Sep 1, 2012

நல்ல அம்மாவாக 20 வழிகள்



 
உலகிலேயே தனது அம்மாவைப் போல சிறந்தவர் இருக்க முடியாது. சிறந்த அறிவாளி யாரும் இருக்க முடியாது என்றுதான் ஒவ்வொரு குழந்தையும் நினைக்கும். தனது குழந்தையிடம் அதிக நெருக்கமாகவும், பாசமாகவும் இருக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு அம்மாவும் விரும்புவார். குழந்தைக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்க வேண்டிய தாய், அந்தக் குழந்தையுடன் நெருக்கமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. எனவே, தனது குழந்தையிடம் நெருக்கமாக இருக்க பல்வேறு வல்லுநர்களும், புத்தக ஆசிரியர்களும் 20 வழிகளை பட்டியலிட்டு உள்ளனர்.

1. குழந்தை, தங்களிடம் நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதற்காக, பெரும்பாலான பெற்றோர், அவர்களைக் கட்டுப்படுத்தத் தவறிவிடுகின்றனர். இது, குழந்தையின் வாழ்க்கையில் மற்றவர்கள் தலையிட வழி ஏற்படுத்திவிடும். எனவே, குழந்தைகளுக்கு கட்டுப்பாடுகள் அவசியம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
2. குழந்தைகளுடன் மனக்கசப்பு ஏற்பட்டால், அந்த குறிப்பிட்ட விஷயம் குறித்து குழந்தையின் தலையைக் கோதியபடி, இரவு நேரங்களில் படுக்கையில் இருக்கும்போது மெதுவாக அறிவுரை கூறுங்கள், இது உறவை வலுப்படுத்த உதவும்.
3. தனது அம்மாவுக்கு எல்லா விஷயங்களும் தெரிந்திருக்கும் என்று குழந்தைகள் நினைப்பார்கள்., பணிக்குச் செல்லும் தாய்மார்கள், தனது பணியிடத்தில் நடந்த சுவாரசியமான சம்பவங்களை குழந்தைகளிடம் எடுத்துக் கூறலாம். தன்னார்வலராக இருந்தால், மற்றவர்களுக்கு எவ்வாறு உதவி செய்ய முடியும் என்று விவரிக்கலாம். இது குழந்தைகளிடம் அம்மாவின் மதிப்பை உயர்த்தும்.
4. சந்திக்கும் நபர்கள் அனைவரிடமும் உதவி கேட்பவரா நீங்கள். இந்தப் பழக்கம் உங்களுக்கே மன உளைச்சலை ஏற்படுத்தும். மற்றவர்கள் தவறாக நினைப்பார்களோ என்ற எண்ணம் உங்களை வாட்டிக் கொண்டே இருக்கும். முதலில் அந்த பழக்கத்தை நிறுத்துங்கள். இப்போது உங்கள் மனநிலை சீராகும். அன்றாடப்  பணிகளில் கூடுதல் ஈடுபாடு காட்ட வழி ஏற்படும்.
5. மாலை நேரங்களில் நண்பர்களுடன் ரிலாக்ஸாக வெளியில் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
6. அன்றாடப் பணிகளில் உங்களுக்கு என்று தனித்துவமிக்க வழிமுறையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அதன்படியே செயல்படுங்கள். எனது முன்னோர் இப்படித்தான் இருந்தார் கள், நானும் அப்படித்தான்  இருப்பேன் என்று செயல்படுவதை தவிருங்கள்.
7. குழந்தைகள் ஒவ்வொருவரும் தங்களுக்கு உள்ள கிரகிக்கும் திறனைக் கொண்டு கற்றுக் கொள்கின்றனர். அவர்களை இப்படித்தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப் படுத்தாதீர்கள். அவர்களின் நிலையை அறிந்து, அதனை மேம்படுத்த ஆலோசனைகளை மட்டும் வழங்குங்கள்.
8. தோல்விதான் பல விஷயங்களைக் கற்றுத் தருகிறது. குழந்தைகளின் எல்லா முயற்சிகளையும் ஆதரியுங்கள். சைக்கிளிலிருந்து கீழே விழுந்தால் பதறாதீர்கள். சைக்கிளை தொடக்கூடாது என்று கண்டிக்காதீர்கள். முயற்சி போதாது என்பதை குழந்தைகளிடம் எடுத்துக் கூறுங்கள். குழந்தைகள் அடுத்தடுத்து வெற்றி பெறும் வாய்ப்பு கிடைக்கும்.
9. குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுவதை முடிந்தவரை தவிருங்கள். பெற்றோருடன் இணைந்து விளையாடும் குழந்தைகள், தனியாக விளையாட விருப்பமின்றி, ஒவ்வொரு முறையும் பெற்றோரையே எதிர்பார்க்கும் நிலை ஏற்படும். எனவே, பெரிய அளவிலான விளையாட்டுக்களைத் தவிர்த்து மற்ற விளையாட்டுக்களில் குழந்தைகளை தனியாக விளையாட அனுமதிப்பது  அவர்களிடையே தன்னம்பிக்கையை வளர்க்க உதவும்.
10. உங்களுக்கு கிடைத்த வேலை சரியாக இல்லை. வாழ்க்கை சீராக அமையவில்லை. இப்படியாக புலம்பாதீர்கள். கிடைத்த வேலையை எவ்வளவு சிறப்பாக செய்ய முடியும் என்று பாருங்கள். இது முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்.
11.  குழந்தைகளின் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றிவிடக் கூடாது. அப்போதுதான், ஏமாற்றத்தை ஏற்றுக் கொள்வது எப்படி என்பதை குழந்தைகள் கற்றுக் கொள்ளும். நாம் எதிர்பார்க்கும் அனைத்தும் கிடைத்துவிடாது என்பதை அவர்கள் உணர்வதற்கு சந்தர்ப்பத்தை உருவாக்குங் கள். குழந்தைகளின் எதிர்காலத்துக்கு இது பயனுள்ளதாக அமையும்.
12. ஒவ்வொரு நாளும் எப்படி இருந்தது என்று குழந்தைகள் சொல்லும்போது, அதனை பொறுமையாகவும், கவனமாகவும் கேளுங்கள். இது குழந்தைகளின் செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படுத்தும். அவர்கள் சொல்ல வரும் விஷயத்தை கேட்கத் தவறினால், அல்லது மட்டம் தட்டி மறுதலித்தால் அவர்க ளுக்கு வருத்தம் ஏற்படும். முன்னேற்றத்துக்கு தடையாக அமையும்.
13. குழந்தைகள் தங்களுடைய வேதனைகள் அனைத்தையும் பெற்றோரிடம் வெளிப்படையாக பேச மாட்டார்கள். அப்படிப் பட்ட நேரத்தில், குழந்தைகளிடம் உள்ள சோகத்தைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். அவர்களைக் கட்டாயப்படுத்தாமல் பொறுமையாக பேசி வேதனைக்கான காரணங்களை உணர்ந்து அதைப் போக்க உதவ வேண்டும்.
14. குழந்தைகளைச் சுற்றிலும் அதிக அளவில் உறவினர்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இது குழந்தைக ளுக்கு ஊக்கம் அளிக்கும்.
15. குழந்தைகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்காதீர்கள். அவர்களுடைய  திறமையையும் விருப்பத் தையும் அறிந்து அதில் முன்னேற்றத்தை ஏற்படுத்த முயற்சியுங் கள். 16. காலையில் மென்மையான பாடல்களைக் கேட்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இது உங்களுக்கும், குழந்தைகளுக்கும் பதட்டம் இல்லாத மனநிலையை ஏற்படுத் தும்.
17. குழந்தைகளை வளர்க்கும் விதம் பற்றி மற்றவர்கள் குறைகூறக்கூடும். அவர்கள் கூறுவதைக் கேளுங்கள். அவர்களு டைய கூற்று தவறாக இருந்தால் அதை ஏற்காதீர்கள். அதேசமயம், அவர்கள்மீது, கோபப்படாமல் மென்மையாக பதில் அளியுங்கள்.
18. இன்று நான் நிறைய தவறுகளை செய்துவிட்டேன் என்று குழந்தைகள் கூறக்கூடும். அப்படிப்பட்ட சமயத்தில், நானும் நிறைய தவறுகளை செய்திருக்கிறேன் என்று கூறுங்கள். உங்கள் தவறுகளை எப்படி திருத்தினீர்கள் என்று விளக்குங்கள். அவர்களுடைய தவறுகளையும் திருத்திக் கொள்ள  அறிவுரை வழங்குங்கள். பெரிய மனிதர்களும் தவறு செய்கிறார்கள் என்பதை உணர்ந்து, தம்மிடம் உள்ள வேதனைகளை மறந்துவிடுவார்கள். குழந்தையிடம் கோபமாக பேசினால், அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுங்கள். கோபப்படக் கூடாது என்பதை குழந்தைகள் உணரும் வாய்ப்பை ஏற்படுத்துங் கள்.
19. சில விளையாட்டுக்களில் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுங்கள். குழந்தைகளை வெளியே அழைத்துச் சென்று, அவர்களுடைய விருப்பங்களை நிறைவேற்றுங்கள். உங்களுக்கும், குழந்தைக்கும் உள்ள உறவை இது வலுப்படுத்தும்.
20. தினந்தோறும் காலையில் எழுந்தவுடன், குறைந்தது 5 பேருக்கு அல்லது 5 செயல்களுக்கு நன்றி தெரிவிக்குமாறு குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். இந்த முயற்சி, குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை வளர்க்கும்.
எல்லாமே நல்ல வழிகள்தானே. இவற்றை செயல்படுத்திப் பாருங்கள். எனது அம்மா ரொம்ப நல்லவங்க என்று நிஜமாகவே குழந்தைகள் ஒப்புக்கொள்ளும். உங்கள் கழுத்தைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தம் கொடுக்கும்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...