May 22, 2012

தமிழ் மக்களின் உணர்வோடும் உள்ளத்தோடும் கலந்த விழாதான் பொங்கல் திருவிழா.
கடவுள் எனும் முதலாளி.. கண்டெடுத்த தொழிலாளி..
எனப் போற்றப்படும் விவசாயி தங்களின் உழைப்பால் நிலத்தைத் திருத்தி ஆழ உழுது நெல் பயிரிட்டு வளர்த்து அறுவடை செய்த பின் தனக்கு உதவியாக இருந்த இயற்கையை வழிபட்டு
வணங்கும் திருநாள் தான் பொங்கல் திருநாள்.
தைத்திங்கள் முதலாம் நாள் தான் பொங்கல் திருநாள்.  அந்நாளில் தான் அறுவடை செய்த புது அரிசியைக் கொண்டு பொங்கலிட்டு இயற்கையை வழிபடுவார்கள்.
பொங்கல் திருநாளுக்கு முன்பே பழைய பொருட்களை சுத்தம் செய்தும், தேவையற்ற பொருட்களை நீக்கியும், வீடுகளை சுத்தம் செய்தும், புது வர்ணம் தீட்டியும் அழகு பார்ப்பார்கள்.
இந்த நிகழ்வு ஒரு சம்பிரதாய நிகழ்வாக இருந்தாலும் கூட அது ஒரு மருத்துவத்தோடு சம்பந்தப்பட்டதாகவும் உள்ளது.
தை மாதமானது முன்பனிக் காலமாகும்.  மழைக்காலம்  முடிந்த பின்பு பனிக்காலம் ஆரம்பிப்பதால் புதுவகையான பூச்சிகள், பாக்டீரியாக்கள், வைரஸ்கள் நோய்களை உண்டாக்கும் கிருமிகள் பல்கிப் பெருகும்.  இதனால் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் தொற்று நோய்களின் தாக்குதல் அதிகரிக்கும்.
வீட்டின் உள்ளேயும், வீட்டைச் சுற்றிலும் சுத்தம் செய்து, வர்ணம் பூசுவதால் மேற்கண்ட நோய்க் கிருமிகள் அழியும்.
பழங்காலங்களில் மாட்டுச் சாணத்தைக் கொண்டு வீட்டின் தரையிலும், சுவர்களிலும் பூசுவார்கள்.  பொதுவாக மாட்டுச்சாணம் ஒரு சிறந்த கிருமி நாசினியாகும்.
பொங்கல் அன்று வீடுகளில் அரிசிமாவுக் கோலம் இடுவார்கள்.  இவை எறும்புகளுக்கு உணவாகப் பயன்படுகின்றது.  பொதுவாக எறும்புகள் எத்தகைய நோய்களையும் ஏற்படுத்துவதில்லை.  ஆனால் அவை கண்ணுக்குத் தெரியாத பல நுண்ணுயிர்களை அழிக்கின்றன.
மாவிலைத் தோணரம் கட்டுகின்றனர்.  மாவிலை ஒரு கிருமி நாசினியாகும்.  பனிக்காலத்தில் உண்டாகும் நோய்களைத் தடுக்கும்.  சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்கும் கிருமிகளை அழிக்கும். அதுபோல் மஞ்சள் கலந்த நீரும் நோய் தடுக்கும் பொருளாகும்,.
அதுபோல் பொங்கல் அன்று பொங்கல் வைத்து முடிந்தபின் ஒருவருக்கொருவர் அன்பு பரிமாறிக்கொள்வார்கள்.  இது மன அழுத்தத்தை நீக்கி மனதிற்கு உற்சாகத்தை அளிக்கும் செயலாகும்.
பொங்கல் திருவிழா ஏதோ விழா என நினைத்துவிடாதீர்கள்.  அது உள்ளத்தையும், உடலையும் செம்மைப்படுத்தும் விழாவாகும்.
பொங்கலை நாமும் இனிதே கொண்டாடி ஆனந்தம் அடைவோம். ஆரோக்கியம்  பெறுவோம்.

இந்திய மருத்துவத்தை வளர்த்து எடுப்பதற்காக உருவாக்கப்பட்ட  சென்ட்ரல் கவுன்சில் ஆப் இந்தியன் மெடிசன்  (Central Council of Indian Medicine)  அமைப்பு தற்போது சென்ட்ரல் கன்ப்யூஷன் ஆப் இந்தியன் மெடிசன் (Central Confusion of Indian Medicine) ஆக மாறிவிட்டது.
இதன் உறுப்பினர்கள் இந்திய மருத்துவத்திற்கான கல்வித் துறையை எப்படியெல்லாம் சீரழித்தார்கள் என்பதை கடந்த இதழில் விரிவாகப் பார்த்தோம்.
நூற்றாண்டுகளாக இயங்கிவந்த பாரம்பரிய இந்திய மருத்துவ கல்லூரிகளை மூடியதோடு அல்லாமல் CCIMல் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் தேவையற்ற விதிமுறைகளைப் புகுத்தினர்.
ஒரு கல்லூரிக்கு ஆய்வு நடத்த வரும்போது இவர்கள் எழுதும் அறிக்கை வேறு.  பின்னர் சமர்ப்பிக்கும்  அறிக்கை வேறு மாதிரியாக இருக்கும்.  இதனால் எந்தக் காரணமும் இன்றி கல்லூரிகள் இயங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. இப்படி பலவாறாகவும் இந்திய மருத்துவத்தை நலிவுறச் செய்து மாணவர்களை படிக்க விடாமல் தடுத்து வருகின்றனர்.
இத்தனைத் தடைகளையும் தாண்டி இந்திய மருத்துவத்தை படிக்க விரும்பும் மாணவர்களை நிம்மதி இழக்க வைத்து தாங்கள் சேர்ந்திருக்கும் கல்லூரிக்கு அனுமதி கிடைக்குமா கிடைக்காதா என்று அவர்களைத் தவிக்க வைத்து வேடிக்கை பார்க்கிறது CCIM.
அதனால்தான் Central Council of Indian Medicine, Central Confusion of Indian Medicine BP ஆக மாறிவிட்டது என்றோம்.
தமிழகத்தைப் பொருத்தவரை இந்திய மருத்துவத்திற்கான கல்வி எந்த வகையிலும் வளர்ச்சியடைந்துவிடாமல் தடுக்க CCIMஉறுப்பினர்கள் மிகக் கவனமாகவே செயல்பட்டு வருகிறார்கள்.

இந்திய துணைக்கண்டத்தின் மரபுவழி மருத்துவத்தை பெரியளவில் வளர்த்தெடுப்பதற் கென உருவாக்கப்பட்ட CCIM அதை உருக்குலைத்து  ஒன்றும் இல்லாமல் குழப்பியடித்து வருகிறார்கள்.
இந்திய கலாச்சாரத்தின் முக்கியக் கூறுகளான சித்தா, ஆயுர்வேதா மருத்துவ முறைகளை முறையான கல்வி அமைப்பிலிருந்து வெகுதூரம் விலக்கி வைக்க வேண்டும் என்பதே தங்களது தணியாத லட்சியமாகக் கொண்டு CCIM உறுப்பினர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.இது இப்போது நாடறிந்த உண்மையாகிவிட்டது.
இந்திய மருத்துவத் துறையின் பட்டம் பெற்ற ஆசிரியர்களும் நிம்மதியாக பணிபுரிய முடியாத நிலையை இந்த “கன்ப்யூஷன் கவுன்சில்” உறுப்பினர்கள்  உருவாக்கிவிட்டார்கள்.
இந்த உறுப்பினர்கள் யாரும் அனாட்டமி கேடவர் (Anatomy Cadaver) முறையில் முழுமையான மருத்துவ கல்வியை பயின்றவர்கள் இல்லை.  வெறும் ஏட்டுச் சுரைக்காயைப் படித்துவிட்டு தங்களை மருத்துவ வல்லுநர்களாக காட்டிக்கொள்ளும் இந்த உறுப்பினர்கள் இந்திய மருத்துவத்தை ஆழமாக கற்க விரும்பும் மாணவர்களை படிக்க விடாமல் தடுத்து வருகிறார்கள்.  இவர்கள் கல்லூரிகளுக்கு ஆய்வு செய்ய வரும்போது அனாட்டமி பற்றி தெரியாத காரணத்தால் அனாட்டமி ஆய்வுக் கூடத்திற்கு செல்லாமலேயே ஆய்வுகளை முடித்துவிட்டு அனாட்டமி வசதி இல்லை என ஆய்வறிக்கை சமர்ப்பித்தவர்களும் தமிழகத்தில் இருக்கிறார்கள்.
இத்தகைய இந்திய மருத்துவத்துக்கான கவுன்சிலால் வெறும் ஏட்டுச் சுரைக்காய் மருத்துவர்கள் மட்டுமே உருவாக்கப்பட வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கிறார்கள்.
இந்திய மருத்துவத்தில் ஆழ்ந்த அனுபவமும், ஞானமும் பெற்று திறமையான மருத்துவர்கள் உருவாகிவிடக்கூடாது என்பதில் இவர்கள் கவனமாக இருப்பதால்தான் நவீன கட்டமைப்பு மற்றும் வசதிகள் உள்ள இந்திய மருத்துவத்திற்கான கல்லூரிகளை வளரவிடாமல் முட்டுக்கட்டை போடுகிறார்கள்.
மேலும், தமிழகத்தில் வேறு புதிய இந்திய மருத்துவத்திற்கான கல்லூரிகள் உருவாகாமல் போனதிற்கு இந்த இஇஐM உறுப்பினர்களான புண்ணியவான்களே காரணம்.
ஆங்கில மருத்துவத்திற்கு ஒரு கேதன் தேசாய் என்றால், இந்திய மருத்துவத்திற்கு இஇஐM-ல் அதிக உறுப்பினர்கள் கேதன் தேசாய்களாக இருக்கிறார்கள்.
கண்களை விற்று சித்திரம் வாங்கும் இந்த கன்ப்யூஷன் கவுன்சில் (CCIM) உறுப்பினர்ளின் அட்டூழியத்திற்கு விடிவுதான் எப்போது…
நாற்பத்தைந்தைக் கடந்த வயது.
வாழ்வின் துயரங்கள் அனைத்தும் சுவடுகளாக பதிந்ததைப் போல கருத்துப்போன முகமும், உடலும்.
அவரைப் பார்த்த உடனேயே மிகவும் நொந்துபோய் இருக்கும் மனிதர் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது.  நண்பர் ஒருவர் மூலம்  கேள்விப்பட்டு என்னைப் பார்க்க வந்ததாகக் கூறினார்.
அவருடய குடும்ப நிலவரங்கள் குறித்து விசாரித்தேன்.
எல்லாமே பாதிக்கிணறு தாண்டிய நிலையில் இருந்ததை அறிய முடிந்தது.  பிள்ளைகளின் கல்வி, திருமணம், எல்லாமே இனிமேல்தான் நடக்க வேண்டும்.
குடும்பத்தின் ஒட்டுமொத்த சுமையும் அவர் தோளில்தான்..  அந்த சோர்வும் வலியும் அவரது உடல்மொழி மூலமாக வெளிப்பட்டது.
ஒரு மருத்துவர் என்ற முறையில் நான் அவருக்கு என்ன செய்ய வேண்டுமென்று கேட்டேன்.
அவர் தனது கருத்துப்போன கால்களை என்னிடம் காட்டினார்.
நீண்ட நேரம் நின்றுகொண்டிருக்கும் வேலை அவருடையது போலும்.  அப்படி நிற்கும்போது முழங்காலுக்குக் கீழே உடலில் உள்ள தேவையற்ற நீர் இறங்கிக் கொள்கிறது.
காலப்போக்கில் தோல் நோயாகவும், நரம்புகள் தொடர்பான நோயாகவும் இந்த நீரின் தொல்லைகள் வெளிப்படுகின்றன.
இவரைப் பொருத்தவரை உடலின் நிறத்திற்கு சற்றும் தொடர்பில்லாமல் கால்பகுதி கறுத்து காணப்பட்டது.  கடுமையான வலி ஏற்படுவதாகவும் கூறினார்.
மருத்துவர்களிடம் காண்பித்த போது, சர்க்கரை நோய்தான் காரணம், காலில் கறுத்து புண்  ஏற்பட்ட கட்டை விரலை வெட்டி எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதைக் கேட்டு பயந்துபோய் என்னிடம் வந்துள்ளார்.
இவருக்கு காலில் ஏற்பட்ட புண்ணில் நாற்றம் வீச ஆரம்பித்து அவருடைய நண்பர்கள் கூட அருகில் வராமல் ஒதுங்கிப் போனார்கள் என்று வேதனையோடு கூறினார்.  இதனாலேயே உற்றார் உணவினர் விசேஷ நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் மனமுடைந்து ஒதுங்கியே இருப்பதாகக் கூறினார்.
நான் அவருக்கு தைரியமூட்டி, வர்மப் பரிகார முறைப்படியான சிகிச்சையைத் தொடர்ச்சியாக ஆறு மாதங்கள் அளித்தேன்.
இப்போது அவர் பூரண குணமடைந்து தனது பணிகளை உற்சாகத்துடன் பார்த்து வருகிறார்.

பாதி வழியிலேயே தனது வாழ்க்கைப் பயணம் மட்டுமின்றி, குடும்பமும் சிதைந்து போக இருந்த நிலையில், என்னை சந்தித்ததால், பிழைத்துக் கொண்டதாக அவரும் அவரது மனைவியும் நா தழுதழுக்க எனக்கு நன்றி கூறினர்.
திண்ணை கிளினிக்
எதிர்வீட்டுக் கூரையில்  படர்ந்து கிடந்த சுரைக்காய் கொடியையும், அதில் காய்த்துச் சரிந்த பசுமையான சுரைப் பிஞ்சுகளையும் பார்த்தபடியே திண்ணையில் அமர்ந்திருந்தார் வைத்தியர்.
ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பண்டைக்காலப் பழமொழியை சரியாக கடைப்பித்து வந்தவர்கள் தமிழர்கள்.
வீட்டுக்கு வீடு முன்னும் பின்னுமாக உள்ள தோட்டப்புறத்தில் அவரை, புடலை, பாகற்காய், பீர்க்கன்காய் போன்ற பயிர்க் கொடிகளை நட்டு அவை படர்வதற்கு பந்தலிட்டு  வளர்க்கும் மரபு நமது கிராமப்புறங்களில் தொன்றுதொட்டு  இருந்து வருகிறது.
ஆனால், தற்போதெல்லாம், கிராமப் புறங்களில் கூட தோட்டத்திற்கென்று இடம் ஒதுக்காமலேயே வீடுகளைக் கட்டுகிறார்கள்.  வாசலில் மண்ணையே பார்க்க முடிவதில்லை.  எல்லாம் சிமெண்டுதான்.. கான்கிரீட் தளம்தான்..  மரம் , செடி, கொடி இவை எல்லாமே மனிதர்களுக்கு வேண்டாதவையாக மாறிவிட்டது.
அடுத்த தலைமுறைக்கு பழைய ஓவியங்களில் தான் இதுபோன்ற காட்சிகளையெல்லாம் காட்ட முடியுமோ …
அழிந்துவரும் கிராமப்புற பசுமைக் கலாச்சாரம் குறித்து கவலையுடன் ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருந்த வைத்தியரின் கவனம் அருகில் வந்து அழைத்த குரலால் சிதறியது.
திரும்பிப் பார்த்தபோது  தங்கராசு தனது மகனுடன் நின்றிருந்தார்.
“என்னய்யா தங்கராசு.. ஆளப் பாத்து ரொம்பக் காலமாச்சு.. எப்பிடி சௌரியமெல்லாம்.. இது யாரு.. உன் பையனா..” என்று வைத்தியர் தமது வரவேற்பை கேள்விகளுடன் தொடங்கினார்.
“ஆமா வைத்தியரய்யா.. இவன் என் பையன்தான்..  பக்கத்துல இருக்குற பட்டணத்துல ஒரு கம்பெனியில விற்பனை பிரதிநிதியா வேலை பாக்குறான்…
…மோட்டார் சைக்கிள்ளயே எந்நேரமும் ஊரைச் சுத்தற வேலை..”
“இப்ப என்னாச்சுன்னா,  அவனால காலையில எழுந்து நிமிர்ந்து நிக்க முடியல..   இடுப்புப் பகுதில ஒரே வலி.. ஆங்கில மருத்துவர்கிட்ட போனா, தொடர்ந்து மோட்டார் சைக்கிள் ஓட்டுறதால முதுகெலும்பு பாதிச்சிருக்குன்னு பயமுறுத்துறாங்க..  அதான் எதாச்சும் வைத்தியம் சொல்லுவிங்கன்னு   உங்ககிட்ட கூட்டி வந்திருக்கேன்…”
தங்கராசு சொன்ன விவரங்களை பொறுமையுடன் கேட்ட வைத்தியர், அவரது மகனின் கையைப் பிடித்து பரிசோதித்தார்..  பின்னர் முதுகுப் பகுதியையும் தொட்டுப் பார்த்து சோதித்தார்.
“மனுசன்கிறவன் இயற்கைய அனுசரிச்சு வாழ்வதற்காக படைக்கப்பட்ட ஜீவராசி..”
“ஆனா, எந்த மனுசனாவது இப்ப அந்தமாதிரி வாழுறானா… எல்லாமே இயற்கைக்கு எதிரான வாழ்க்கை முறை…”
“உடம்புங்குறது இரும்பால ஆனதில்ல..  ரத்தமும், சதையும், எலும்புமா மென்மையான  உயிர்க்கூறுகளாள ஆனது.. அத பாதுகாப்பா வச்சிக்கிறது நம்ம கையிலதான் இருக்கு…”
“ஆனா இதப்பத்தியெல்லாம் யாரும் கவலப்படுறதே இல்ல…  ஒரு நாளைக்கு 24 மணி நேரத்துல 12.. 14… மணி நேரம்  வண்டியிலயே சுத்துனா அந்த உடம்பு என்னத்துக்குப்பா ஆகும்..”
“நாமதான இதெல்லாம் புரிஞ்சி நடந்துக்கனும்.   சரி போகட்டும்… உன் தொழில் அப்படியாகிப் போச்சு…”
“இருந்தாலும், இடைவெளி விடாம வண்டி ஓட்டுறதக் குறைச்சிக்க..”
“நீட்டி.. நிமிந்து… நிம்மதியா படுத்து ஓய்வெடுக்குறதுக்கு நேரத்த ஒதுக்கு..”
“உனக்கு ஏற்பட்டுருக்குற பிரச்சனைக்கு முதல் வைத்தியம் இதுதான்…”
“அதோட நாட்டு மருந்துக் கடையில கிடைக்கிற அஷ்ட சூரணத்த வாங்கி காலையிலயும் சாயந்திரமும் 1 தேக்கரண்டி அளவு எடுத்து வெந்நீர்ல கலந்து  குடிச்சிக்கிட்டு வா.. இதனால வாயுப்பிடிப்பு, சதைப்பிடிப்பு, இடுப்புவலி, முதுகுவலி எல்லாம் படிப்படியா குணமாயிடும்..”
“வலி இருக்குற இடத்துல காயத்திருமேனி தைலம்  அல்லது வாத நாராயண தைலம் வாங்கி பூசி பிறகு வெந்நீர்ல குளிச்சிக்கிட்டு வா.. இதுவும் நாட்டு மருந்துக் கடையில கிடைக்கும்..”
“நல்லா ஓய்வெடு…”
“பொதுவா இந்த இடுப்பு வலி வர்றதுக்கு மலச்சிக்கலும் ஒரு முக்கிய காரணம்.  அதனால மலச்சிக்கல் இல்லாம பாத்துக்க.. தண்ணி நெறையா குடி..  வண்டி ஓட்டுறப்ப  களைப்பா இருக்குன்னு ரசாயன குளிர்பானங்கள வாங்கி குடிக்காம இளநீர், பழ ஜூஸ்கள வாங்கி சாப்பிடு… அதுதான் உடம்புக்கு நல்லது..”
மருந்தைக் கேட்டுக்கொண்ட தங்கராசு வைத்தியருக்கு நன்றி கூறிவிட்டு தனது மகனுடன் மருந்து வாங்க புறப்பட்டார்.

மனிதனுக்கு உண்டாகும் கொடிய நோய் என்பது அவரவரர் தலைவிதியோ அல்லது ஜீன்களில் ஏற்படும் மரபணு மாற்றமோதான்  காரணம் என்று எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில்,  சில வாழ்வியல் காரணிகள் தான் இத்தகைய நோய்கள் வருவதற்கு முக்கிய காரணங்கள் என லண்டன் பல்கலைக் கழக பேராசிரியர் மேக்ஸ் பார்கின் தலைமையிலான விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.   அவை,
புகையிலை போடுவது, புகைப்பழக்கம், மதுபானப் பழக்கம், உடலின் கூடுதலான எடை, போதிய அளவு பழங்கள், காய்கறிகள் சாப்பிடாமல் இருப்பது, போதுமான அளவு சூரிய ஒளி படாமல் இருப்பது, போதிய உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது, தாய்ப்பால் புகட்டாமல் இருப்பது, ஹார்மோன் மருந்துகளை அதிகம் உட்கொள்வது, வேகாத மாமிசம் உண்பது, போதிய நார்ச்சத்துள்ள  உணவுகளை உண்ணாமல் இருப்பது, அதிக உப்பு சேர்த்து சாப்பிடுவது..

இவைதான் மனிதனை தாக்கும் கொடிய நோய்களின் ஆரம்பக் காரணியாகும்.    அதற்கு நாம் செய்ய வேண்டியது சில வாழ்வியல் முறைகளை கடைப்பிடிப்பதுதான்.
இந்த வாழ்வியல் முறைகளால்  நாம் கொடிய நோய்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.
இதற்கு சில வாழ்வியல் மாற்றங்கள் இதோ..
· அதிகாலையில் சூரியயோதயத்திற்கு முன் எழுந்திருக்க வேண்டும்.
· எழுந்தவுடன் காலைக்கடன்களை முடித்துவிட வேண்டும்.
· காலை, மாலை தினமும் 20 நிமிடங்களாவது அவசியம் எளிய உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.
அவற்றில் சில..
நடத்தல்,  20 முறை குனிந்து  நிமிர்தல், 20 முறை நன்றாக உட்கார்ந்து எழுதல், நின்ற இடத்தில் மூன்று நிமிடங்கள் ஓடுவது, 2 நிமிடங்கள் நின்ற இடத்தில் குதித்தல்,  50 முறை கயிற்றாட்டம் (ஸ்கிப்பிங்) போடுதல், கை, கால் விரல்களை நீட்டி மடக்குதல், இது தவிர, மூச்சுப் பயிற்சி 5 நிமிடம் கண்களுக்கு பயிற்சி 3  நிமிடம்..
· தகுந்த யோகாசனங்களை முறைப்படி கற்று செய்ய வேண்டும்.
· நல்ல காற்றோட்டமும், வெளிச்சமும் உள்ள வீடுகளில் வசிக்க வேண்டும்.
· உறங்குவதும், நல்ல காற்றோட்டமுள்ள அறையாக இருக்க வேண்டும்.
· பெரும் தீனியை ஒழிக்க வேண்டும். உணவருந்தும்போது பேசக் கூடாது.  மௌனமாக நன்றாக மென்று, சுவைத்து சாப்பிட வேண்டும். மாமிசத்தையும், அதிக உப்பு, காரத்தையும் குறைக்க வேண்டும்.
· தினசரி ஏதேனும் ஒருவேளை பச்சையாக உட்கொள்ளும் பழங்கள் காய்கள், பழச்சாறுகள் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும்.  மற்ற இரு வேளைகளில் வழக்கமான சமைத்த உணவுகள் உட்கொள்ளலாம்.  இடைப்பட்ட வேளையில் நொறுக்குத்தீனி தவிர்க்கப்பட வேண்டும்.
· நிற்கும்போதும் நடக்கும்போதும், உட்காரும் போதும் நன்கு நிமிர்ந்து இருக்க வேண்டும்.
· பகல் உணவை விட இரவு உணவு அளவு குறைவாகவும், இரவு 8 மணிக்குள்ளும் முடித்துக்கொள்ள வேண்டும்.  காலம் கடந்து சாப்பிடக் கூடாது.
· இரவில் சாப்பிட்டதும் சற்று உலாவிவிட்டு தூங்கச் செல்ல வேண்டும்.
· உணவருந்திய உடனே வேலைகள் செய்வதோ, குளிப்பதோ கூடாது.
· ஏழு மணி நேரத்திற்கு குறையாமல் தூங்க வேண்டும்.
· உப்பு, சர்க்கரை, காரம், புளிப்பு, முதலியவைகளை இயன்ற அளவு குறைத்து சாப்பிட வேண்டும்.
· மனதை அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
· தினமும் போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும்.
· தலைவலி, காய்ச்சல், முதுகுவலி, மூட்டுவலி, வயிற்றுவலி இவைகளுக்கு கடையில் கிடைக்கும் மருந்துகளை சாப்பிடக் கூடாது. தேவையற்ற ஹார்மோன் மாத்திரைகள் உட்கொள்ளக்கூடாது.  மருத்துவர் ஆலோசனையின் பேரில் மட்டுமே மாத்திரைகளை உபயோகிக்க வேண்டும்.
· ஆறு மாதத்திற்கு ஒருமுறை மலைப் பிரதேசங்களுக்குச் சென்று தூய காற்றை நுரையீரல் முழுக்க நிரப்பிக் கொண்டு வாருங்கள்.
இத்தகைய வாழ்வியல் முறைகளை கடைபிடித்தால், நோய் என்னும் அரக்கனை அண்ட விடாமல் தடுக்கலாம்.
கற்ப மூலிகை-சருமத்தைக் காக்கும் குப்பைமேனி..


மூலிகைகள் என்றால் ஏதோ பெரிய மலைக்காடுகளில் காணப்படுவது என பலர் நினைக்கலாம்.  மலைக்காடுகளிலும் மூலிகைகள் வளர்கின்றன.  அதேபோல் நம் வீட்டருகே, சாலை ஓரங்களிலும், வீதிகளிலும், தோட்டங்களிலும் வயல் வரப்புகளிலும் ஏராளமன மூலிகைகள் வளர்கின்றன. நாம் களைகள் என்று ஒதுக்கும் புல், பூண்டு, செடி, கொடிகள் அனைத்தும் மாபெரும் மருத்துவத் தன்மை கொண்டவை.

மூலிகைகள் ஒவ்வொன்றுக்கும் தனித் தன்மையான மருத்துவக் குணங்கள் உள்ளன.  அவற்றில் கற்ப மூலிகைகள் என பல மூலிகைகள் உள்ளன.  அதில் குப்பைமேனியும் ஒன்று.
குப்பைமேனி பூண்டு இனத்தைச் சார்ந்தது.  இவை தோட்டங்களிலும், சாலை ஓரங்களிலும் வளர்ந்திருப்பதைக் காணலாம்.  இது இந்தியா முழுவதும் வளரும் செடியாகும்.
குப்பைமேனியை மார்ஜலமோகினி என வடமொழி நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.  எனினும் தமிழில் கூறப்பட்டது போல் குப்பைமேனியின் மருத்துவப்  பயன்கள் குறிப்பிடப்படவில்லை.
மாற்றடுக்கில் அமைந்த பல அளவுகளில் உள்ள இலைகளையும், இலைக்காம்பு இடுக்கிலமைந்த பூக்களையும்  கொண்டது.  இதற்கு அரி மஞ்சரி, பூனைவணங்கி, மேனி என்ற பல பெயர்கள் உண்டு.

Tamil    – Kuppaimeni

English    – Indian acalypha
Telugu    – Kuppi-Chettu
Malayalam    – Kuppa-meni
Sanskrit    – Arittamajarie
Botanical name     – Acalypha indica
இதன் இலை, வேர், சமூலம், (முழுச் செடியும்) மருத்துவப் பயன்பாட்டில் உள்ளது.
தந்தமூ லப்பிணிதீத் தந்திருபுண் சர்வவிடம்
உந்துகுன்மம் வாதம் உதிரமூ – லந்தினவு
சூலஞ்சு வாசம் தொட்ர்பீ சங்கபம்போம்
ஞாலங்கொள் மேனியத னால்

தேரையர் குணபாடம்
பொருள் -  குப்பைமேனி இலையால், பல்நோய், தீச்சுட்டப் புண், பயிர் வகையின் நஞ்சு, வயிற்றுவலி, வளிநோய், மூலம், நமைச்சல், குத்தல், இரைப்பு, மூக்குநீர் பாய்தல், கோழை போன்றவை தீரும்.
வயிற்றுப் புழுக்கள் நீங்க
குப்பைமேனியிலையை நிழலில்  உலர்த்திப் பொடித்து 1/2 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் வயிற்றுப் புழுக்கள், மலப்புழுக்கள் வெளியேறும்.  நீரில் கலந்தும் கொடுக்கலாம்.  ஆறு மாதத்திற்கு ஒருமுறை குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது.
பெரியவர்கள் குப்பைமேனி இலையின் சாறு எடுத்து இலேசாக சூடாக்கி 15 மி.லி. கிராம் அளவு அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் வெளியேறும்.
சொறி, சிரங்கு  நீங்க
குப்பைமேனி இலையுடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து உடலெங்கும் பூசி 15 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் சொறி, சிரங்கு மாறி சருமம் பொலிவுபெறும்.
இலைமேனி யியறிவிளக் கெண்ணெயின்மெய்
யிலயட்டியிலை மேனியை யா

அகத்தியர் குணவாகடம்
பொருள் – குப்பைமேனி இலையை உணவு முறையாகச் சாப்பிட்டு வந்தால் திமிர்வாதமான நரம்பு பலவீனம், உடல் மதமதப்பு, கை, கால் மதமதப்பு போன்றவை நீங்கும்.
குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து புண், நச்சுக்கடி இவைகளுக்கு பற்று போடலாம்.  தீப்பட்ட புண்களுக்கு பூசினால் புண் விரைவில் குணமாகும்.
குப்பைமேனி இலையை ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி ஒருமண்டலம் கற்ப முறைப்படி உண்டு வந்தால் வாய்வுப்பிடிப்பு  நீங்கும்.  சரும நோய்கள் அகலும். சுவாச நோய்கள் நீங்கும்.  குடல் புழுக்கள்  வெளியேறும்.  மூல நோயின் தாக்கம் குறையும்.
குப்பைமேனி இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் படுக்கைப்  புண் மீது கட்டி வந்தால் புண் விரைவாக ஆறிவிடும்.
குப்பைமேனி இலைச் சாற்றுடன் சுண்ணாம்பு சேர்த்து குழைத்து பூசினால் படர்தாமரை, சொறி, பூச்சிக்கடி, காணாக்கடி முதலியவை குணமாகும்.
மூலம், பவுத்திர நோய்களுக்கு குப்பைமேனி சிறந்த மருந்தாகும்.
குப்பைமேனி சமூலத்தை எடுத்து பொடியாக்கி நெய்யில் கிளறி லேகியமாக்கி வைத்துக்கொண்டு ஒரு மண்டலம் உண்டு வந்தால் 8 விதமான பவுத்திர நோய் தீரும் என தேரையர் காண்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.
10 கிராம் குப்பைமேனி வேரை மென்மையாக அரைத்து நீரில் கரைத்து கஷாயம் செய்து குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற விஷநீர் வெளியேறும்.
குப்பைமேனி  செடிகளை குப்பையென எறியாமல் தேவைக்கேற்ப பயன்படுத்தி நலம் பெறுவோம்.

வர்மத்தின் மர்மங்கள் 


அகத்தியர்பெருமனால் வகுத்துரைக்கப் பட்ட, மாபெரும் தத்துவங்களைக் கொண்ட அடங்கல் முறைகள்  அனைத்து நோய்களையும் 18 அடங்கலாக ஒடுக்கி, அதற்கு தீர்வு காணும் முறைகள்தான்  அடங்கல் முறைகள். இந்த 18 அடங்கல்களுள் 108 வர்மத்தின் செயல்பாடுகளும் அடங்கியுள்ளன.  இது இந்திய மருத்துவ முறைகளில் மாபெரும் வலிமையும், தீர்க்கமும் கொண்ட சிகிச்சை முறையாகும்.

உடலில் உள்ள அங்க அவையங்களில் அடங்கி ஒடுங்கியிருக்கும் அற்புதமான சக்தி நிலை, ஒடுங்கியிருக்கும்  உயிர்நிலை ஓட்டத்தினை அகத்தியர் பெருமான் தெள்ளத் தெளிவாகக் கூறியிருப்பதன் காரணம், மனிதர்களுக்கு உண்டாகும் எந்த ஒரு நோய்க்கும், அது சம்பந்தப்பட்ட அடங்கல் பாதித்திருக்கும் என்பதுதான் உண்மை நிலை என்பதை கண்டறிந்த அகத்தியர் அடங்கல் நிதானம் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு நோயைக் கணித்துக் கூறுவதற்கு முன் அந்த நோய்க்கு தொடர்புடைய வர்மப் புள்ளிகள், அடங்கல்கள்,  எவ்வாறு பாதிக்கப் பட்டிருக்கிறது என்பதை ஒரு மருத்துவர் கவனிக்க வேண்டியது முதல் கடமையாகும்.
பொதுவாக  அடங்கல்கள் வாதம், பித்தம், கபம் என்ற முக்குற்றத்தின்  உடற் கூறுகளுக்கு தகுந்தவாறு அந்த அடங்கல்களின் பரிணாம செயல் பாடுகளிலிருந்து அறிந்து கொள்வார்கள்.
எப்படி கல்லீரல் பாதித்தால், உள்ளங்கை அடங்கல் பாதித்திருக்கிறது என்று ஒரு வர்ம மருத்துவரால் கணித்துக் கூற முடிகிறதோ,  அதுபோல், நோயின் குறிகுணங்களைக் கொண்டு எந்த அடங்கல் பாதித்திருக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடியும்.
இதிலிருந்து நோய்களுக்கும் அடங்கல் களுக்கும் நேரடித் தொடர்பு இருப்பது உண்மையாகிறது.
பழங்காலத்தில் வர்ம மருத்துவர்கள்  எந்தக் கருவிகளும் இல்லாமல், அடங்கல் மூலம் நோய்களையும், நோய்கள் மூலம் அடங்கலையும் கணித்து  அதற்குத் தகுந்தவாறு மருத்துவம் செய்து வந்துள்ளனர்.
இன்றும் வர்ம மருத்துவர்கள் நோயின் குறிகுணங்களை அடங்கல் பரிகார முறையில் நோய்களைக் கணித்து அதற்குத் தகுந்தவாறு, மருந்து மாத்திரைகள் கொடுத்து, நோய்களைத் தீர்த்து  வருவது காலம் அறிந்த உண்மை.
சில சமயங்களில் மனம் பாதிக்கும் அளவுக்கு நிகழ்வுகள் ஏதேனும் நடந்தால் அதனாலும் அடங்கல்கள் பாதிக்கப்பட்டு அதுவே நோயாகவும் மாறுகிறது.  அதுபோல், புறச் சூழ்நிலைகளாலும், அடங்கல் பாதிக்கப் படலாம்.
இப்படி மனிதர்களுக்கு மட்டுமின்றி அனைத்து உயிரினங்களுக்கும் ஏற்படும் இனம் புரியாத நோய்களுக்கு அடங்கல் முறைகள் மூலம் அவற்றின் பாதிப்புகளைக் கண்டறிந்து குணப்படுத்துவதே வர்ம மருத்துவத்தின் தனிச் சிறப்பாகும்.
மேலும், அடங்கல்கள் பற்றி வரும் இதழில் விரிவாக அறிவோம்.
கீரையோ கீரை… முளைக்கீரை…

பொருள் – உடல் மெலிவைப் போக்கும்.  குழந்தைகளுக்கு சளியைப் போக்கும்.  உடலுக்கு வலு கொடுக்கும்.  பசியைத் தூண்டும்.  நாவுக்கு சுவையளிக்கும்.  உடல் சூட்டைத் தணிக்கும்.
கீரைகள் மனிதனை வாழ்விக்க வந்த காமதேனு என்றே சொல்லலாம்.  கீரைகளின் பயன்களை அளவிடமுடியாது.  பழங்காலத்தில் நம் முன்னோர்கள் கீரைகளை அதிகம் உண்டு வந்ததால் நோயின்றி ஆரோக்கியமாக வாழ்ந்து வந்துள்ளனர்.  இவ்வகைக் கீரையில் முளைக்கீரையும் ஒன்று.
முளைக் கீரை தோட்டங்களில் வளர்க்கப்படும் கீரையாகும். இக்கீரையை இளங்கீரை என்றே சித்தர்கள் குறிப்பிடுகின்றனர். முளைக்கீரை பச்சை மற்றும் சிவப்பு நிறங்களில் காணப்படும். முற்றிய முளைக்கீரையே தண்டுக்கீரையாகும்.
முளைக்கீரையை நன்கு சுத்தமாக அலசி சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம் 1 ஸ்பூன், மிளகு 5, சின்ன வெங்காயம் 4, பூண்டுபல் 3, இலவங்கப்பட்டை இவற்றைச் சேர்த்து நீர்விட்டு வேகவைத்து நன்கு கடைந்து சாப்பிடலாம்.  பொரியலாகவும் சாப்பிடலாம்.  சூப் செய்தும் அருந்தலாம்.
இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட ஏற்ற உணவாகும்.
முளைக்கீரையை வாரம் ஒருமுறையாவது சமைத்து உண்பது நல்லது.
· இளைத்த உடல் தேறவும், தேகத்திற்கு வலு கிடைக்கவும் இது சிறந்த மருந்தாகும்.
· மலச்சிக்கலைப் போக்கும்.  அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.
· மூலநோய்க்காரர்களுக்கு இது சிறந்த உணவாகும்.  மூலநோயின் பாதிப்பைக் குறைக்கும்.
· நாவிற்கு சுவையைக் கொடுக்கும்.  நன்கு பசியைத் தூண்டும்.
· உடல் சூட்டைத் தணிக்கும்.
· கண் எரிச்சலைப் போக்கும்.  கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும்.
· நரம்புத் தளர்வைப் போக்கி நரம்புகளுக்கு  வலு  கொடுக்கும்.
· இருமல், தொண்டைப்புண் போன்றவற்றை குணமாக்கும் தன்மை கொண்டது.
· சருமத்திற்கு பொலிவைக் கொடுக்கும்.
· இதில் அதிகளவு கால்சியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளது.  அதனால் எலும்புகளுக்கு வலு கொடுப்பதுடன் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது.
· உடலில் உள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும்.
· சர்க்கரை நோயாளிகளுக்கு உண்டாகும் பாதிப்புகளைக் குறைக்கும்.
· இரத்தத்தை சுத்தப்படுத்தும்.
· மார்புச்சளி, தொண்டைச் சளியைப் போக்கும்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...