Jun 22, 2012

இடுப்பு வலியை உண்டு பண்ணும் நோய்கள்



இடுப்பைக் கழட்டி வச்சுடணும் போல இருக்கு'' `இரண்டு பக்கமும் இடுப்புல தாங்க முடியாத வலியா இருக்கு. உட்காரவும் முடியல, நிக்கவும் முடியல. என்ன பண்றதுன்னே தெரியலே'' ``குறுக்கு வலி கொல்லுது''- இப்படி இடுப்பு வலி தாங்க முடியாமல் பலரின் வேதனை வார்த்தைகளில் ஒரு சில இவை...
 
இடுப்பு வலி தொண்ணூறு சதவீத மக்களை பாதிப்புக்குள்ளாக்கவே செய்கிறது. இதில் ஐம்பது சதவீத மக்களுக்கு ஒரு தடவைக்கு மேல், பல தடவை இடுப்பு வலி, வந்து வந்து போகிறது. ரோட்டில் நடந்து போகும் பத்துப் பேரில், எட்டுப் பேருக்கு இடுப்பு வலி இருக்கத்தான் செய்கிறது.
 
எல்லோரும் நன்றாக நடந்து போகிறார்கள் என்பதால், அவர்களுக்கெல்லாம் இடுப்பு வலி இல்லை என்று அர்த்தமில்லை. சுமார் ஐம்பது மில்லியன் டாலர் அமெரிக்க பணத்தை, ஆண்டுதோறும் அமெரிக்கா, இடுப்பு வலிக்காக செலவு பண்ணுகிறதாம். கூரான ஒரு கத்தியை வைத்து, குத்துகிற மாதிரியும் இடுப்பு வலி இருக்கும்.
 
அல்லது வெளியே எந்தவித வீக்கமும் இல்லாமல், ஒரு ஊமைக்காயம் பட்டது போலவும் இடுப்பு வலி இருக்கும். இங்க தான் வலி, அங்க தான் வலி என்று எங்கு கரெக்டாக வலி இருக்கிறது என்பதே தெரியாமல், சொல்ல முடியாமல், இடுப்பைச் சுற்றி ஏதோ ஒரு இடத்தில் வலி இருக்கும்.
 
சமீபகாலமாக தலைவலியை விட, இடுப்பு வலியால் கஷ்டப்படுபவர்கள் அதிகமாகி விட்டார்கள். என்னிடம் மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ளும் ஒரு முக்கிய பிரமுகர், கொஞ்ச நாளாக ``இடுப்பு அதிகமாக வலிக்குது'' என்றார். நடுத்தர வயதுதான் அவருக்கு. ``ஒரு மாதத்துக்கு எவ்வளவு தூரம் காரில் பயணம் செய்வீர்கள்'' என்று கேட்டேன்.
 
`ஒரு மாதத்துக்கு சுமார் 5000 கி.மீ. காரில் பயணம் செய்கிறேன்' என்றார். அரசியலில் இருப்பதால், கட்சி கூட்டம், நல்லது, கெட்டது என்று நேரம் பார்க்காமல், தூரம் பார்க்காமல் போய்த்தான் ஆக வேண்டும். மாதத்துக்கு 5000 கி.மீ. பயணம் செய்யும் இவருக்கு, இடுப்பு வலி வராமல் எப்படி இருக்கும்?
 
இவரை மாதிரி, அரசியல், வியாபாரம், தொழில் கல்விச்சேவை- இப்படி பலவிதமான ஈடுபாடுடையவர்கள், பல தொழிலதிபர்கள், பல முக்கிய பிரமுகர்கள் விமானத்திலும், காரிலும், பஸ்சிலும் தினமும் அதிக தூரம் பயணம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். கார், பஸ், விமானத்தை விடுங்கள்.
 
சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிளில் கூட, நிறைய பேர் வியாபாரத்தை முன்னிட்டு, தினமும் அதிக தூரம் பயணம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். நான் பள்ளியில் படிக்கிற காலத்தில், ஓம வாட்டர் விற்கும் ஒருவர், ``ஒரு நாளைக்கு சுமார் அறுபது கிலோ மீட்டருக்கும் மேலே சைக்கிளேயே பயணம் செய்து வியாபாரம் பண்ணுவார்'' என்று என் அம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன்.
 
இப்படி உலகின் ஒவ்வொரு மூலையிலும், ஒவ்வொருவரும், அவரவர் வேலைக்காக நிறைய தூரம் பயணம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இடுப்பு வலி பெரும்பாலும் முப்பது வயதிலிருந்து ஐம்பது வயதில் உள்ளவர்களுக்குத்தான் அதிகமாக ஏற்படும். சிறிய வயதுக்காரர்களுக்கு இடுப்பு வலி ஏற்படக் காரணம், அவர்களுடைய அன்றாட வாழ்க்கை முறை தான்.
 
முன்பை விட, இப்பொழுதெல்லாம் கடின உடல் உழைப்புக்கு அதிக வாய்ப்பே இல்லாமல் போய் விட்டது. சோம்பேறித்தனம் அதிகமாகி விட்டது. அடுத்த தெருவில் இருக்கும் கடைக்கு கூட, நடந்து போக சோம்பேறித்தனம் பட்டுக்கொண்டு, பைக்கில் போகிறவர்கள் அதிகமாகி விட்டார்கள்.
 
குனிந்து, நிமிர்ந்து, உட்கார்ந்து, எழுந்து வேலை பார்ப்பது என்பது குறைந்து விட்டது. பின் இடுப்பு வலி எப்படி வராமலிருக்கும்? இடுப்பு வலி, சிலபேருக்கு திடீரென்று அதிகமாக ஒரே நாளில் தாங்க முடியாத அளவில் வந்து விடும். அல்லது ரொம்ப நாளாக வலி இருந்து கொண்டே இருக்கும்.
 
ஒருவருக்கு மூன்று மாதத்துக்கு மேலும், இடுப்பு வலி, தொடர்ந்து இருந்து வந்தால், அதை நாள்பட்ட வலி கணக்கில்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த மாதிரி நாள்பட்ட இடுப்பு வலியால் பாதிக்கப்படுபவர்களில் சுமார் 25 சதவீதம் பேருக்கு, உடலில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட காரணம், எங்கேயாவது கண்டிப்பாக இருக்கும்.
 
கட்டியினாலோ, நோயினாலோ, இடுப்பெலும்பு மற்றும் தண்டு வடம் பாதிக்கப்பட்டு அதனாலும் இடுப்பு வலி ஏற்படலாம். தலையின் பின்பக்கத்திலிருந்து, இடுப்பின் கடைசி நுனிப் பகுதி வரை, ஒன்றன் மேல் ஒன்றாக, வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் `வெர்டிப்ரே' என்று சொல்லக்கூடிய குருத்தெலும்புகளில், ஒன்றோ அல்லது அதற்கு மேலோ, உடைந்தோ, முறிந்தோ அல்லது சிதைந்தோ இருந்தால் கூட, இடுப்பு வலி ஏற்பட வாய்ப்புண்டு.
 
வாலிப வயதிலுள்ளவர்களுக்கு இடுப்பு வலி ஏற்பட அதிக காரணம்- இளம் வயதில் விளையாட்டுகளில் ஈடுபட்டு அதனால் ஏற்படும் காயம் ஆகும். நெஞ்சில், வயிற்றில், இடுப்புக்கு உள்ளே ஏற்படும் நோய்களினால் கூட, இடுப்பு வலி ஏற்பட வாய்ப்புண்டு. பெண்களுக்கு கர்ப்பப்பையில் ஏற்படும் நோய்கள் கூட இடுப்பு வலியை உண்டு பண்ணும்.
 
அப்பென்டிக்ஸ் நோய், சிறுநீரக நோய், சிறுநீரகப்பை நோய், சிறுநீரகத்தில் கல், ப்ராஸ்டேட் சுரப்பி நோய், இவைகளெல்லாம் கூட இடுப்பு வலியை உண்டு பண்ணும். கர்ப்பமுற்றிருக்கும் காலத்தில், பெண்களுக்கு இடுப்பு வலி ஏற்படும். இடுப்பின் உள்ளேயுள்ள தசைகளும், தசை நரம்புகளும் நீண்டு கொண்டே வருவதாலும், நரம்புகள் அழுத்தப்படுவதாலும், இந்த இடுப்பு வலி, கர்ப்ப காலத்தில் ஏற்படுகிறது.
 
குருத்தெலும்பில் புற்றுநோய் உண்டானால் கூட இடுப்பு வலி ஏற்படும். சைக்கிளோ அல்லது டூ வீலரோ ஓட்டிக்கொண்டு போகும்போது, ஒரு பள்ளத்தில் வண்டியைப் போட்டு, இறக்கி ஏற்றினால் போதும். அந்த ஒரு பள்ளத்தில் தூக்கிப் போட்ட அதிர்ச்சி, முதுகெலும்பு வரிசையைப் பாதிப்படையச் செய்து, இடுப்பு வலியை உண்டாக்கி விடும்.
 
அதிலும் பைக் ஓட்டுபவர்களை விட, பைக்கிள் பின்னால் உட்கார்ந்து கொண்டு போகிறவர்களுக்குத்தான் அதிக பாதிப்பு ஏற்படும். காரணம்- ஓட்டுகிறவருக்கு, எதிரே பள்ளம் வரப்போகிறது என்று ஓரளவாவது, முன்கூட்டியே தெரியும்.

எனவே கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பார். ஆனால் பின்னாடி உட்கார்ந்திருப்பவர்களுக்கு, பள்ளம், மேடு எதுவும் தெரியாது. அதனால் அலட்சியமாக உட்கார்ந்திருப்பார்கள். எனவே வண்டி தூக்கிப் போடும்போது, பின்னால் உட்கார்ந்திருப்பவர்களுக்குதான் அதிக பாதிப்பு ஏற்படும்.  

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...