Sep 2, 2012

இருதய நோயாளியின் வாழ்நாள் நீடிக்க வழி வகுக்கும் நவீன மருத்துவம்

இன்று சர்வதேச நோயாளர் தினமாக உலக சுகாதார ஸ்தாபனம் (World Health Organization) பிரகடனப்படு த்தியுள்ளது.
ஏலவே இன்றைய காலகட்டத்தில் அரசாங்க மருத்துவ மனைகளில் நடைபெற்று வருகின்ற இருதய நோய் தொடர்பான கிளினிக்கிற்கு (Clinic) செல்கின்ற நோயாளர் பற்றியும், இருதயத்தின் (Heart) இயல்பான இயக்கம், அது பழுதடைவதற்கான காரணம், இதனால் உடலுக்கு என்ன நேரிடுகின்றது, இதற்குரிய மருத்துவம் யாது? இருதயக் கோளாறுகளை அறிய உதவும் சோதனைகள், இருதய அறுவை சிகிச்சையின் (Operation) போது உபயோகிக்கப்படுகின்ற திசுக்கள் என்பவை பற்றி விரிவாக ஆராய்வது இங்கு உசிதமாகும்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது முதுமொழி. இவ்வுலகில் ஒருவர் எவ்வளவு செல்வச் செழிப்புடன் குபேரனாக வாழ்ந்தாலும் நோயினால் பீடிக்கப்பட்டு அல்லலுறுவாராயின் களிப்புடன் வாழ இயலாது என்பது நிதர்சனமாகும்.

நம் நாட்டில் இரத்த அழுத்த நோய் அநேகமாக முதியவர்களிடமே காணப்படுகின்றது.
மனித உடலில் உள்ளுறுப்புகளில் பிரதான பங்கினை வகிப்பது இருதயம் ஆகும். இதன் குறைபாடுகளால் இருதய அறைகள் இரத்தத்தைச் சேர்த்து மீண்டும் அடித்து அனுப்பும் திறனும் குறைகிறது. இதனால் போதுமான குருதியை (Blood) ச் சேர்த்து வைக்கும் கொள்திறனும் குறைவடைகிறது. அல்லது அளவுக்கு மீறிய இரத்தம் இருதய அறைகளில் சேருகின்றது. இத்தகைய நோய் செயல்பாடுகள் யாவும் பல ஆண்டு காலமாக இருந்து வரக்கூடும். ஆகையால் இருதயம் சரிவர இயங்காமல் பழுதடையாது தற்செயலாக நடைபெறுவதல்ல. வருடங்கள் செல்ல செல்ல இது படிப்படியாக கேடடைகின்றது எனலாம்.
இனி இருதயக் கோளாறுகள் என்றால் என்ன? என்பதைப் பற்றி ஆராய்வோம். முதலில் இருதயத்தின் இயல்பான இயக்கம் பற்றி பார்ப்போம்.
உடலின் அனைத்தப் பகுதிகளுக்கும் ஏற்ற அளவு குருதியை அடித்து அனுப்ப வேண்டியதுதான் இருதயத்தின் தலையாய பணியாகும். உடலில் சுழன்று ஓடும் இரத்தம் சரீரத்தின் திசுக்களுக்கு உணவையும், உயிர்க்காற்றையும் (Oxygen) கொண்டுவருவதோடு உடலிலுள்ள கழிவுப் பொருட்களையும் அப்புறப்படுத்துகின்றது.
டலின் செயற்பாடுகளைப் பொறுத்து இருதயம் அடித்து அனுப்பும் இரத்தத்தின் அளவு மாறுபடும். ஓய்வாக இருக்கும் போது சிறிய அளவில் இரத்தம் கிடைப்பது போதுமானது. கடுமையான உடற் பயிற்சிகளின் போது அதிக அளவிலான இரத்தம் தேவை. உடலானது கஷ்டமான வேலை செய்யும் போது அதற்கு உழைப்பு அற்ற நிலையில் கிடைப்பதைவிட அதிக அளவிலான பிராண வாயுவும் உணவும் தேவை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இத்தேவைகளை ஈடுசெய்ய இருதயம் வேகமாகவோ மெதுவாகவோ துடிக்கின்றது. இதற்கு ஏற்ப நமது இரத்த நாளங்கள் விரிந்து சுருங்கி போதுமான குருதியை உடலுறுப்புகளுக்கு கொண்டு செல்கின்றது.
உடற் பயிற்சியின் போது இருதயம் போதுமான இரத்தத்தை அடித்து அனுப்ப அதிகமாக உழைக்கின்றது. அதுமட்டுமல்லாது காய்ச்சலடிக்கும் போதும் வேறு சில உடல்நலக் கேடுகளின் போதும் இருதயம் அதிகமாக உழைத்து உடலின் தேவைகளை ஈடுசெய்ய குருதியை அடித்து அனுப்ப கடும் முயற்சி செய்கின்றது. அவ்வாறு இருதயம் கடுமையாக வேலை செய்தால் தான் நோயுள்ள நிலையில் உடலுக்கு வேண்டிய பிராண வாயுவையும் ஊட்டங்களையும் ஒழுங்காக அளித்து நிறைவு செய்ய இயலும். சாதாரண நிலைமைகளில் இயல்பாக உள்ள இருதயம் போதுமான இரத்தோட்டத்தை தங்குதடையின்றி அளிக்கக் கூடிய ஆற்றலைப் பெற்றுள்ளது.
இனி இருதயம் பழுதடைவதற்கான காரணியை நோக்குவோம். இருதய தசைகளுக்கு இரத்தம் வழங்கும் இருதயத்தமனிகள் குறுகிவிடுதல். இது இருதய நாள நோய் (Coronary Artery Disease) எனப்படுகிறது.
இருதய தாக்கு (Heart Attack Myocardial Infarction) உண்டாதல். இருதயத் தசைகளின் இயல்பான பணிகளுக்கு இடையூறு உண்டாகும் வகையில் ஒரு பெரிய திசு வடு உருவாகின்றது. அடுத்து உயர் இரத்த அழுத்தம். இருதய வால்வு நோய். வாதக் காய்ச்சல் (Rheumatic Fever) அல்லது பிறவியிலேயே சரியான வளர்ச்சியற்ற இருதய வால்வு காரணமாக இது உண்டாகிறது. மற்றயது இருதயத் தசையே நோயுறுதல் (Cardiomy opathy) இன்னொன்று பிறவியிலே ஏற்பட்டுவிட்ட இருதயக் கோளாறு அல்லது குறைபாடு (Congenital Heart Disease) இருதய வால்வுகளில் தொற்று உண்டாதல் அல்லது இருதயத் தசைகளிலேயே தொற்று உண்டாதல் (Endocarditisand/ or Myocarditis) என்பனவாகும். மேற்கண்ட ஏழு வகையான நோய்களும் இருதயம் சரிவார இயங்காமற் போவதற்கு காரணமாகின்றன. இதனால் இருதயத் தசைகள் சுருங்கி விரிவடையும் திறன் குன்றுகின்றது. இருதயத்தின் இயக்க குறைபாடுகளினால் இருதய அறைகள் இரத்தத்தைச் சேகரித்து மீண்டும் அடித்து அனுப்பும் திறனும் குறைகிறது. இதனால் போதுமான குருதியை சேர்த்துவைக்கும் கொள்திறனும் குறைகின்றது.
இத்தகைய நோய் செயற்பாடுகள் யாவும் பல ஆண்டுகாலம் தொடரக்கூடும். ஆகையால் இருதயம் சரிவர இயங்காமல் போய்விடுகின்றது.
இருதயம் பழுதுற்றால் என்ன நேரிடுகிறது என்பதைப் பார்ப்போம். இருதயம் தான் இயங்க வேண்டிய அளவு திறமையாக இயங்கி இரத்தத்தை அடித்து அனுப்பவில்லை என்றால் இரத்தோட்ம் (Blood Circulation) மந்தமடைந்து இருதயத்திற்கு திரும்பி வரும் சிறை இரத்த நாளங்களில் தங்க ஆரம்பிக்கும். இதனால் இரத்த நாளங்களிலுள்ள திரவம் அங்கிருந்து வெளியேற்றப்படத் தூண்டப்பட்டு கால்களிலும் பாதங்களிலும் உள்ள திசுக்களுள் இரத்தம் செலுத்தப்பட நேரிடுகிறது. இதனால் கால்களிலும் பாதங்களிலும் வீக்கம் (Edema) உண்டாகும். சிலநேரங்களில் இவ்வீக்கம் அடி வயிற்றிலும் கல்லீரலிலும் கூட ஏற்படுவதுண்டு. கால் வீக்கங்கள் அனைத்தும் இருதயக் கோளாறால்தான் வரும் என்று கருதக்கூடாது. இதனைக் கணித்து அறிய வேண்டியவர் மருத்துவரே ஆகும்.
நுரையீரல்களில் (Lungs) பிராணவாயு ஏற்றம் பெற்ற இரத்தத்தை பெற்று உடலின் பாகங்களுக்கு அடித்து அனுப்புவதுதான் இருதயத்தின் இடப் பாகத்தின் பணி. இருதயத்தில் இடப்பகுதி, அது இயங்க வேண்டிய ஓரளவு திறனுடன் இயங்கி இரதத்தை அடித்து அனுப்பவில்லை என்றால் இரத்தம் நுரையீரல்களில் உள்ள இரத்த நாளங்களிலேயே தங்கிவிட நேரிடும். சில நேரங்களில் இரத்த நாளங்களில் உள்ள திரவம் நுரையீரல்களில் உள்ள காற்று நுண்ணறைக்குள் புக நேரிடலாம். இவ்வாறு நடைபெறுவது நுரையீரல் நீர்க் கோவை வீக்கம் (Pulmonary Edema) எனப்படுகிறது. இதனால் குறுமூச்சு விடுதல் (மூச்சு விடுவதில் சிரமம்) உண்டாகிறது. இதன் விளைவாக அடிக்கடி உடல் வலிமை குன்றி சோர்வு உண்டாகும்.
பிறவியிலிருந்தே இருதய பழுது உடையவர்களுக்கு சிறுநீரகங்கள் (Kidneys) சோடியத்தையும் நீரையும் பிரித்து அனுப்பும் திறன் குன்றும், மேலும் சிறுநீர் மூலம் இயல்பாக வெளியேற்றப்படுகிற சோடியம் (Sodium) உடலிலேயே தங்கி நீரையும் சேர்த்துப் பிடித்து வைத்துக் கொள்ளும்.
இருதயம் பழுதடைவதால் உண்டாகும் இறுதியான சிக்கல் இரத்தோட்டத்தில் போதுமான அளவு இரத்தம் சுழன்று ஓடாமை. உடல் உறுப்புக்கள் தமக்குத் தேவையான உயிர்க்காற்றையும் ஊட்டத்தையும் முழு அளவில் பெற்றுக்கொள்ள முடிவதில்லை.
இதன் விளைவு நோயாளிக்கு களைப்பாக இருக்கும்.
இருதயத்தில் இயக்கக் குறைபாடு இருப்பின் உடலானது அதற்கு மாற்aடு செய்துகொள்ள முயலும். இதனால் இருதயத் தசையானது தனது சூழ்நிலைக்கு தக்கபடி சிறப்பாக இயங்க வேண்டிய நிலையில் இருக்கும். இதற்கு ஒரு வழி இருதயம் பெரிதாகுவதாகும். இவ்வாறு இருதயம் பெரிதாகுவதால் இருதய அறைகளும் அதிகம் சுருங்கி விரிவும். இதனால் அதிக இரத்தம் அடித்து அனுப்ப முடிகின்றது.
இரண்டாவது மாற்றுவழி இருதயத்தசை அளவைப் பெருக்கிக்கொள்வது. இருதயத்தில் உள்ள தசை நார்களின் எண்ணிக்கை அதிகமாகும். இவை நன்கு சுருங்கி விரிந்து தம் பணியைச் செய்யும். இதயத் தசைகள் அதிகரித்தல் என்பதன் பொருள் இருதயம்
இன்னும் வலிமையாக இரத்தத்தை அடித்து அனுப்பும் என்பதாகும். இறுதியாக உடலானது இயக்கக் குறைபாட்டை சரிசெய்து கொள்வதற்கு எடுக்கும் மூன்றாவது வழி இருதய தசையைத் தூண்டி விடுதலை அதிகரித்தலாகும். இது இதயத்தை அதிக விரைவாக இயங்க வைத்து இரத்தோட்டத்தை அதிகரிகச் செய்கின்றது.
இருதய இயக்க குறைபாடுகளைத் தீர்க்க இருதயம் எடுக்கும் இந்த மூன்று மாற்று வழிகளும் இருதயம் இயல்பாக இயங்கவும்,
அல்லது ஓரளவு இயல்பான இயக்க நிலைக்குத் திரும்பவும் உதவி செய்கின்றன.
இருதயத்தின் நோய் கடுமையடையும் போது இந்த மாற்று வழி முயற்சிகளும் பயனற்றும் போகின்றன. காலப் போக்கில் நோயாளியின் நிலை கேடடைகையில் போதுமான இரத்தோட்டம் நடைபெறுவது என்பது பெரிய சிக்கலாகும். இருதயம் சரிவர இயங்காமையின் அடையாள அறிகுறிகளைப் பார்ப்போம்.
நுரையீரலில் நீர்மம் தங்கிவிடுவதால் குறு மூச்சு உண்டாவது இருதயம் இயக்கக் குறைபாடு அடைந்துள்ளதற்கு மிகப் பொதுவான காரணமாகும். உடற்பயிற்சியின் போது மூச்சு திணறல் உண்டாவது பெரும்பாலும் உண்டாகும் சிக்கல் ஆகும். எனினும் ஓய்வு எடுக்கும் நிலையிலும் இவ்வாறு மூச்சு திணறல் உண்டாகலாம். சில சமயங்களில் இதுபோன்று திடீரென்று இரவில் வரலாம். இதனால் மூச்சு விடுவது மிகவும் சிரமமாக இருக்கும். உடலின் மேற்பாகத்தை பல தலையணைகளை வைத்து உயர்த்தி வைத்தால்தான் இதிலிருந்து விடுதலை கிடைக்கும். சிலசமயம் நோயாளி தூக்கத்திலிருந்து எழவேண்டியிருக்கும்.
இறுதியாக இருதயம் உரிய விதத்தில் இரத்தத்தை அடித்து அனுப்பாததன் அறிகுறிகள் உடல்சோர்வு, பலவீனம், செயல் முனைப்பின்மை போன்றவையாகும். மனக்குழப்பம், பொறுமையின்மை, தெளிவற்ற சிந்தனை போன்றவை வயது முதிர்ந்தோரிடம் இருதயக் கோளாறு உள்ளதைக் காட்டுபவையாகும்.
நோயாளியின் உடலைப் பரிசோதித்து அவருக்கு இருதயந் தொடர்பான கோளாறு உள்ளதா? என்று மருத்துவரால் கூறமுடியும் ‘ஸ்டெதாஸ்கோப்பை’ உற்றுக்கவனிப்பதன் மூலம் நோயாளியின் திசுவில் நீர் கோர்த்துள்ளதை டாக்டரால் அறிய முடியும் இனி இருதயக் கோளாறுக்கு உரிய மருத்துவத்தை நோக்குவோம். இருதயம் நோயுறாது தடுப்பது தான் சிறந்த மருத்துவம். வருமுன் காப்பது எப்போதும் இயலக் கூடியதுதான். எனவே இருதயக் கோளாறுகளையும் அவை வருமுன் தடுக்க முடியும்.
நோயாளியின் நிலையை நன்கு அறிய டாக்டர் ஒன்று அல்லது பல்வேறு இருதயப் பரிசோதனைகளை செய்யச் சொல்வார். இருதயம் பழுதுற்றதை அறியவும் சிறந்த வழி இதுவே. இருதய நோயை அறிய இருதய ஒலி வரைவு சோதனை (Eclto Cardigraphictest) செய்து பார்ப்பது ஒரு முக்கியமான நோய் கணிப்பு சோதனையாகும். இச்சோதனை ஒலி அலைகளை உடலினுள் செலுத்திக்கிடைக்கும் எதிரொலிகளை வைத்துக் கணிக்கப்படுகின்றது. இவ்வொலி இருதயப் பரப்பின் மீது பட்டுதிரும்பி மின் அணு உருவமாக இருதயத்தைக் காட்டுகிறது. இருதயத் தமனி வரைவு (Coron ary arteriography) என்பது இன்னொரு நோய்க்கணிப்பு சோதனையாகும். இது இதயத்தினுள் குழாய் செருகி மருத்துவம் செய்கையில் (Cardiac atheterization) செய்யப்படுகிறது. இச்சோதனை ஒரு குழாயை சிறையிலோ தமனியிலோ செலுத்தி இருதயத்தினுள் கொண்டு செல்வதாகும். இதுவே இருதய தமனி வரைவு  (Arteriography) பின்னர் இக் குழாய் வழியே ஊடுகதிர் ((X – Ray) புலப்படும் ஒருவகைமையை செலுத்தப்படுகிறது.
‘ஈ. சி. ஜீ’ E C G வரைபடத்தின் மூலம் இருதயத்தின் இயக்கத்தை அறியலாம். ஒரு துடிப்பிற்கும் மற்றொரு துடிப்பிற்க்கும் உள்ள இடைவெளி எவ்வளவு ஒழுங்காக ஏற்படுகிறது. அதில் உள்டாகும் மின் நிகழ்வும் இருதய ஒலியும் எவ்வாறு பிணைந்துள்ளது என்பவற்றை அறியாலாம். மேலும் தோலின் நிறம், தமனி இரத்த நாளங்களின் கூடுதலான துடிப்பு, வீங்கிய கால்கள் ஆகிய அறிகுறிகள் இருதய நோய் ஏற்பட்டுள்ளது என்பதை ஊகிக்க உதவும். உலகம் முழுவதும் ஆண்டுதோறும் பல லட்சம் பேர் இருதயம் தொடர்பான நோய்களால் பலியாகிறார்கள் .இந்த நிலையில் இருதய வால்வு அறுவையில் விலங்குகளின் இருதய வால்வுத் திசுக்களை எடுத்து மனிதனுக்குப் பொருத்தி டாக்டர்கள் சாதனை ஏற்படுத்தினார்கள் என்றாலும் இது முழு அளவில் வெற்றியளிக்கவில்லை.
மிலேனியம் ஆண்டாக மிளிருகின்ற இன்றைய காலகட்டத்தில் அமெரிக்க இருதய நோய் மருத்துவ நிபுணர்கள் புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளார்கள். பசுவின் இருதய வால்வுச் செல்களை எடுத்து மனித இருதய வால்வில் பொருத்தி வெற்றி கண்டுள்ளார்கள். இந்த அறுவைச் சிகிச்சை மூலம் இருதய நோயாளியின் வாழ்நாள் நீடிப்பதற்கு நவீன மருத்துவ உலகம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்றும் கூறலாம்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...