றாடம் பலர்  இப்பாதிப்புகளால் அவதியுறுவதை நாம் கண்டு வருகிறோம்.  இதற்கு மருந்து மாத்திரைகளும் ஒரு காரணமாகும்.
இத்தகைய பாதிப்புக்கு உள்ளானவர்கள்  சிறுநீரக பாதிப்புக்கு ஆளாக நேரிடலாம்.  இவற்றைத் தடுக்க அன்றே சித்தர்கள் பல வழிமுறைகளைக் கூறியுள்ளனர்.
நீர்க்கடுப்பு ஏற்படக் காரணங்கள்
உடலின் நீர்ச்சத்து குறைவே  இதற்கு முக்கியக் காரணமாகும்.  ரத்தத்தில் கலந்துள்ள ரசாயன வேதிப் பொருட்களை சிறுநீரகத்தின் நெப்ரான்கள் பிரித்து ரத்தத்தை சுத்தம் செய்கிறது.
பொதுவாக ஒரு மனிதனுக்கு நாளொன்றுக்கு 167 லிட்டர் அளவு ரத்தத்தை வடிகட்டி பிரிக்கிறது.  இதில் சுமார் ஒன்றரை லிட்டர் அளவு சிறுநீர்தான் வெளியேறுகிறது.  மீதமுள்ளவை மீண்டும் உறிஞ்சப்பட்டு  ரத்தத்தில் சேர்ந்துவிடுகின்றன.  இந்நிலையில் சிறுநீரின் அளவு குறைந்து கடினத் தன்மை அடைந்து வெளியேறும் போது நீர் எரிச்சல், நீர்கடுப்பு போன்றவை ஏற்படுகிறது.  மேலும், மது, உற்சாக பானங்களால் கூட இது ஏற்படலாம்.  உடலிலிருந்து வெளியேறும் ரசாயன வேதிப் பொருட்களால்தான். இத்தகைய உபாதைகள் உண்டாகின்றன.  உடல் சூட்டாலும், நீர்கடுப்பு ஏற்படும்.
நீர்கடுப்பு வராமல் தடுக்க
இளநீரைச் சீவி எடுத்து அதற்குள் சீரகம் 1 ஸ்பூன், சிறிதளவு சர்க்கரை, பாசிப்பயறு 10 கிராம் போட்டு ஓர் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலையில் எடுத்து அவற்றை அரைத்து இளநீரில் கரைத்து அருந்தி வரவேண்டும்.  இவ்வாறு மூன்று நாட்களுக்கு ஆறுவேளை என அருந்தி வந்தால் நீர்கடுப்பு, நீர் எரிச்சல் நீங்கும்.  உடலில் உள்ள தேவையற்ற நீர்கள் வெளியேறும்.  சருமம் பொலிவு பெறும்.  கண்பார்வை  தெளிவடையும்.
நீர் எரிச்சல் தீர நன்கு தண்ணீர் அருந்த வேண்டும்.  நீர்ச்சத்து மிகுந்த உணவுகளைச்  சாப்பிடுவது நல்லது.
எலுமிச்சம் பழச்சாறு எடுத்து அதில் சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து தண்ணீரில் கலந்து அருந்துவது நல்லது.
பானகம் செய்து அருந்தலாம்.  அதாவது பனை வெல்லத்துடன் புளிக்கரைசலைச் சேர்த்து கரைத்து பானகமாக அருந்தலாம்.
சிறிதளவு வால்மிளகை பாலில் ஊறவைத்து அரைத்து அந்த பாலுடன் சேர்த்து அருந்தி வந்தால் நீர்ச்சுருக்கு நீர்த்தாரை புண் போன்றவை நீங்கும்.
மண்பானையில் நீர் ஊற்றி அதில் விலாமிச்சம் அல்லது வெட்டிவேரைப் போட்டு ஊறவைத்து அந்த நீரை அருந்தி வந்தால் நீர்க்கடுப்பு நீர் எரிச்சல் நீங்கும்.  உடல் சூடு தணியும்.
முதல்நாள் இரவு தண்ணீரில் உளுந்தை ஊற வைத்து மறுநாள் காலையில் அந்த உளுந்து ஊறிய நீரை மட்டும் பருகி வந்தால் நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு நீங்கும்.
பசலைக்கீரை நீர்க்கடுப்பைப் போக்கும் தன்மை கொண்டது.  எனவே வாரம் இருமுறை பசலைக் கீரையை உண்டு வருவது நல்லது.
சீரகம், சோம்பு, வெந்தயம், சின்னவெங்காயம், கொத்தமல்லி விதை இவற்றை சம அளவு எடுத்து அரைத்து தயிர் அல்லது மோரில் கலந்து அருந்தி வந்தால் நீர்கடுப்பு உடனே நீங்கும்.
பூசணிக்காயை சாறு எடுத்து அதில் செம்பருத்திப் பூவை சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால் சொட்டு சொட்டாக சிறுநீர் கழிதல் குணமாகும்.
மரங்கள்
இலுப்பை
மரங்கள் நிழலை மட்டும் தருவதில்லை. மனிதன் உட்பட அனைத்து ஜீவராசிகளும் சுவாசிக்க பிராண வாயுவை உற்பத்தி செய்கின்றன.  இதுமட்டுமா, புவி வெப்பத்தைக் குறைத்து மழையைத் தருவிக்கின்றன.
இயற்கையின் படைப்பில் இத்தகைய அற்புதங்களைக் கொண்ட மரங்கள் மனிதனுக்கு மருந்தாகவும் பயன்படுகின்றன.  காய்ந்த மரம் விறகாகவும், வெட்டிய மரம் வீட்டு உபயோகப் பொருளாகவும் பயன்படுகின்றன. இப்படி மரங்களின் பயன்களைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.  அந்த அளவுக்கு மனித வாழ்வில் மரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.  இத்தகைய சிறப்பு வாய்ந்த மரங்களில் இலுப்பை மரமும் ஒன்று.  கண்மாய், ஏரி, குளம், கரைகளிலும், பூங்கா போன்ற இடங்களிலும் சாலை ஓரங்களிலும் பரந்து விரிந்து காணப்படும் மரம்தான் இலுப்பை.
இது இந்தியா, இலங்கை, மியான்மர் நாடுகளில் அதிகம் வளர்கிறது.
இதன் இலை, பூ, காய், பழம், வித்து, நெய், பிண்ணாக்கு, மரப்பட்டை, வேர்ப்பட்டை என அனைத்து பாகங்களும் மருத்துவப் பயன் கொண்டது.
இலுப்பை மரத்திற்கு இருப்பை, சூலிகம், மதூகம் என்ற பெயர்கள் உண்டு.
குன்றா விலுப்பையின்பூ கூர்மதுரம் வாசனையாத்
தின்றாற் பயித்தியமுஞ் சேருங்காண்-மன்றலுறுத்
தார்குழலே பித்தசுரம் தாகந் தணிந்துவிடும்
வார்தயக்க மெய்தும் விழுத்து

- அகத்தியர் குணபாடம்
பொருள் – தீச்சுரம், நீர்வேட்கை நீங்கும். பித்த சுரம் நீங்கும்.
பால் சுரக்க
தாய்ப்பால் சரிவர சுரக்காத பெண்கள் பலவகையான மருந்து மாத்திரைகளை உட் கொள்வார்கள்.  இவை சில சமயங்களில் தாய்க்கும், குழந்தைக்கும் பாதிப்புகளை உண்டு பண்ணும்.
இந்த இன்னலைப் போக்க இலுப்பை உதவுகிறது. இலுப்பை இலையை மார்பில் வைத்துக் கட்டிவர தாய்ப்பால் நன்கு சுரக்கும்.
பூ
“ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை” என்பது பழமொழி.
இலுப்பைப் பூ இனிப்புச் சுவையுடையது.    இலுப்பைப் பூவை பாகாக்கி, சர்க்கரைக்குப் பதிலாக நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்துள்ளதை இப்பழமொழி மூலம் அறியலாம்.
இலுப்பைப்பூவில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.  இதனால் இலுப்பைப்பூவை தினசரி சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து கிடைக்கும்.  இரத்தச்சோகை மாறும்.
இலுப்பைப்பூவை நீரில் போட்டு காய்ச்சி அந்த நீரை அருந்தி வந்தால் இருமல், வெப்பத்தினால் உண்டான சுரம் நீங்கும்.
தீரா தாகம், நீர்ச்சத்து குறைபாடு போன்றவையும் நீங்கும்.
இலுப்பைப்பூவை அரைத்து பாலில் கலந்து அருந்தினால் இளைப்பு நீங்கும்.
காய்ந்த இலுப்பைப்பூவை வதக்கி வீக்கங்களுக்கு ஒற்றடமிட்டு வந்தால்  வீக்கம் மறையும்.
இலுப்பைப்பூவைக் காயவைத்து இடித்து வெல்லத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு உண்டான மாதவிலக்குக் கோளாறுகள், வெள்ளைப்படுதல் நீங்கும்.
இலுப்பைக் காய்
இலுப்பைக் காயை கீறினால் பால் வெளிப்படும்.  அந்த பாலை உடலில் தோன்றும் வெண் படலங்களின் மீது தடவினால்  வெண்படலம் விரைவில் குணமாகும்.
இலுப்பைப் பழம்
இலுப்பைப்பழம் நல்ல இனிப்புச் சுவை உடையது.  மலச்சிக்கலைப் போக்கும் தன்மை கொண்டது.
விதை
இலுப்பை விதையின் ஓட்டை நீக்கி உள்ளே உள்ள பருப்பை வதக்கி அரைத்து வீக்கங்களுக்கு கட்டினால் வீக்கம் விரைவில் குணமாகும்.
நெய்(எண்ணெய்)-பிண்ணாக்கு
இலுப்பையின் விதையில் எடுக்கப்படும் எண்ணெய் உடலுக்கு வன்மையும் வனப்பையும் கொடுக்கும்.
எண்ணெய் நீக்கப்பட்ட சக்கையே பிண்ணாக்கு எனப்படும்.  இதை ஊறவைத்து நன்றாக அரைத்து வடிகஞ்சியுடன் சேர்த்து உடலில் தேய்த்துக் குளித்தால் சரும வியாதிகள் நீங்கும்.  பழங் காலங்களில் இதனையே நம் முன்னோர்கள் பலர் சோப்பிற்குப் பதிலாக உபயோகித்து வந்துள்ளனர்.
கரப்பா னடருங் கடிசிரங்கு புண்ணும்
உரப்பா மிடுப்புவலி யோடுங் -கரப்பான்
பாகுமொழி மாதே பலமுண்டாந் துற்பலம்
ஏதகுமி லுப்பையி னெய்க்கே
-அகத்தியர் குணவாகடம்

பொருள் – இடுப்பு வலியைப் போக்கும், உடலுக்கு வலுவைக் கொடுக்கும்.  ஆனால் கரப்பானை உண்டுபண்ணும் தன்மை கொண்டது.
வேர்
இலுப்பையின் வேரை இடித்து நீரில் கலந்து கொதிக்கவைத்து குடிநீராக அருந்தி வந்தால் மேற்கண்ட நோய்கள் குணமாகும்.
குழந்தை மருத்துவம்3 முதல் 8 வயது வரை…
கருவில் வளரும் குழந்தை சீராக வளர தாயின் உணவு முறை சீராக இருக்க வேண்டும்.  அதுபோல் மனமும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதை கடந்த இதழ்களில் அறிந்தோம்.
மேலும் குழந்தை பிறந்து அதற்கு தாய்ப்பால் கொடுக்கும் வரை தாயின் உணவு முறையைப் பொறுத்தே குழந்தையின் ஆரோக்கியம் இருக்கும்.  ஆனால் குழந்தை வளர்ந்து 3 வயதுக்கு மேல் தான் உடல் வளர்ச்சியும், மன வளர்ச்சியும் அதிகரிக்க ஆரம்பிக்கும்.  எலும்புகள் வலுவடைய ஏற்ற தருணமும் இதுதான்.
மூன்று வயதுக்கு மேல் தான் குழந்தைகண்ணால் காண்பதை உட்கிரகித்துக் கொள்ளும்.  நன்றாகப் பேசும் பருவமும் இதுதான்.
இந்த வளரும் வயதில் உள்ள குழந்தைகள் எப்போதும் துறுதுறுவென்று ஓடிக்கொண்டே இருக்கும்.   ஒரு இடத்தில் உட்காரவைத்து உணவு கொடுப்பது என்பது மிகவும் கடினமானதாக இருக்கும்.
இதனால் சில தாய்மார்கள் அந்த குழந்தையின் பின்னாடியே ஒடி விதவிதமான விளையாட்டு காட்டி, வாயில் உணவு வைப்பது அந்த குழந்தைக்குத் தெரியாமல் ஊட்டிவிடுவார்கள்.
இது தவறான செயலாகும்.  இப்படியே பழக்கப்படுத்திவிட்டால், நாட்கள் செல்லச் செல்ல ஊட்டிவிட்டால்தான் சாப்பிட முடியும் என்ற நிலைக்கு குழந்தை வந்துவிடும்.  எனவே, குழந்தையை அனைவருடனும் அமர்ந்து சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டுவரவேண்டும்.   தனக்கு பசித்தால் தானே வந்து அமர்ந்து உணவு கேட்கும் வகையில் குழந்தையை பழக்கப்படுத்த வேண்டும்.
இந்த நேரத்தில்தான் குழந்தைக்கு நிதானமான எல்லா  முழு வளர்ச்சியும் உண்டாகும்.   குழந்தை ஓடியாடி விளையாடுவதால் உடல் வளர்ச்சி நன்றாக இருக்கும்.   மேலும், இந்த நேரத்தில் குழந்தைகள் தனக்குப் பிடித்த உணவை தேர்ந்தெடுத்து உண்ணுபவர்களாக இருப்பார்கள்.
அதற்காக ஒரே விதமான உணவுகளை தினமும் கொடுக்கக்கூடாது. அது உணவின்மீது குழந்தைகளுக்கு ஒருவித வெறுப்பை உண்டாக்கிவிடும். விதவிதமான உணவுகள் குழந்தைகளுக்கு உண்ணும் விருப்பத்தை உண்டாக்கும்.
எனவே,  இக்காலத்தில் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் உணவானது, அவர்களுக்கு பிடித்தமானதாகவும், வளர்ச்சிக்குத் தேவையான சத்துகளைக் கொடுக்கக் கூடியதாகவும், வயிறு நிறையும்படியும் இருப்பது  அவசியம்.
சத்தான உணவு என்றவுடன் சிலர் வைட்டமின் மாத்திரை, டானிக் என பலவற்றை வாங்கிக் கொடுக்கிறார்கள்.
இது முற்றிலும் தவறான நடவடிக்கை ஆகும்.  குழந்தைக்குத் தேவையான வைட்டமின், மினரல், தாதுப் பொருட்கள் அனைத்தும் உணவின் மூலம் கிடைத்தால் தான்  பக்க விளைவுகள் ஏதும் இல்லாத நீண்ட ஆரோக்கியம் கிடைக்கும்.
இயற்கையாகக் கிடைக்கும் கீரை, காய்கறிகளில் இத்தகைய சத்துக்கள் நிறைந்துள்ளன.  இவற்றை தவறாமல் குழந்தைகளுக்கு உணவாகக் கொடுத்து வந்தால் அவர்களின் வளர்ச்சி சீராக இருக்கும்.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்ற பழமொழியின்படி, இந்த ஐந்து வயதில் சாப்பிடக்கூடிய உணவுதான் ஐம்பதில் ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.  இதில் குறைபாடு கண்டால் ஐம்பதில் ஆரோக்கியத்திற்கு கேடு உண்டாகும் என அறியலாம்.  தினமும் மதிய உணவில் முருங்கைக்கீரை, ஆரைக்கீரை, தண்டுக்கீரை, கரிசலாங்கண்ணிக் கீரை, மணத்தக்காளிக் கீரை, இவற்றில் ஏதாவது ஒன்றைக் கொடுக்க வேண்டும்.
சிறு குழந்தைகளுக்குமுளை கட்டிய பயறு வகைகளை அவித்துக் கொடுப்பதுடன், உருளைக் கிழங்கையும் மசித்துக் கொடுப்பது நல்லது. அதுபோல் காய்கறி சூப் செய்து கொடுப்பது நல்லது.
இந்த வயதில் சில குழந்தைகள் எவ்வளவு சாப்பிட்டாலும், உடல் தேறாமல் நோஞ்சானாகக் காணப்படுவார்கள்.  இன்னும் சில குழந்கைள் சோர்வாகவும் புத்திக் கூர்மை இல்லாமலும் இருப்பார்கள்.
இவர்களுக்கு
ஆரைக்கீரை        – 1 கைப்பிடி
கொத்தமல்லி    – சிறிதளவு
மணத்தக்காளிக்கீரை    – 1 கைப்பிடி
கறிவேப்பிலை    – சிறிதளவு
பூண்டு        – 2 பல்
மிளகு        – 5
சின்ன வெங்காயம்    – 3
சீரகம்        – 1 ஸ்பூன்
சோம்பு        – 1 ஸ்பூன்
சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப்பாக்கி வாரம் இருமுறை கொடுத்து வந்தால் இளைத்த உடல் தேறுவதுடன், குழந்தைகள் வயிற்றுப் பூச்சி நீங்கும்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...