Oct 7, 2012

பொருளாதார சீர்திருத்தங்களைத் தொடர்ந்து விரைவில் காங்கிரஸ் சீர்திருத்தம்!


Economic Reforms On Congress Political Reforms Offing அடுத்த சில வாரங்களில் மத்திய அமைச்சரவையில் பெரும் மாற்றம் செய்யப்படலாம் என்று தெரிகிறது. ராகுல் காந்திக்கு முக்கியமான பதவி கிடைக்கலாம். அதே போல ஆந்திரா, மகாராஷ்டிரம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் முதல்வர்களும் மாற்றப்படலாம் என்கிறார்கள்.
கடந்த 3 ஆண்டுகளையும் 2ஜி, நிலக்கரி விவகாரங்களுக்கு பதில் சொல்லி, தற்காப்பு நிலையிலேயே கடந்துவிட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எதிர்க் கட்சிகளுடன் நேரடியான தாக்குதலுக்குத் தயாராகி வருவதாகத் தெரிகிறது.
இதனால் தான் கடந்த இரு ஆண்டுகளாக பிரதமர் மன்மோகன் சிங்கின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு பிரேக் போட்டு வந்த சோனியா,
இப்போது அவருக்கு முழுச் சுதந்திரம் தந்துவிட்டார்.
இதைத் தொடர்ந்து நாட்டின் பொருளாதாரத்தை மூழ்கடித்துக் கொண்டிருக்கும் மானியங்களைக் குறைக்கும் வகையில் டீசல் மீதான மானியத்தைக் குறைத்து அதன் விலையை உயர்த்தவும், சமையல் கேஸ் மீதான மானியத்தைக் கட்டுப்படுத்தவும் களத்தில் குதித்தார் மன்மோகன் சிங்.
நாட்டில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களை மேற்கொள்ளவும் அன்னிய முதலீடுகளே ஒரே வழி என்று கருதும் பிரதமர், இந்த விஷயத்தில் எதிர்க் கட்சிகள்- கூட்டணிக் கட்சிகளுக்குக் கட்டுப்பட்டுக் கிடந்த நிலையில் இருந்து வெளியே வந்து, சில்லறை வணிகத்திலும் விமானத்துறையிலும் அன்னிய முதலீட்டை அனுமதித்துவிட்டார்.
மேலும் வங்கிகளின் கையில் பணம் புரளச் செய்தால் மட்டுமே கடன்கள் மீதான வட்டி அளவு குறையும் என்பதால், ரிசர்வ் வங்கியை விட்டு வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதத்தை (CRR) குறைத்தும் விட்டார்.
இவையெல்லாம் அடுத்தடுத்த நாட்களில் நடந்தன. அமைச்சரவையை விட்டு வெளியேறுவோம் என மம்தா மிரட்டிக் கொண்டிருக்கும்போதே அவரால் எதிர்க்கப்படும் மேலே சொன்ன எல்லா திட்டங்களையும் கொண்டு வந்துவிட்டது மத்திய அரசு.
இத்தோடு நிற்கப் போவதில்லை என்பதை மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் பேச்சும் வெளிப்படுத்துகிறது. டீசல் விலை உயர்வையோ, கேஸ் சிலிண்டர்கள் மீதான கட்டுப்பாட்டையோ வாபஸ் பெற முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்திருக்கும் சிதம்பரம், பொருளாதாரத்தை நிலை நிறுத்தும் நடவடிக்கைகள் தொடரும் என்றும் கூறியிருக்கிறார்.
7 பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள மத்திய அரசின் முதலீடுகளைத் திரும்பப் பெறும் வகையில் அவற்றின் பங்குகளை விற்கவும், தகவல்-ஒலி, ஒளிபரப்புத்துறையில், குறிப்பாக டிடிஎச் சேவையில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்புகள் நாளை வெளியாகலாம்.
மத்திய அரசுக்கு எங்கிருந்து திடீரென இந்தத் தைரியம் வந்தது?.
கூட்டணிக் கட்சிகளுக்கும் எதிர்க் கட்சிகளுக்கும் பதில் சொல்லிச் சொல்லியே பயந்தாங்கோளி அரசியல் நடத்தும் நிலைக்குப் போய்விட்டதை காங்கிரஸ் உணர்ந்து கொண்டதோடு, நெருங்கி வரும் நாடாளுமன்றத் தேர்தல் தான் இதற்குக் காரணம்.
இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆட்சிக் காலம் இருந்தாலும், உண்மையில் அடுத்த ஓராண்டு காலத்தை மட்டுமே மத்திய அரசு உண்மையில் ஆள முடியும். அதற்கு அடுத்த ஆண்டில் தேர்தல் வேலைகள், கூட்டணி பேசுவது போன்ற வேலைகள் ஆரம்பித்துவிடும். அதிலும் கடைசி 6 மாதங்கள் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துவிடும்.
இதனால் மிச்சமிருக்கும் கொஞ்ச காலத்தை நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்கும் வேலையில் ஈடுபட்டால், அதன் பலன்கள் மக்களுக்குக் கிடைக்கும்போது நிலைமை நமக்கு ஆதரவாகத் திரும்பும் என்று கணக்குப் போடுகிறது மத்திய அரசு.
இந்தியாவின் உண்மையான பொருளாதாரம் கிராமங்களில் தான் இருக்கிறது. கடந்த 8 ஆண்டுகளாக மத்திய அரசு அமலாக்கியிருக்கும் ஊரக வளர்ச்சித் திட்டங்கள், ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் போன்றவை கிராமங்களை நிச்சயம் வளமாக்கியிருக்கின்றன.
நாடு சுதந்திரம் அடைந்த 65 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு கிராமங்களில் வாங்கும் திறன் அதிகரித்துள்ளது இதுவே முதல் முறை என்கிறார் பர்ஸ்ட் குளோபல் சர்வதேச அமைப்பின் தலைமை வர்த்தக ஆலோசகர் சங்கர் ஷர்மா. இதனால் தான் நாட்டின் மிகப் பிரபலமான பிராண்டுகள் கிராமங்களை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளன என்கிறார்.
இதை மத்திய அரசும் காங்கிரசின் அரசியல் மூளையும் நன்றாகவே உணர்ந்துள்ளதால் தான் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளனர்.
வால்மார்ட் போன்ற மல்டி பிராண்ட் பெரும் ஸ்டோர்கள் இந்தியாவுக்கு வந்தால், முதலில் பயனடையப் போவது விவசாயிகளும் கிராமங்களும் தான். நம் ஊரில் காலையில் 10 ரூபாய்க்கு விற்கும் தக்காளி மாலையில் 4 ரூபாய்க்குக் கிடைக்கிறது. காரணம், அழுகும் பொருள் என்பதால்.
சில்லறை வணிகத்தில் இந்த பெரும் ஸ்டோர்கள் நுழைந்தால் முதலில் அவர்களது முதலீடு உணவுப் பொருட்களை பதப்படுத்துவதில் தான் இருக்கும். இதனால் விவசாயிகளுக்குத் தான் உண்மையான லாபம் கிடைக்கும்.
மேலும், மொத்தமாக வாங்கி விற்கையில் நுகர்வோருக்கும் பொருட்கள் மிகக் குறைந்த விலைக்குக் கிடைக்கும். மேலும்
உற்பத்தியாளரான விவசாயிக்கும் நுகர்வோரான பொது மக்களுக்கும் இடையில் உள்ள புரோக்கர்கள் காணாமல் போவார்கள். இதனால் இந்தக் கும்பல் தின்னும் பணம் பொருள் மீது விழாது.

இதனால் விவசாயிக்கும் லாபம், மக்களுக்கும் லாபம். இது சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடுகள் வருவதால் ஏற்படும் முக்கிய நன்மை.
ஆக, அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என்ற முடிவை எடுத்த மத்திய அரசு, டீசல் மீதான விலையை உயர்த்துவதால் மாதந்தோறும் மிஞ்சும் ரூ. 36,000 கோடியை வளர்ச்சித் திட்டங்களுக்கு செலவிட முடியும் என்பதால் அதையும் செய்துவிட்டது.
மக்களிடமும் நிறுவனங்களிடமும் பணம் புரண்டால் தான், அவர்கள் செலவு செய்வர், அதைச் செய்தால் தான் உற்பத்தித் துறை செழிக்கும் என்பதால், கடன்கள் மீதான வட்டியைக் குறைத்துள்ளது மத்திய அரசு.
இவையெல்லாமே இப்போது ஷாக் தரும் விஷயங்களாக இருந்தாலும், நாட்டின் எதிர்காலத்தை மனதில் வைத்துப் பார்த்தால் எல்லாம் நன்மைக்கே.
திட்டமிட்டபடி எல்லாம் நடந்தால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இப்போதைய 5.5 சதவீதத்திலிருந்து மேலே போகும். ஒவ்வொரு சதவீத வளர்ச்சியும் கோடிக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு பொருளாதார சீர்திருத்தப் பணிகளில் ஒரு பக்கம் மன்மோகன் சிங்குக்கு சுதந்திரம் தந்துவிட்ட சோனியா காந்தி, அடுத்து தனது கட்சியைப் பலப்படுத்தும் வேலைகளை ஆரம்பித்துள்ளார்.
மன்மோகன் சிங் வெறுமனே நிர்வாகத்தில் மட்டுமே கவனம் செலுத்தும் வகையில், ராகுல் காந்தியை அரசாங்கத்திற்குள் கொண்டு வரவும், அடுத்த பிரதமர் பதவிக்கான வேட்பாளர் என்று முன் நிறுத்தவும் சோனியா திட்டமிட்டுள்ளார்.
இதனால் விரைவிலேயே மத்திய அமைச்சரவையில் மாபெரும் மாற்றங்கள் இருக்கலாம் என்கிறார்கள். ராகுல் காந்திக்கு முக்கியமான துறை தரப்படுவதோடு, சில முக்கிய தலைவர்கள் அமைச்சரவையிலிருந்து தூக்கப்பட்டு அரசியல் பணிக்கு அனுப்பப்பட உள்ளனர்.
அதே போல ஆந்திராவில் முதல்வர் கிரண்குமார் ரெட்டி, ராஜஸ்தானில் அசோக் கெலோட், மகாராஷ்டிரத்தில் பிருத்விராஜ் சவாண் ஆகியோரையும் நீக்கிவிட்டு புதிய முதல்வர்களை நியமிக்கவும் சோனியா முடிவு செய்துள்ளார். இவர்களை வைத்துக் கொண்டு நாடாளுமன்றத் தேர்தல் எதிர்கொள்வது நல்லதல்ல என்ற முடிவுக்கு காங்கிரஸ் வந்துள்ளது.
மேலும் கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலையும் சந்திக்க வேண்டியுள்ளதால் அங்கு காங்கிரஸ் தலைவராக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை நியமிக்கவும் சோனியா முடிவு செய்துள்ளார்.
இந்த மாற்றங்கள் எல்லாமே இந்த மாத இறுதிக்குள் நடக்கும் என்கிறார்கள்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...